யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2021-10-17

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 53:10-11,பதிலுரைப்பாடல்: திபா. 33:4-5, 18-20,22,எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம். 4:14-16,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 35-45)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இன்று ஆண்டின் பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு. இந்த ஞாயிறு இறை வழிப்பாட்டிற்கு வந்துள்ள இறைமக்களை நம் அன்பு நாயகன் கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்தி வரவேற்கிறோம். இன்றைய நற்செய்தி பதவி மோகத்தைப் பற்றி எடுத்துரைக்கிறது. எசாயா ஆன்டவரின் துன்புறும் ஊழியரைப் பற்றி எடுத்துரைக்கிறது. எசாயாவின் வார்த்தைகளைக் கொண்டே இயேசு தன் சீடர்களின் தவறான எண்ணங்களை மாற்றினார். இத்தகைய சவால் நிறைந்த கடுமையான வாழ்வை யாரால் வாழமுடியும்? இது சாத்தியமா? என்ற கேள்விக்கு பதிலாக இரண்டாம் வாசகம் அமைந்திருப்பதை காண்கிறோம்.

இயேசு தன் பாடுகளைப் பற்றி மூன்று முறை மாற்கு நற்செய்தியில் எடுத்துரைக்கின்றார். ஆனால் அவரின் சீடர்கள் அதை தவறாக புரிந்துக் கொண்டு அவருக்கு அருகில் யார் இருப்பது என்பதையே விவாதித்து வருகிறார்கள். ஆனால் மனுமகனோ பணிவிடை ஏற்பதற்கு அன்று பணிவிடைப் புரியவே வந்தேன் என்றார். தன்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னைப் போல் பாடுகள் படவேண்டுமென்றும், உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர்கள் உங்கள் தொண்டராய் இருக்கட்டும் என்று தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார். பணிவிடை புரிவது என்பது மற்றவர்களின் சுமைகளைப் பகிர்ந்துகொள்வதிலும், தாழ்ச்சிகளோடு ஆறுதல் சொல்வதிலும் தான் அடங்கியுள்ளது என்பதை நன்கு உணர்வோம். இதைச் செயல்படுத்துவதில் நாம் எதிர்கொள்ளும் எதிர்ப்புகளை நம் ஆண்டவரிடம் ஒப்படைப்போம் . அவரே நம்மை நல்வழிப்படுத்துவார். எனவே இவற்றை உணர்த்தும் இன்றைய திருப்பலி வழிபாட்டில் மன்றாடுவோம்.



முதல் வாசகம்

தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்: எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம். 53:10-11

அந்நாள்களில் ஆண்டவரின் துன்புறும் ஊழியரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்: அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்: எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்: ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்: நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்: அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!.
பதிலுரைப்பாடல்: திபா. 33:4-5, 18-20,22

ஆண்டவரின் வாக்கு நேர்மையானது: அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. அவர் நீதி யையும் நேர்மையையும் விரும்புகின்றார்: அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது.ஆண்டுகளுக்கும் ஈடாக எம்மை மகிழச் செய்யும். பல்லவி:

தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்: அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். பல்லவி:

நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்: அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! பல்லவி:

இரண்டாம் வாசகம்

அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம். 4:14-16

சகோதரர் சகோதரிகளே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல: மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்: எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும்,ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 35-45

அக்காலத்தில் செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், "போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்கள். அவர் அவர்களிடம், "நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்" என்று வேண்டினர். இயேசுவோ அவர்களிடம், "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? நான் பெறும் திருமுழுக்கை உஙகளால் பெற இயலுமா?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "இயலும்" என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, "நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும்" என்று கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், "பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாக தம் உயிரை கொடுப்பதற்கும் வந்தார்" என்று கூறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஞானத்தின் ஊற்றாம் இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமது ஞானத்தின் ஆவியால் நிரப்பப்பெற்று, திருச்சபையின் மக்கள் அனைவரையும் ஞானத்தில் வழி நடத்த தேவையான அருளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உம் பேரன்பால் பூவுலகை நிறைந்துள்ள எம் இறைவா!

சவால்கள் நிறைந்த எம் இல்லற வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு உம் மைந்தனைப்போல பணிகளை செய்திடவும், சிலுவை இன்றி வெற்றி இல்லை என்ற இயேசுவின் மொழிகளை மனதில் பதிவு செய்து, ஆறுதல் தேடுவோருக்கு தோள் கொடுத்து தங்கிடவும் அருள் வரம் பொழிய வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

பணி புரியவே வந்தேன் என்று மொழிந்த இயேசுவே,

இன்றைய நற்செய்திக்காக உமக்கு நன்றி. பல்வேறு விதங்களில் தலைமைப் பொறுப்பை வகிக்கும் நாங்கள், உமது வார்த்தையின்படியே பிறருக்குத் தொண்டாற்றி, அதன் வழியாக எங்கள் தலைமைப் பண்பை செயல்படுத்த எங்களுக்கு உமது ஞானத்தையும். ஆவியின் ஆற்றலையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்பின் இறைவா!

