யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2021-08-22

(இன்றைய வாசகங்கள்: யோசுவா நூலிலிருந்து வாசகம். 24:1-2,15-18,பதிலுரைப்பாடல் திபா: 34: 1-2, 15-22,திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 5:21–32,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 60-69)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

ஆண்டவருக்குரியவர்களே,

பொதுக்காலத்தின் இருபத்தொன்றாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இன்றைய திருவழிபாடு நிலைவாழ்வு தரும் இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு, உண்மை கடவுளுக்கு பணிந்து வாழவும், பணிவிடை செய்யவும் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது சொந்த விருப்பத்திற்கு ஏற்ப வாழாமல், தூய ஆவியாரின் வழிநடத்துதலின்படி கடவுளின் மாட்சியை வெளிப்படுத்துபவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையின் உறுப்பினர்களாகிய நாம் அனைவரும், அவரோடு ஒன்றித்த வாழ்வு வாழ்ந்து நிலைவாழ்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். பேதுருவைப் போல ஆண்டவர் இயேசுவின் நிலைவாழ்வு தரும் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டவர்க ளாய் வாழும் வரம்வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள்:
யோசுவா நூலிலிருந்து வாசகம். 24:1-2,15-18

செக்கேமில் யோசுவா இஸ்ரயேலின் எல்லாக் குலங்களையும் ஒன்று கூட்டினார். இஸ்ரயேலின் முதியோர்களையும் தலைவர்களையும் நடுவர்களையும் அதிகாரிகளையும் அழைத்தார். அவர்கள் கடவுள் முன்னிலையில் ஒன்றுகூடினர். யோசுவா எல்லா மக்களுக்கும் கூறியது: "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: ஆண்டவருக்கு ஊழியம் புரிவது தீயது என்று உங்கள் பார்வைக்குத் தோன்றினால், உங்கள் மூதாதையர் நதிக்கு அப்பால் பணிந்து வந்த தெய்வங்களுக்கோ, உங்கள் நாட்டில் உங்களுடன் வாழும் எமோரியரின் தெய்வங்களுக்கோ இவர்களுள் யாருக்கு ஊழியம் செய்வீர்கள் என்பதை நீங்களே இப்போது முடிவு செய்யுங்கள். ஆனால் நானும் என் வீட்டாரும் ஆண்டவருக்கே ஊழியம் செய்வோம். மக்கள் மறுமொழியாக, "ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக! ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் எங்களையும் எங்கள் மூதாதையரையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்தார். எங்கள் கண்முன் இப்பெரிய அடையாளங்களைச் செய்தார். நாங்கள் நடந்து வந்த எல்லா வழிகளிலும் நாங்கள் கடந்து வந்த மக்களிடையிலும் எங்களைக் காத்தருளினார். நாங்களும் ஆண்டவருக்கு ஊழியம் புரிவோம். ஏனெனில் அவரே எங்கள் கடவுள் " என்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.
பதிலுரைப்பாடல் திபா: 34: 1-2, 15-22

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்: அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்: எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். பல்லவி: ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன: அவர் செவிகள் அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன. ஆண்டவரின் முகமோ தீமை செய்வோர்க்கு எதிராக இருக்கின்றது: அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். பல்லவி:

நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்: அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்: நைந்த நெஞ்சத் தாரை அவர் காப்பாற்றுகின்றார். பல்லவி:

நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல: அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்: அவற்றுள் ஒன்றும் முறிபடாது. பல்லவி:

தீயோரைத் தீவினையே சாகடிக்கும்: நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர். ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்: அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். பல்லவி:

இரண்டாம் வாசகம்

திருமணத்தில்; அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்தும்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம். 5:21–32

கிறிஸ்துவுக்கு அஞ்சி ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். திருமணமான பெண்களே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல உங்கள் கணவருக்கு நீங்கள் பணிந்திருங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோலக் கணவர் மனைவிக்குத் தலையாய் இருக்கிறார். கிறிஸ்துவே திருச்சபையாகிய உடலின் மீட்பர். திருச்சபை கிறிஸ்துவுக்குப் பணிந்திருப்பதுபோல, மனைவியரும் தங்கள் கணவருக்கு அனைத்திலும் பணிந்திருக்க வேண்டும். திருமணமான ஆண்களே, கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தியது போல நீங்களும் உங்கள் மனைவியரிடம் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் கிறிஸ்து திருச்சபைமீது அன்பு செலுத்தி, அதற்காகத் தம்மையே ஒப்புவித்தார். வார்த்தையாலும் நீரினாலும் அதனைக் கழுவித் தூயதாக்குமாறு இவ்வாறு செய்தார். அத்திருச்சபை, கறை திரையோ, வேறு எக்குறையோ இல்லாமல் தூய்மையும் மாசற்றதுமாய் மாட்சியுடன் தம்முன் விளங்குமாறு இப்படிச் செய்தார். அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின்மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவராவார். தம்முடைய உடலை எவரும் வெறுப்பதில்லை. அதைப் பேணி வளர்க்கிறார். அவ்வாறே, கிறிஸ்துவும் திருச்சபையைப் பேணி வளர்த்து வருகிறார். ஏனெனில் நாம் அவரது உடலின் உறுப்புகள். "இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டு தம் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்: இருவரும் ஒரே உடலாயிருப்பர் " என மறைநூல் கூறுகிறது. இதில் அடங்கியுள்ள மறைபொருள் பெரிது. இது திருச்சபைக்கும் கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் கொள்கிறேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன. நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 60-69

