யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 22வது வாரம் புதன்கிழமை
2021-09-01




முதல் வாசகம்

! உங்களுக்காக நாங்கள் வேண்டும்பொழுதெல்லாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-8

கிறிஸ்துவோடு இணைந்து நம்பிக்கை கொண்டவர்களாய் வாழும் சகோதரர் சகோதரிகளாகிய கொலோசை நகர இறைமக்களுக்குக் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாய் இருக்கும் பவுலும் சகோதரர் திமொத்தேயுவும் எழுதுவது: நம் தந்தையாம் கடவுளிடமிருந்து உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! உங்களுக்காக நாங்கள் வேண்டும்பொழுதெல்லாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோம். கிறிஸ்து இயேசுவின்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை பற்றியும் இறைமக்கள் அனைவரிடமும் செலுத்தும் அன்பு பற்றியும் நாங்கள் கேள்வியுற்றோம். இவை இரண்டும் விண்ணகத்தில் உங்களுக்கென வைக்கப்பட்டிருக்கும் நன்மைகளை எதிர் நோக்குவதால் விளைந்தவை. நீங்கள் முன்பு கேட்ட உண்மையின் நற்செய்தி வழியாக அந்த எதிர்நோக்குப் பற்றி அறிந்துகொண்டீர்கள். உலகம் முழுவதும் பரவிப் பயனளித்துவரும் அந்நற்செய்தி உங்களை வந்தடைந்தது. கடவுளின் அருளைப் பற்றிக் கேட்டறிந்து அதன் உண்மையை நீங்கள் உணர்ந்து கொண்டீர்கள். அந்நாள் முதல் உங்களிடையே அது பெருகிப் பயனளித்து வருகிறது. எம் அன்பார்ந்த உடன் ஊழியர் எப்பப்பிராவிடமிருந்து அதை நீங்கள் கற்றுக்கொண்டீர்கள். உங்களுக்காக உழைக்கும் அவர் கிறிஸ்துவின் உண்மையான திருத்தொண்டர். தூய ஆவி உங்களுக்கு அருளிய அன்பைக் குறித்து அவர்தாம் எங்களிடம் எடுத்துரைத்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

கடவுளே! நீர் இவ்வாறு எனக்குச் செய்துள்ளதால், உமக்கு என்றென்றும் நன்றி கூறுவேன்;
திருப்பாடல்கள் 52: 8. 9

8 நானோ, கடவுளின் இல்லத்தில் பச்சை ஒலிவ மரக்கன்றுபோல் இருக்கின்றேன்; கடவுளின் பேரன்பில் எப்போதும் நிலையாக நம்பிக்கை வைத்திருக்கின்றேன். -பல்லவி

9 கடவுளே! நீர் இவ்வாறு எனக்குச் செய்துள்ளதால், உமக்கு என்றென்றும் நன்றி கூறுவேன்; உம் அன்பரின் முன்னிலையில், உம் பெயர்மீது நம்பிக்கை கொள்வேன்; இதுவே நன்று. -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

``நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்;

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 38-44

அக்காலத்தில் இயேசு தொழுகைக்கூடத்தை விட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள். இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள, அது அவரை விட்டு நீங்கிற்று. உடனே அவர் எழுந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தார். கதிரவன் மறையும் நேரத்தில், எல்லாரும் தங்களிடையே பற்பல பிணிகளால் நலம் குன்றி இருந்தோரை அவரிடம் கூட்டி வந்தார்கள். அவர் ஒவ்வொருவர் மேலும் தம் கைகளை வைத்து அவர்களைக் குணமாக்கினார். பேய்களும், ``நீர் இறைமகன்'' என்று கத்திக்கொண்டே பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று பேய்கள் அறிந்திருந்தபடியால், அவர் அவற்றை அதட்டி, பேசவிடாமல் தடுத்தார். பொழுது விடியும் வேளையில் இயேசு தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடிச் சென்றனர்; அவரிடம் வந்து சேர்ந்ததும் தங்களை விட்டுப் போகாதவாறு அவரைத் தடுத்து நிறுத்தப் பார்த்தனர். அவரோ அவர்களிடம், ``நான் மற்ற ஊர்களிலும் இறையாட்சியைப் பற்றி நற்செய்தி அறிவிக்க வேண்டும்; இதற்காகவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்'' என்று சொன்னார். பின்பு அவர் யூதேயாவிலுள்ள தொழுகைக்கூடங்களில் நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

கடவுளின் உடன் உழைப்பாளர்கள் !

இறை ஊழியம் செய்யும் எவரும் பெருமை பாராட்டாதபடி இன்றைய வாசகத்தில் பவுலடியார் தெளிவாகப் போதிக்கிறார். நாம் ஒவ்வொருவரும் அவரவர் கடமைகளைச் செய்கிறோம். ஆனால், இறுதிப் பணியும், வெற்றியும் இறைவன் ஒருவருக்கே. அதை நல்லதொரு உவமானம் வழியாகப் பவுல் எடுத்துரைக்கிறார்: “நான் நட்டேன். அப்பொல்லோ நீர் பாய்ச்சினார். கடவுளே விளையச் செய்தார். நடுகிறவருக்கும் பெருமை இல்லை. நீர் பாய்ச்சுபவருக்கும் பெருமை இல்லை. விளையச் செய்யும் கடவுளுக்கே பெருமை”. ஆம், நாம் என்ன பணிகள் ஆற்றினாலும், அதன் இறுதி பலனைத் தருபவர் இறைவனே. “ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில், அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்” (திபா 127:1) என்னும் வரிகள் எவ்வளவு உண்மை. குழந்தை வளர்ப்பது, குடும்பத்தை உருவாக்குவதுரூhநடடip; என குடும்பப் பணிகள் செய்பவர்கள்கூட இதை மனதில் கொள்ளவேண்டும். நாம் அனைவரும் இறைவனின் உடன் உழைப்பாளர்கள். கடவுளின் பணியில் பங்காளர்கள். நமது கடமைகளை நாம் நன்கு ஆற்றுவோம். பலனை இறைவன் தருவார். நமக்குள் வீண் போட்டி, பொறாமைகள், சச்சரவுகள் தேவையில்லை. அனைவரும் இறைவன் தந்த பணியையே செய்கிறோம்.

மன்றாட்டு:

உழைப்பின் நாயகனான இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களையும் உமது உடன் உழைப்பாளர்களாக நீர் அழைத்திருப்பதற்காக நன்றி கூறுகிறோம். நீர் எங்களிடம் ஒப்படைத்திருக்கும் பணிகளை, கடமைகளை நன்கு முடிக்க எங்களுக்கு ஆற்றல் தாரும். தந்தருள வேண்டுகிறோம். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.