யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 26வது வாரம் செவ்வாய்க்கிழமை
2021-10-01

குழந்தை இயேசுவின் புனித தெரேசா




முதல் வாசகம்

ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 66: 10-14

எருசலேமின் மேல் அன்பு கொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள். அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப் பெருக்கில் நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள். ஆண்டவர் கூறுவது இதுவே: ஆறுபோல் நிறைவாழ்வு பாய்ந்தோடச் செய்வேன்; பெருக்கெடுத்த நீரோடைபோல் வேற்றினத்தாரின் செல்வம் விரைந்து வரச் செய்வேன்; நீங்கள் பால் பருகுவீர்கள்; மார்பில் அணைத்துச் சுமக்கப்படுவீர்கள்; மடியில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள். இதை நீங்கள் காண்பீர்கள், உங்கள் இதயம் மகிழ்ச்சி கொள்ளும், உங்கள் எலும்புகள் பசும்புல் போல் வளரும்; ஆண்டவர் தம் ஆற்றலைத் தம் ஊழியருக்குக் காட்டுவார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

3 இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு
திருப்பாடல்கள் 131: 1. 2. 3

1 ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை; என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை. பல்லவி

2 மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாய் உள்ளது. பல்லவி

3 இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 1-5

அக்காலத்தில் சீடர்கள் இயேசுவை அணுகி, ``விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?'' என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: ``நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். இத்தகைய சிறு பிள்ளை ஒன்றை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

சிறியோரையும் ஏற்றுக்கொள்ளுங்கள்... !

இன்றைய காலத்தின் ஓர் அறிகுறி தலைமைப் போட்டி. கட்சிகளில், நிறுவனங்களில், பள்ளிகளில், ஏன் மறைமாவட்டங்களிலும்கூட தலைமைப் பொறுப்புகளுக்கும், பதவிகளுக்கும் பலர் போட்டி போடுகின்றனர். தாங்களே தலைமைப் பொறுப்புகளுக்குத் தகுதியானவர்கள் என்று எழுதுகின்றனர், ஆள் திரட்டுகின்றனர். தங்களுக்குத் தலைமைப் பொறுப்பு கிடைக்காவிட்டால், இன்னொரு தலைவரின்கீழ் பணி செய்ய மாட்டோம். அவரையும் பணி செய்ய விடமாட்டோம் என்று சூளுரைக்கும் பலரையும் இன்று பார்க்கிறோம். திருச்சபைக்குள்கூட இந்த நோய் நுழைந்துவிட்டது. ஆனால், இயேசுவின் பார்வை வேறானதாக இருக்கிறது. இயேசு ஒரு குழந்தையை எடுத்து, தம் அருகே நிறுத்தி, இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார் என்று கூறுகிறார். இதைக் கேட்ட அவருடைய சீடர்கள் நிச்சயம் வியப்படைந்திருப்பார்கள். விவிலிய வரலாற்றில் சிறியோரை இறைவன் உயர்த்தி தலைமைப் பொறுப்பை வழங்கிய நிகழ்வுகள் ஏராளம். எனவே, யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ளவும், அவர்களின் தலைமையின் கீழ்த் தாராளமாகப் பணிபுரியவும் நாம் தயாராக இருக்க வேண்டும். நம்மைவிடத் தகுதியில் குறைந்தவர்கள் என்று நாம் கருதுபவர்களைக்கூடத் தலைவர்களாக ஏற்றுப் பணிபுரிய நாம் முன் வரும்போதுதான் நாம் உண்மையில் இயேசுவின் சீடர்கள். சிறியோரைத் தலைவராக ஏற்கும்போது, நாம் இயேசுவையே தலைவராக ஏற்கிறோம் என்பதை மறக்க வேண்டாம்.

மன்றாட்டு:

தாழ்ந்தோரை உயர்த்தும் இறiவா, உம்மைப் போற்றுகிறேன். தாழ்நிலை நின்ற அடியார்கள் பலரையும் நீர் உயர்த்தி, தலைமைப் பொறுப்பில் அமர்த்திப் பெருமைப்படுத்தியிருக்கிறீர். அதற்காக உம்மைப் புகழ்கிறேன். சிறியோர் எவரையும் உம் பெயரால் தலைவர்களாக ஏற்கின்ற நல்ல மனதை எனக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.