அவருடைய சீடர் பலர் இதைக் கேட்டு, "இதை ஏற்றுக் கொள்வது மிகக் கடினம்: இப்பேச்சை இன்னும் கேட்டுக்கொண்டிருக்க முடியுமா? " என்று பேசிக் கொண்டனர். இதுபற்றித் தம் சீடர் முணுமுணுப்பதை இயேசு உணர்ந்து அவர்களிடம், "நீங்கள் நம்புவதற்கு இது தடையாய் இருக்கிறதா? அப்படியானால் மானிடமகன் தாம் முன்பு இருந்த இடத்திற்கு ஏறிச் செல்வதை நீங்கள் கண்டால் அது உங்களுக்கு எப்படி இருக்கும்? வாழ்வு தருவது தூய ஆவியே: ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை " என்றார். நம்பாதோர் யார், யார் என்பதும் தம்மைக் காட்டிக்கொடுக்கவிருப்பவன் யார் என்பதும் இயேசுவுக்குத் தொடக்கத்திலிருந்தே தெரிந்திருந்தது. "மேலும் அவர், "இதன் காரணமாகத்தான் 'என் தந்தை அருள் கூர்ந்தால் அன்றி யாரும் என்னிடம் வர இயலாது"" என்று உங்களுக்குக் கூறினேன் " என்றார்." அன்றே இயேசுவின் சீடருள் பலர் அவரை விட்டு விலகினர். அன்று முதல் அவர்கள் அவரோடு சேர்ந்து செல்லவில்லை. இயேசு பன்னிரு சீடரிடம், "நீங்களும் போய் விட நினைக்கிறீர்களா? " என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன. நீரே கடவுளுக்கு அர்ப்பணமானவர் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அதை நம்புகிறோம் " என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வாழ்வு தருபவராம் இறைவா,

உம்மிடம் கொண்டுள்ள நம்பிக்கையால் நாளும் வளர்ந்து வருகின்ற உமது திருச்சபையினை வழிநடத்தி வரும் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனை வரையும், உம் மீதான நம்பிக்கையில் உறுதிபடுத்திக் காத்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உண்மையின் உறைவிடமாம் இறைவா,

உலகிற்கு நிலைவாழ்வு அளிக்கும் உமது திருமகனின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டவர்களாய் வாழ்ந்து, உலகெங்கும் உமது நற்செய்தியைப் பறைசாற்றும் தூதுவர்களாக விளங்கும் வல்லமையை கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் அளித்திட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

பரிவுள்ளவராம் இறைவா

மக்கள் அனைவரும் உண்மை கடவுளாகிய உமது மேன்மையை உணரவும், பொய்மையின் இருளிலிருந்து விலகி உண்மையின் ஒளியாகிய உம்மைத் தேடி வரவும் தேவையான அருளுதவிகளை வழங்கிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்பின் அரசராம் இறைவா,

தீராத நோய்கள், கடன் தொல்லைகள், மன வேதனைகள், பிரச்சனைகள் போன்றவற்றில் சிக்கித் தவிப்போர் அனைவரும், நம்பிக்கையோடு உமது உதவியை நாடவும், உம் இரக்கத்தால் அவற்றில் இருந்து விடுதலை பெற்று, வாழ்கின்ற உண்மை கடவுள் நீரே என்பதை அறிக்கையிடவும் உதவிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

காலங்களைக் கடந்த எம் இறைவா!

