யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 32வது வாரம் திங்கட்கிழமை
2021-11-08

புனித மாட்டீன்




முதல் வாசகம்

மண்ணுலகை ஆள்பவர்களே, நீதியின்மேல் அன்பு செலுத்துங்கள்;
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 1: 1-7

மண்ணுலகை ஆள்பவர்களே, நீதியின்மேல் அன்பு செலுத்துங்கள்; நன்மனத்துடன் ஆண்டவரைப் பற்றி நினைந்திடுங்கள்; நேர்மையான உள்ளத்துடன் அவரைத் தேடுங்கள். அவரைச் சோதியாதோர் அவரைக் கண்டடைகின்றனர்; அவரை நம்பினோர்க்கு அவர் தம்மை வெளிப்படுத்துகின்றார். நெறிகெட்ட எண்ணம் மனிதரைக் கடவுளிடமிருந்து பிரித்துவிடும். அவரது ஆற்றல் சோதிக்கப்படும்பொழுது, அது அறிவிலிகளை அடையாளம் காட்டிவிடும். வஞ்சனை நிறைந்த ஆன்மாவில் ஞானம் நுழைவதில்லை; பாவத்திற்கு அடிமையான உடலில் ஞானம் குடிகொள்வதில்லை. நற்பயிற்சி பெற்ற உள்ளம் வஞ்சனையினின்று விலகியோடும்; அறிவற்ற எண்ணங்களை விட்டு அகலும்; அநீதி அணுகுகையில் அது நாணி ஒதுங்கும். ஞானம் மனிதநேயமுள்ள ஆவி; ஆயினும் இறைவனைப் பழிப்போரை அது தண்டியாமல் விடாது. கடவுள் அவர்களுடைய உள்ளுணர்வுகளின் சாட்சி; உள்ளத்தை உள்ளவாறு உற்று நோக்குபவர்; நாவின் சொற்களைக் கேட்பவரும் அவரே. ஆண்டவரின் ஆவி உலகை நிரப்பியுள்ளது; அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அந்த ஆவி ஒவ்வொரு சொல்லையும் அறிகின்றது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என்றும் உள்ள வழியில் என்னை நடத்தும் ஆண்டவரே.
திருப்பாடல்கள் 139: 1-3. 3-6. 7-8. 9-10

1 ஆண்டவரே! நீர் என்னை ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்! 2 நான் அமர்வதையும் எழுவதையும் நீர் அறிந்திருக்கின்றீர்; என் நினைவுகளை எல்லாம் தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர். 3 நான் நடப்பதையும் படுப்பதையும் நீர் அறிந்துள்ளீர். -பல்லவி

3 என் வழிகள் எல்லாம் உமக்குத் தெரிந்தவையே. 4 ஆண்டவரே! என் வாயில் சொல் உருவாகு முன்பே, அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர். 5 எனக்கு முன்னும் பின்னும் என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்; உமது கையால் என்னைப் பற்றிப்பிடிக்கின்றீர். 6 என்னைப் பற்றிய உம் அறிவு எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது; அது உன்னதமானது; என் அறிவுக்கு எட்டாதது. -பல்லவி

7 உமது ஆற்றலை விட்டு நான் எங்கே செல்லக்கூடும்? உமது திருமுன்னிலிருந்து நான் எங்கே தப்பியோட முடியும்? 8 நான் வானத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கே இருக்கின்றீர்! பாதாளத்தில் படுக்கையை அமைத்துக் கொண்டாலும் நீர் அங்கேயும் இருக்கின்றீர்! -பல்லவி

9 நான் கதிரவனின் இடத்திற்கும் பறந்து சென்றாலும் மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும், 10 அங்கேயும் உமது கை என்னை நடத்திச் செல்லும்; உமது வலக்கை என்னைப் பற்றிக்கொள்ளும். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 1-6

