யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 25வது வாரம் வெள்ளிக்கிழமை
2021-09-24

புனித வின்சன் டிபோல்




முதல் வாசகம்

`இன்னும் சிறிது காலத்தில் நான் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும் பாலை நிலத்தையும் நடுக்கமுறச் செய்வேன்
இறைவாக்கினர் ஆகாய் நூலிலிருந்து வாசகம் 2: 1-9

தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஏழாம் மாதத்தின் இருபத்தோராம் நாளன்று, ஆண்டவரின் வாக்கு இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக அருளப்பட்டது: ``யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமாகிய செருபாபேலிடமும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவிடமும் மக்களுள் எஞ்சியிருப்போர் அனைவரிடமும் இப்பொழுது நீ போய் இவ்வாறு சொல்: `இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைக் கண்டவர் எவராகிலும் உங்களிடையே இன்னும் இருக்கின்றனரா? இப்போது இது உங்களுக்கு எக்கோலத்தில் தோன்றுகிறது? இது உங்கள் பார்வையில் ஒன்றும் இல்லாதது போல் தோன்றுகிறது அல்லவா? ஆயினும் செருபாபேலே! மன உறுதியோடு இரு,' என்கிறார் ஆண்டவர். `தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவே! மன உறுதியோடு இரு; நாட்டிலுள்ள அனைத்து மக்களே, ஊக்கம் கொள்ளுங்கள்; பணியைத் தொடருங்கள்; ஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன்' என்கிறார் படைகளின் ஆண்டவர்.'' ``நீங்கள் எகிப்தினின்று புறப்பட்டு வந்த போது உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதியின்படி, உங்கள் நடுவில் எனது ஆவி நிலைகொண்டிருக்கிறது; அஞ்சாதீர்கள். ஏனெனில் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: `இன்னும் சிறிது காலத்தில் நான் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும் பாலை நிலத்தையும் நடுக்கமுறச் செய்வேன். வேற்றினத்தார் அனைவரையும் நிலைகுலையச் செய்வேன். அப்போது வேற்றினத்தார் அனைவரின் விருப்பத்திற்குரியவைகளும் இங்கு வந்து சேரும்; இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்புவேன்' என்கிறார் படைகளின் ஆண்டவர். ` வெள்ளி எனக்கு உரியது, பொன்னும் எனக்கு உரியது', என்கிறார் படைகளின் ஆண்டவர். `இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியை விடப் பின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும்', என்கிறார் படைகளின் ஆண்டவர். `இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்' என்கிறார் படைகளின் ஆண்டவர்.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே, என் நேர்மையை நிலைநாட்டும்;
திருப்பாடல்கள் 43: 1. 2. 3. 4

1 கடவுளே, என் நேர்மையை நிலைநாட்டும்; இறைப் பற்றில்லா இனத்தோடு என் வழக்குக்காக வாதிடும்; வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த மனிதர் கையினின்று என்னை விடுவித்தருளும். - பல்லவி

2 கடவுளே! நீரே என் ஆற்றல்; ஏன் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துயருடன் நடமாட வேண்டும்? - பல்லவி

3 உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும். அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். - பல்லவி

4 அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். - பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?''

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22

அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம் ``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று அவர் கேட்டார். அவர்கள் மறு மொழியாக, ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, ``நீர் கடவுளின் மெசியா'' என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். மேலும் இயேசு, ``மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்'' என்று சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''ஏரோது இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான்'' (லூக்கா 9:9)

