யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 24வது வாரம் திங்கட்கிழமை
2021-09-13

புனிதர்கள் கொர்னேலியு சிப்பிரியான்




முதல் வாசகம்

எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்.
திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 1-8

அன்பிற்குரியவரே, அனைவருக்காகவும் மன்றாடுங்கள்; இறைவனிடம் வேண்டுங்கள்; பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே. இறைப் பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள். இதுவே நம் மீட்பராகிய கடவுளின் முன் சிறந்ததும் ஏற்புடையதுமாகும். எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார். ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்; குறித்த காலத்தில் அதற்குச் சான்று பகர்ந்தார். இதற்காகவே நான் நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் விசுவாசத்தையும் உண்மையையும் பிற இனத்தாருக்குக் கற்பிக்கும் போதகனாகவும் ஏற்படுத்தப்பட்டேன். நான் சொல்வது உண்மையே; பொய் அல்ல. எனவே, ஆண்கள் சினமும் சொற்பூசலும் இன்றி எவ்விடத்திலும் தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்யுமாறு விரும்புகின்றேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தாமே தம் மக்களின் வலிமை
திருப்பாடல்கள்28;2,7-9

2 நான் உம்மிடம் உதவி வேண்டுகையில், உமது திருத்தூயகத்தை நோக்கி நான் கை உயர்த்தி வேண்டுகையில், பதில் அளித்தருளும். பல்லவி

7 ஆண்டவர் என் வலிமை, என் கேடயம்; அவரை என் உள்ளம் நம்புகின்றது; நான் உதவி பெற்றேன்; ஆகையால் என் உள்ளம் களிகூர்கின்றது; நான் இன்னிசை பாடி அவருக்கு நன்றி கூறுவேன். 8ய ஆண்டவர் தாமே தம் மக்களின் வலிமை. பல்லவி

8b தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு அவரே பாதுகாப்பான அரண். 9 ஆண்டவரே, உம் மக்களுக்கு விடுதலை அளித்தருளும்; உமது உரிமைச் சொத்தான அவர்களுக்கு ஆசி வழங்கும்; அவர்களுக்கு ஆயராக இருந்து என்றென்றும்அவர்களைத் தாங்கிக் கொள்ளும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

அவர் நம் மக்கள்மீது அன்புள்ளவர்;

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-10

அக்காலத்தில் இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றார். அங்கே நூற்றுவர் தலைவர் ஒருவரின் பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தறுவாயிலிருந்தார். அவர்மீது தலைவர் மதிப்பு வைத்திருந்தார். அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு யூதரின் மூப்பர்களை அவரிடம் அனுப்பித் தம் பணியாளரைக் காப்பாற்ற வருமாறு வேண்டினார். அவர்கள் இயேசுவிடம் வந்து, ``நீர் இவ்வுதவி செய்வதற்கு அவர் தகுதியுள்ளவரே. அவர் நம் மக்கள்மீது அன்புள்ளவர்; எங்களுக்கு ஒரு தொழுகைக்கூடமும் கட்டித் தந்திருக்கிறார்'' என்று சொல்லி அவரை ஆர்வமாய் அழைத்தார்கள். இயேசு அவர்களோடு சென்றார். வீட்டுக்குச் சற்றுத் தொலையில் வந்துகொண்டிருந்தபோதே நூற்றுவர் தலைவர் தம் நண்பர்கள் சிலரை அனுப்பிப் பின்வருமாறு கூறச் சொன்னார்: ``ஐயா, உமக்குத் தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னைத் தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும்; என் ஊழியர் நலமடைவார். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் ஒருவரிடம் `செல்க' என்றால் அவர் செல்கிறார்; வேறு ஒருவரிடம் `வருக' என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து `இதைச் செய்க' என்றால் அவர் செய்கிறார்.'' இவற்றைக் கேட்ட இயேசு அவரைக் குறித்து வியப்புற்றார். தம்மைப் பின் தொடரும் மக்கள் கூட்டத்தினரைத் திரும்பிப் பார்த்து, ``இஸ்ரயேலரிடத்திலும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்தபோது அப்பணியாளர் நலமுற்றிருப்பதைக் கண்டார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

திருவிருந்தில் பிளவுகள் !

திருவிருந்தின்போது எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்னும் பவுலடியாரின் அறிவுரை அன்றைய கொரிந்து நகரக் கிறித்தவர்களுக்கு எவ்வளவு பொருந்தியதோ, அதே அளவு இன்றைக்கும் பொருத்தமானதாக, பொருளுள்ளதாக இருக்கிறது என்பது ஒரு வேதனையான உண்மை. அன்றைய நாள்களில் ஒற்றுமையின் விருந்தான திருவிருந்தில் பிளவுபட்ட மனதினராய், தகுதியற்ற உள்ளத்தினராய் கலந்துகொண்டனர். இன்றும்கூட சாதி உணர்வு, பகை உணர்வு, ஏற்றத்தாழ்வுகள் அத்தனை இருந்தும், எந்தவித உறுத்தல் உணர்வும் இன்றி ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் திருவிருந்தில் பங்குபெற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். கடவுளின் திருச்சபையை இழிவுபடுத்தி, இல்லாதோரை இழிவுபடுத்தும் செயலில் இன்றும் நாம் ஈடுபட்டுவருகிறோம். இதை நாம் உணர்கிறோமா? பவுலின் கடினமான சாட்டையடிச் சொற்கள் நம்மைச் சுடட்டும். நற்கருணை அருள்சாதனத்தில் நமக்கு உண்மையான நம்பிக்கை இருந்தால், நமது தகுதியின்மையை ஏற்றுக்கொண்டு மன்னிப்பு கோர வேண்டும். திருவிருந்தின் முரண்பாடுகளைக் களைய வேண்டும்.

மன்றாட்டு:

வானக உணவாக உம்மையே எங்களுக்குத் தந்த இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது ஒற்றுமையின் விருந்தில் பிளவுபட்ட உள்ளத்தினராய், சாதி, சமத்துவமற்ற உணர்வுகளோடு கலந்துகொண்டதற்காக வருந்துகிறோம். எங்களை மாற்றும். எங்களின் தகுதியின்மையைப் போக்கும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.