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``பாவச் சோதனை வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் ஐயோ! அதற்குக் காரணமாய் இருப்பவருக்குக் கேடு! அவர் இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச்செய்வதை விட அவ்வாறு செய்பவரது கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி அவரைக் கடலில் தள்ளிவிடுவது அவருக்கு நல்லது. எனவே, நீங்கள் எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்து கொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள். ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, `நான் மனம் மாறிவிட்டேன்' என்று சொல்வாரானால் அவரை மன்னித்துவிடுங்கள்.'' திருத்தூதர்கள் ஆண்டவரிடம், ``எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்'' என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: ``கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, `நீ வேரோடே பெயர்ந்து போய்க் கடலில் வேரூன்றி நில்' எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக, வாழ்வோரின் கடவுள்'' (லூக்கா 20:38)

கடவுள் பற்றி இயேசு போதித்த வேளைகளில் எல்லாம் மனிதருக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு பற்றி விளக்கம் தந்தார். கடவுள் என்றால் மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு, மனிதரோடு எவ்விதத் தொடர்பும் இல்லாமல் வாழ்கின்ற ஒரு ''பொருள்'' அல்ல; கடவுள் மனிதரை அன்புசெய்கின்ற தந்தையாக, தாயாக இருக்கின்றார். மனிதருக்கு வாழ்வு அளிப்பதே கடவுளின் நோக்கமேயன்றி அவர்களுக்கு அழிவைக் கொணர்வதல்ல அவரது திட்டம். மனிதருக்கு வாழ்வு தருகின்ற கடவுள் எக்காலத்திலும் உயிர் வாழ்கின்ற கடவுள். எனவே, எத்தலைமுறையைச் சார்ந்த மனிதரும் கடவுளில் வாழ்கின்றனர் எனலாம். சாவு நம்மைக் கடவுளிடமிருந்து பிரிப்பதில்லை; மாறாக, நம்மைக் கடவுளோடு புதிய விதத்தில் இணைக்கிறது. சாவுக்குப் பின் உயிர்த்தெழுதல் உண்டு என்னும் உண்மையை இயேசு உணர்த்தியபோது அதை வெறும் கருத்தளவிலான சிந்தனையாக மட்டுமே வழங்கவில்லை; மாறாக, அவரே தம் சாவுக்குப் பின் உயிர்பெற்றெழுந்தார்; கடவுளோடு எந்நாளும் மகிமையில் புகுந்துவிட்டார். இவ்வாறு நாமும் கடவுளோடு என்றும் இணைந்து வாழவே அழைக்கப்பட்டுள்ளோம்.

உலகத்தில் நிலவுகின்ற உறவுகள் அதே பாணியில் மறுவுலகிலும் இருக்கும் என்பது சரியான கருத்தல்ல எனவும் இயேசு காட்டுகிறார். திருமண உறவும் குழந்தைப் பேறும் இவ்வுலகில் முக்கியமான மனித எதார்த்தங்கள். ஆனால் மறுவுலகில் மனிதர் அனைவரும் கடவுளின் அன்புறவில் புதியதொரு நிலையைப் பெறுவதால் அங்கே திருமணமும் பிள்ளைப் பேறும் இராது என இயேசு சுட்டிக்காட்டுகிறார். உயிர்த்தெழுதல் பற்றி ஒரு கேள்வியை எழுப்பி இயேசு தருகின்ற பதிலைக் கொண்டு அவரிடத்தில் குற்றம் காண முற்பட்ட சதுசேயரின் முகமூடியைக் கிழித்தெறிந்தார் இயேசு. மனித வாழ்வு இம்மண்ணகத்தோடு முடிந்துவிடுவதில்லை; அதே நேரத்தில் மறுவுலக வாழ்வு இம்மண்ணக வாழ்வின் வெறும் தொடர்ச்சியாக இல்லாமல் ஒரு புதிய நிலையில் நம்மை உயர்த்திவிடும். உயிர்வாழ்கின்ற கடவுளோடு இணைந்து நாமும் உயிர்வாழ்வோம் என்பதும் சாவின்மீது இயேசு கொண்ட வெற்றியில் நமக்கும் பங்குண்டு என்பதும் நமக்கு ஆறுதல் தரும் செய்தியே.

மன்றாட்டு:

இறைவா, சாவின் வழி புது வாழ்வு பெற்ற இயேசுவை நாங்கள் எங்கள் வழிகாட்டியாகக் கொண்டு நிலைவாழ்வு பெற அருள்தாரும்.