இங்கே வருகின்ற ஏரோது வரலாற்றில் ''பெரிய ஏரோது'' என அழைக்கப்படுகின்ற மன்னன் அல்ல. மாறாக, அந்த மன்னனின் ஒரு மகனாகிய ''அந்திப்பா'' என்பவன். இவன் ஒரு ''குறுநில மன்னன்'' என லூக்கா குறிப்பிடுகிறார். பெரிய ஏரோதின் சாவுக்குப் பின் அவனுடைய அரசு பிளவுண்டது. அதில் கலிலேயா மற்றும் பெரேயா அடங்கிய பகுதி அந்திப்பாவுக்கு அளிக்கப்பட்டது. கலிலேயாவில்தான் இயேசுவின் பணி பெரும்பாலும் நிகழ்ந்தது. அந்திப்பா தன் ஒன்றுவிட்ட சகோதரனான பிலிப்புவின் மனைவியைத் தன் மனைவியாக்கிக் கொண்டதைத் திருமுழுக்கு யோவான் கண்டித்தார். எனவே, அவன் அவரைக் கொன்றுபோட்டான். இயேசு மக்களுக்குக் கடவுளின் பெயரால் போதிக்கிறார் எனவும் புதுமைகள் பல நிகழ்த்துகிறார் எனவும் கேள்விப்பட்ட அந்திப்பா ஏரோது ''இயேசுவைக் காண வாய்ப்புத் தேடிக் கொண்டிருந்தான்'' (லூக் 9:9).

இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்ட பல மக்கள் அவரைக் ''காண'' விரும்பினார்கள். ஏரோதுவும் அவரைக் ''காண'' விரும்பினான். ஆனால் ஏரோது நேர்மையான உள்ளத்தோடு இயேசுவைக் காண விரும்பவில்லை. ஏற்கெனவே திருமுழுக்கு யோவானைக் கொன்றுபோட்ட ஏரோது இப்போது இயேசுவையும் ''காண'' விரும்பினான் என்றால் அது நல்ல எண்ணத்தோடு நிகழ்ந்ததல்ல என நாம் அறிந்துகொள்ளலாம். இயேசுவும் திருமுழுக்கு யோவானைப் போல ''கடவுளின் ஆட்சி'' பற்றிப் பேசினார். மக்கள் பலர் அவரை நாடிச் சென்றனர். ஆக, இயேசுவும் தனக்கு ஓர் எதிரியாக மாறிவிடுவாரோ என ஏரோது ஐயமுற்றதற்கு ஆதாரம் இருந்தது. எனவே, ஏரோது இயேசுவையும் ஒழித்துக் கட்டலாமா என சிந்தித்திருக்க வேண்டும். இன்று வாழ்கின்ற நாம் இயேசுவைத் தேடுகின்றோமா? அவரைக் காண விரும்புகின்றோமா? எதற்காக அவரைக் காண விரும்புகிறோம்? ஏற்கெனவே இயேசுவிடம் நம்பிக்கை கொண்டுள்ள மக்கள் இயேசுவைக் ''காண'' விரும்புவதும் அவரைத் ''தேடுவதும்'' ஒரே ஒரு நோக்கத்திற்காகவே இருக்கும். அதாவது அவர்கள் இயேசுவைப் பற்றி இன்னும் அதிகமாக அறிந்து, அவரை இன்னும் அதிக ஆர்வத்தோடு பின்செல்ல விரும்புகிறார்கள். ஆனால் நேர்மையற்ற உள்ளத்தோடும் குறைகாண்கின்ற மன நிலையோடும் இயேசுவைத் ''தேடிய'' ஏரோதுவின் மன நிலை இன்றைய உலகில் நிலவத்தான் செய்கிறது. இயேசுவின் போதனைக்கு ஏற்ப வாழ்கின்ற மக்கள் பலர் உலகின்; பல பகுதிகளில் துன்பங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அரசியல் ஆதாயம் தேடுகின்ற சில சந்தர்ப்ப வாதிகள் இந்திய நாட்டில் கிறிஸ்தவ நம்பிக்கை வளர்வதைக் கண்டு காழ்ப்புணர்ச்சி கொண்டு, வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதை நாமறிவோம். இயேசுவின் போதனையை நாம் மன உறுதியோடு கடைப்பிடித்து வாழ்வதே இந்த எதிர்ப்புகளுக்கு நாம் அளிக்கும் பதிலாக அமையும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களை அன்பு செய்கின்ற உம்மையும் உம் திருமகனையும் தேடுவதில் நாங்கள் ஒருநாளும் ஓய்ந்துவிடாதிருக்க அருள்தாரும்.