யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 27வது வாரம் சனிக்கிழமை
2021-10-09




முதல் வாசகம்

அரிவாளை எடுத்து அறுங்கள். பயிர் முற்றிவிட்டது.
இறைவாக்கினர் யோவேல் நூலிலிருந்து வாசகம் 3: 12-21

ஆண்டவர் கூறுவது: வேற்றினத்தார் அனைவரும் கிளர்ந்தெழட்டும்; கிளர்ந்தெழுந்து யோசபாத்து பள்ளத்தாக்கிற்கு வந்து சேரட்டும்; ஏனெனில் சுற்றுப்புறத்து வேற்றினத்தார் அனைவர்க்கும் தீர்ப்பு வழங்க நான் அங்கே அமர்ந்திருப்பேன். அரிவாளை எடுத்து அறுங்கள், பயிர் முற்றிவிட்டது; திராட்சைப் பழங்களை மிதித்துப் பிழியுங்கள். ஏனெனில் ஆலை நிரம்பித் தொட்டிகள் பொங்கி வழிகின்றன; அவர்கள் செய்த கொடுமை மிகப் பெரிது. திரள் திரளாய் மக்கட் கூட்டம் தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில் திரண்டிருக்கிறது; ஏனெனில், ஆண்டவரின் நாள் அப்பள்ளத்தாக்கை நெருங்கி வந்துவிட்டது. கதிரவனும் நிலவும் இருளடைகின்றன; வீண்மீன்கள் ஒளியை இழக்கின்றன. சீயோனிலிருந்து ஆண்டவர் கர்ச்சனை செய்கின்றார்; எருசலேமிலிருந்து அவர் முழங்குகின்றார்; விண்ணும் மண்ணும் அதிர்கின்றன. ஆயினும் ஆண்டவரே தம் மக்களுக்குப் புகலிடம்; இஸ்ரயேலருக்கு அரணும் அவரே. நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்றும், நான் என் திருமலையாகிய சீயோனில் குடியிருக்கிறேன் என்றும் அப்பொழுது நீங்கள் அறிவீர்கள்; எருசலேம் தூயதாய் இருக்கும்; அன்னியர் இனிமேல் அதைக் கடந்து செல்லமாட்டார்கள். அந்நாளில் மலைகள் இனிய, புது இரசத்தைப் பொழியும்; குன்றுகளிலிருந்து பால் வழிந்தோடும்; யூதாவின் நீரோடைகளிலெல்லாம் தண்ணீர் நிரம்பி வழியும்; ஆண்டவரின் இல்லத்திலிருந்து நீரூற்று ஒன்று கிளம்பும்; அது சித்திமிலுள்ள ஓடைகளில் பாய்ந்தோடும். எகிப்து பாழ்நிலமாகும்; ஏதோம் பாழடைந்து பாலைநிலம் ஆகும்; ஏனெனில், அவர்கள் யூதாவின் மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கினார்கள்; அவர்களின் நாட்டிலேயே குற்றமற்ற இரத்தத்தைச் சிந்தினார்கள். யூதாவோ என்றென்றும் மக்கள் குடியிருக்கும் இடமாயிருக்கும்; எருசலேமில் எல்லாத் தலைமுறைக்கும் மக்கள் குடியிருப்பார்கள். சிந்தப்பட்ட இரத்தத்திற்கு நான் பழிவாங்கவே செய்வேன்; குற்றவாளிகளைத் தண்டியாமல் விடேன்; ஆண்டவராகிய நான் சீயோனில் குடியிருப்பேன்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்.
திருப்பாடல்கள் 97: 1-2. 5-6. 11-12

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! 2 மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன; நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம். பல்லவி

5 ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன. 6 வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன; அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன. பல்லவி

11 நேர்மையாளருக்கென ஒளியும் நேரிய உள்ளத்தோர்க்கென மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டுள்ளன. 12 நேர்மையாளர்களே! ஆண்டவரில் களிகூருங்கள்; அவரது தூய்மையை நினைந்து அவரைப் புகழுங்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28

அக்காலத்தில் இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், ``உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்'' என்று குரலெழுப்பிக் கூறினார். அவரோ, ``இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்' என்றார்'' (லூக்கா 11:28)

கடவுள் தாம் அன்புசெய்கின்ற உலகத்தோடு நெருங்கி உறவாட விழைகின்றார். எனவேதான் அவர் தம் மகன் இயேசுவை இவ்வுலகத்திற்கு அனுப்பி அவர் வழியாக மக்களுக்கு நற்செய்தி வழங்கினார். கடவுளின் வார்த்தையாகிய இயேசு கடவுளின் வார்த்தையை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார். அந்த வார்த்தை வழியாக நாம் நம் வாழ்வின் பொருளை உணர்ந்துகொள்கிறோம். ஆனால் வார்த்தையைக் கேட்டுவிட்டு அதன்படி நாம் செயல்படாவிட்டால் நமக்கு யாதொரு பயனும் இல்லை. லூக்கா நற்செய்தியில் ''இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்போர் பேறுபெற்றோர்'' என்னும் கருத்து பல இடங்களில் காணப்படுகிறது. ''எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர்'' என இயேசுவின் தாய் மரியா ஏற்கெனவே பறைசாற்றியிருந்தார் (காண்க: லூக் 1:48). கடவுள் அறிவித்த சொற்படியே நடக்கட்டும் எனத் தாழ்ச்சியோடு தன்னைக் கடவுளிடம் ஒப்படைத்திருந்தார் (லூக் 1:38). கடவுள் அறிவித்த செய்தி தன் வாழ்வில் நிறைவேறும் என நம்பியிருந்தார் (லூக் 1:45). இயேசுவும், ''இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் சகோதரர்களும் ஆவார்கள்'' எனக் கூறியிருந்தார் (லூக் 8:21). கடவுளின் வார்த்தையைத் தன் வயிற்றில் சுமந்த மரியா உண்மையிலேயே பேறுபெற்றவர் என்னும் வாழ்த்து ஏற்கெனவே வழங்கப்பட்டிருந்தது (காண்க: லூக் 1:42).

மரியா இயேசுவைப் பெற்றெடுத்ததால் நாம் அவருக்குச் சிறப்பான வணக்கம் செலுத்துவது பொருத்தமே. இச்சிறப்பின் அடிப்படையாக இருப்பவர் இயேசுவே என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. அவர் கடவுளுக்கு நிகராக இருந்தபோதிலும் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதையே தம் வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். தந்தையிடமிருந்து தமக்கு அளிக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவதையே தம் குறிக்கோளாக ஏற்றிருந்தார். ஆக, இயேசுவைத் தம் வயிற்றில் கருத்தாங்கி, பாலூட்டி அவரை வளர்த்து ஆளாக்கிய மரியா கடவுளின் பார்வையில் சிறப்பு மிக்கவர் ஆனார் என அறிந்து நாம் மகிழ்கின்றோம். இறைவார்த்தையைக் கேட்பதோடு நின்றுவிடாமல் அதை நாம் கடைப்பிடித்து ஒழுகவும் வேண்டும். அப்போது அந்த வார்த்தையின் வல்லமை நம் வாழ்வில் துலங்கி மிளிரும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் பேசுகின்ற உம்மை நாங்கள் திறந்த மனத்தோடு ஏற்று, உம் வார்த்தையின்படி வாழ்ந்திட அருள்தாரும்.