யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 31வது வாரம் சனிக்கிழமை
2021-11-09

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா




முதல் வாசகம்

ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம்3;9-11 16-17

9 நாங்கள் கடவுளின் உடன் உழைப்பார்கள். நீங்கள் கடவுள் பண்படுத்தும் தோட்டம். நீங்கள் அவர் எழுப்பும் கட்டடம்.10 கடவுள் எனக்கு அளித்த அருளின்படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும்.11 ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது.16 நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?17 ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது: நீங்களே அக்கோவில்.1

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆற்றின் கால்வாய்கள் ஆண்டவரின் நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.
திருப்பாடல்கள்46: 1--8

1 கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. 2 ஆகையால், நிலவுலகம் நிலை குலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், 3உ எங்களுக்கு அச்சம் என்பதே இல்லை. பல்லவி

4 ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. 5 அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. பல்லவி

7 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். 8 வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

`இக்கோவிலை இடித்து விடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-22

அக்காலத்தில் யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார். அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு, மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், ``இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்'' என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள், ``உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்து விடும்'' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவுகூர்ந்தார்கள். யூதர்கள் அவரைப் பார்த்து, ``இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?'' என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், ``இக்கோவிலை இடித்து விடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்'' என்றார். அப்போது யூதர்கள், ``இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பிவிடுவீரோ?'' என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட போது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

உடல் எனும் கோவில் !

லாத்தரன் பேராலய அர்ப்பணிப்பு நாளாகிய இன்று இயேசு எருசலேம் தேவாலயத்தைத் தூய்மைப்படுத்திய நிகழ்வை நற்செய்தியாக வாசிக்கிறோம். அந்த நிகழ்வின் இறுதியில் நற்செய்தியாளரின் விளக்கவுரையில் இயேசு தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார் என்று குறிப்பிடுவதைக் காண்கிறோம். இன்றைய சிந்தனைக்கு அந்த வரியையே எடுத்துக்கொள்ளலாம். கோவில் என்பது இறைவன் வாழும் இல்லம். மனிதர் கட்டிய கோவிலில் வாழ்கின்ற இறைவன், தாமே கட்டிய கோவிலாகிய மானிட உடல்களிலும் வாழ்கிறார். இயேசுவின் உடல் இறைவனின் திருக்கோவில் என்பதால், அவரைத் தலையாகக் கொண்ட உடலாகிய நம் அனைவரின் உடல்களும் இறைவனின் கோவில்கள்தானே. பவுலடியாரும் நாம் தூய ஆவியின் கோவில்கள் என்று குறிப்பிடுகிறாரே. எனவே, நம்மை, நம் உடல்களை இறைவனின் கோவி;ல்கள் என்ற மதிப்பீட்டில் வளர்வோம். நம்மைப் போன்ற மனிதர்கள் ஒவ்வொருவருமே இறைவன் வாழும் கோவில்கள் என்பதையும் மறக்காமல், ஒவ்வொருவருக்கும் உரிய மாண்பை, மதிப்பை வழங்க முன் வருவோம். உடலுக்;கெதிரான தீமைகள், குற்றங்கள் குறிப்பாக வன்முறை இறைவனுக்கெதிரானது என்பதை மனதில் கொள்வோம். அடிப்பது என்பது மனித உரிமை மீறல், இறைவனின் கோவிலுக்கு எதிரான பாவம் என்பதை உணர்ந்தால், ஆசிரியர்-மாணவர், கணவன்-மனைவி, பணித்தலைவர்-ஊழியர், மற்றும் அண்டை அயலாருக்கிடையே உள்ள உறவில் வன்முறை, அடித்தல், காயப்படுத்துதல் போன்றவை நிச்சயமாக நீங்கிவிடும்.

மன்றாட்டு:

எங்களை உமது கோவிலாகப் படைத்து, எங்களிலே வாழ்வதில் மகிழும் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களின் உடலும், பிறரது உடல்களும் மாண்புக்குரியவை, மதிப்புக்குரியவை என்பதை உணரவும், அந்தக் கோவில்களை வன்முறைக்குட்படுத்தாமல் வாழவும் எங்களுக்கு அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.