பெரும் தொற்றுநோயால் இன்னலுக்கு உள்ளாகி உடமைகளையும், உறவுகளையும் இழந்துத் தவிக்கும் உலக மக்களைக் கண்நோக்கியரும். அவர்கள் விரைவில் தங்களின் வாழ்வை நலமுடனும் வளமுடனும் எதிர்கொள்ளத் தேவையான அனைத்து வரங்களையும் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்.

நேர்மையின் நாயகனான எம் இறைவா! என் வேண்டுதலை உற்றுக் கேட்பவரே! எம் இறைவா!

தீங்கிழைக்கப்பட்டோர், கைவிடப்பட்டோர், கைம்பெண்கள், புலம்பெயர்ந்து வாழ்வோர், அநாதைகள் ஆகியோருக்காக உம்மை மன்றாடுகிறோம். இவர்களின் வாழ்க்கையில் வசந்தம் மலர்ந்திடவும், உடல் நலத்திலும், பொருள் வளத்திலும் ஏற்றம் பெற்று வாழ அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உமது அன்பையும், இரக்கத்தையும் பெற்று மகிழும் எம் இளைஞர்கள் உமது வார்த்தைக்கு மட்டுமே என்றும் பணிந்து உமது சாட்சிகளாய் வாழ அவர்களுக்கு அருள் தந்து அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உமக்காகக் காத்திருப்போர்க்கு அமைதி அளிக்கும் இறைவா!

உம் திருஅவை இன்று சந்திக்கும் சவால்களையும், கொடுமைகளையும், அதற்கு ஏற்படும் அவபெயர்களிலிருந்தும் காத்தருளும். பொறுமையும், அமைதியும் இறுதியில் வெற்றிப் பெறும் என்ற திடமான நம்பிக்கையை எங்கள் உள்ளங்களில் நிலைபெற, உமது ஞானத்தையும் ஆசீரையும் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்..

துன்பங்களை நீக்குபவராம் இறைவா,

உலகெங்கும் நீதிக்காகவும், அமைதிக்காகவும் ஏங்கும் உமது மக்களின் துன்பங்களை நீக்கி, அவர்கள் விரும்பும் நீதியும், அமைதியும் நிறைந்த உலகை உருவாக்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

1பேதுரு 1: 18 – 25 தூய்மையான உள்ளம்

ஓர் ஆன்மாவின் மீட்பு என்பது விலைமதிக்க முடியாதது. அதனை இந்த உலகத்தின் வெள்ளி, தங்கத்தைக் கொண்டு மீட்க முடியாது. இந்த உலகம் முழுவதையும் கொடுத்தாலும் ஒருவன், அதனை வைத்து தன்னுடைய ஆன்மாவையோ, அல்லது அடுத்தவருடைய ஆன்மாவையோ மீட்க முடியாது. ஏனென்றால், ஆன்மா அழிவில்லாதது. முடிவில்லாதது. அழியக்கூடிய செல்வத்தைக் கொண்டு, நாம் அழிவில்லாத ஆன்மாவை மீட்க முடியாது. மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்று, பேதுரு குறிப்பிடுவது அவர்களது நடத்தை சார்ந்த பொருளில் அல்ல. மாறாக, பழைய ஏற்பாட்டு நிகழ்வுகளிலிருந்து கொடுக்கிறார்.

மோசே அவர்களுக்கு கடவுளின் சட்டங்களைக் கொடுத்தார். அந்த சட்டங்களை அவர்கள் விளக்கங்கள் கொடுத்து, தங்களுக்கு ஏற்புடையதாக்கி, அதனுடைய உண்மையான கருத்தை மறக்கச்செய்து, தங்களுக்கு ஏற்புடையதாக்கிக் கொண்டார்கள். கடவுளுக்கு விரோதமான காரியங்களைச் செய்தார்கள். அதுதான் இங்கு பாவமாக குறிப்பிடப்படுகிறது. ஆனால், அந்த பாவத்தை இயேசு தூய்மையான உள்ளத்தினால் அழித்தொழித்து நமக்கு புது வாழ்வு தந்திருக்கிறார். அந்த தூய்மையான வாழ்விற்கு பல உதாரணங்களை நாம் இயேசுவின் வாழ்க்கையில் பார்க்கலாம். குறிப்பாக, சிலுவையில் உயிர்விடுகிற தருணத்திலும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை மனதார மன்னிக்கிறார். இது இயேசுவின் தூய்மையான உள்ளத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

அத்தகைய தூய்மையான உள்ளம் நமதாக வேண்டும். அத்தகைய தூய்மையான உள்ளத்தோடு நாம் மற்றவர்களுக்கு அன்பு காட்ட வேண்டும். அவர்களை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் அன்பை உணர்ந்து கொள்ள நாம் வழிகாட்டிகளாய் அமைய வேண்டும். அந்த உன்னதமான பணியை நாம் அனைவரும் சிறப்பாக செய்வோம்.

மன்றாட்டு:

இறைவா, அழிந்துபோகும் செல்வத்தை நம்பி வாழாமல் உம் முன்னிலையில் செல்வம் கொண்டவர்களாக மாறிட எங்களுக்கு அருள்தாரும்.