யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 26வது வாரம் புதன்கிழமை
2021-10-02

தூய காவல் தூதர்கள்




முதல் வாசகம்

உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 23: 20-23

ஆண்டவர் கூறுவது: வழியில் உன்னைப் பாதுகாக்கவும், நான் ஏற்பாடு செய்துள்ள இடத்தில் உன்னைக் கொண்டு சேர்க்கவும், இதோ நான் உனக்கு முன் ஒரு தூதரை அனுப்புகிறேன். அவர்முன் எச்சரிக்கையாயிரு; அவர் சொற்கேட்டு நட; அவரை எதிர்ப்பவனாய் இராதே. உன் குற்றங்களை அவர் பொறுத்துக் கொள்ளார். ஏனெனில், என் பெயர் அவரில் உள்ளது. நீ அவர் சொல் கேட்டு நடந்தால், நான் சொல்வது யாவற்றையும் கேட்டுச் செயல்பட்டால், நான் உன் எதிரிகளுக்கு எதிரியும், உன் பகைவர்க்குப் பகைவனும் ஆவேன். ஏனெனில், என் தூதர் உனக்கு முன் செல்வார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

`நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்
திருப்பாடல்கள்;91 : 1-2. 3-4. 5-6. 10-11

1 உன்னதரின் பாதுகாப்பில் வாழ்பவர், எல்லாம் வல்லவரின் நிழலில் தங்கியிருப்பவர். 2 ஆண்டவரை நோக்கி, `நீரே என் புகலிடம்; என் அரண்; நான் நம்பியிருக்கும் இறைவன்' என்று உரைப்பார். பல்லவி

3 ஏனெனில், ஆண்டவர் உம்மை வேடரின் கண்ணியினின்றும் கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார். 4 அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்; அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும். பல்லவி

5 இரவின் திகிலுக்கும் பகலில் பாய்ந்துவரும் அம்புக்கும் நீர் அஞ்சமாட்டீர். 6 இருளில் உலவும் கொள்ளைநோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர். பல்லவி

10 ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது. 11 நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம்;

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5, 10

அக்காலத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, ``விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?'' என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: ``நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். இச்சிறியோருள் ஒருவரையும் நீங்கள் இழிவாகக் கருத வேண்டாம்; கவனமாயிருங்கள்! இவர்களுடைய வான தூதர்கள் என் விண்ணகத் தந்தையின் திருமுன் எப்பொழுதும் இருக்கின்றார்கள் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

சிறியோரையும் ஏற்றுக்கொள்ளுங்கள்... !

இன்றைய காலத்தின் ஓர் அறிகுறி தலைமைப் போட்டி. கட்சிகளில், நிறுவனங்களில், பள்ளிகளில், ஏன் மறைமாவட்டங்களிலும்கூட தலைமைப் பொறுப்புகளுக்கும், பதவிகளுக்கும் பலர் போட்டி போடுகின்றனர். தாங்களே தலைமைப் பொறுப்புகளுக்குத் தகுதியானவர்கள் என்று எழுதுகின்றனர், ஆள் திரட்டுகின்றனர். தங்களுக்குத் தலைமைப் பொறுப்பு கிடைக்காவிட்டால், இன்னொரு தலைவரின்கீழ் பணி செய்ய மாட்டோம். அவரையும் பணி செய்ய விடமாட்டோம் என்று சூளுரைக்கும் பலரையும் இன்று பார்க்கிறோம். திருச்சபைக்குள்கூட இந்த நோய் நுழைந்துவிட்டது. ஆனால், இயேசுவின் பார்வை வேறானதாக இருக்கிறது. இயேசு ஒரு குழந்தையை எடுத்து, தம் அருகே நிறுத்தி, இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார் என்று கூறுகிறார். இதைக் கேட்ட அவருடைய சீடர்கள் நிச்சயம் வியப்படைந்திருப்பார்கள். விவிலிய வரலாற்றில் சிறியோரை இறைவன் உயர்த்தி தலைமைப் பொறுப்பை வழங்கிய நிகழ்வுகள் ஏராளம். எனவே, யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளவும், அவர்களின் தலைமையின் கீழ்த் தாராளமாகப் பணிபுரியவும் நாம் தயாராக இருக்க வேண்டும். நம்மைவிடத் தகுதியில் குறைந்தவர்கள் என்று நாம் கருதுபவர்களைக்கூடத் தலைவர்களாக ஏற்றுப் பணிபுரிய நாம் முன் வரும்போதுதான் நாம் உண்மையில் இயேசுவின் சீடர்கள். சிறியோரைத் தலைவராக ஏற்கும்போது, நாம் இயேசுவையே தலைவராக ஏற்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்.

மன்றாட்டு:

தாழ்ந்தோரை உயர்த்தும் இறiவா, உம்மைப் போற்றுகிறேன். தாழ்நிலை நின்ற அடியார்கள் பலரையும் நீர் உயர்த்தி, தலைமைப் பொறுப்பில் அமர்த்திப் பெருமைப்படுத்தியிருக்கிறீர். அதற்காக உம்மைப் புகழ்கிறேன். சிறியோர் எவரையும் உம் பெயரால் தலைவர்களாக ஏற்கின்ற நல்ல மனதை எனக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.