வாழ்வின் முக்கிய முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் இளையோர்களை இப்போது உம் திருபாதத்திற்குக் கொணர்ந்துள்ளோம். யோசுவாவைப் போல, பேதுருவைப் போல இறைவனை நம்பி, இறைவனைச் சார்ந்துத் தம் வாழ்வின் முடிவுகள் நிலைவாழ்விற்கு வழி வகுத்திட வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்

வாழ்வின் ஊற்றாம் இறைவா,

இச்சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டுத் தனிமையில் வாடும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், பிள்ளைகளால் விரட்டப்பட்ட பெற்றோர்கள்! நல்ல உடல்நலனையும், உள்ள அமைதியையும், பாதுகாப்பையும், அன்பையும் பெற்று மகிழ்ச்சியுடன் தங்கள் இறுதிநாட்கள் வரை வாழ இறைவா உம்மை இறைஞ்சுகிறோம்

குணமளிக்கும் மருத்துவரே இறைவா,

உலகெங்கும் புரிந்துகொள்தல், ஏற்றுக்கொள்தல், விட்டுக்கொடுத்தல், அன்புசெய்தல், அரவணைத்தல், பரிவுகாட்டுதல், நீதியை நிலைநாட்டுதல், பிறரை மதித்தல், உண்மைத் தேடுதல், அமைதி ஏற்படுத்துதல் போன்ற நன்மைகளுக்கு எதிரான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் குணப்படுத்த வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு பன்னிரு சீடரிடம், 'நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?' என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, 'ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன...' என்றார்'' (யோவான் 6:68)

இயேசுவின் போதனை அவர்தம் சீடர்களின் கருத்துக்களையும் பொதுமக்கள் சிந்தனையையும் புரட்டிப்போடுவதாக அமைந்த நேரங்கள் இருந்தன. மக்களின் பொதுவான சிந்தனை ஒரு போக்கில் இருக்கவே, இயேசுவின் போதனை அவர்களுக்கு ஒரு பெரிய சவாலாக அமைந்ததுண்டு. தம்மையே மக்களுக்கு உணவாக அளிக்கப்போவதாக இயேசு கூறிய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள மக்கள் தயங்கினார்கள் என்பதை நாம் அறிகிறோம். ஏன், இயேசுவோடு கூடியிருந்து அவரோடு நெருங்கிப் பழகிய அவருடைய சீடர்கள் கூட இயேசு தம் உடலையும் இரத்தத்தையும் அவர்கள் உண்ணவும் பருகவும் வேண்டும் என்று கூறியதை ஏற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டினார்கள். அப்போது பல சீடர்கள் இயேசுவிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டார்கள். அவருடைய போதனை அவர்களுக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை. இப்பின்னணியில்தான் இயேசு தம் நெருங்கிய நண்பர்களாக இருந்த பன்னிரு திருத்தூதர்களையும் நோக்கி ''நீங்களும் போய்விட நினைக்கிறீர்களா?'' என்று கேட்கிறார். இக்கேள்வியில் ஒருவித வேதனை தெரிவது நமக்குப் புரிகிறது. அதாவது. இயேசுவோடு நெருங்கிப் பழகிய பன்னிரு திருத்தூதர்களும் அவருடைய அன்புக்குத் தனிப்பட்ட சொந்தக்காரர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு இயேசு தம் போதனைகளின் உள் கருத்தைப் பலதடவைகளில் விளக்கியதுண்டு. அவர்களைத் தேர்ந்தெடுத்து தம் பணியைத் தொடர்வதற்கான பொறுப்பை இயேசு கொடுத்திருந்தார். இவ்வாறு இயேசுவுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் கூட அவரைக் கைவிட்டுவிட்டால் அதைப்போலப் பெரும் ஏமாற்றம் யாதுண்டு என்னும் எண்ணம் இயேசுவில் உள்ளத்தில் கவலையை உருவாக்கியிருக்க வேண்டும்.

எனவே இயேசு கேட்ட கேள்விக்குப் பேதுரு பதிலளிக்கின்றார். அவர் அளித்த பதில் இயேசுவிடத்தில் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. ''ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன...'' என்று பேதுரு அளித்த பதில் மொழி நம் பதில் மொழியாக மாறிட வேண்டும். நாமும் இயேசுவிடமிருந்து ''வாழ்வுதரும் வார்த்தைகளை'' பெற்றுள்ளோம். ஏன், இயேசுவே ''வாழ்வுதரும் கடவுளின் வார்த்தையாக'' நம்மிடையே வந்து பிறந்தார்; அவருடைய சொற்களும், செயல்களும் நமக்குக் கடவுளின் அன்பை வெளிப்படுத்தியுள்ளன; இயேசுவின் வாழ்வும் சாவும் உயிர்த்தெழுதலும் நம்மைக் கடவுளோடு ஒப்புரவாக்கியுள்ளன. இவ்வாறு இயேசு நமக்கு நிலைவாழ்வில் பங்களித்துள்ளார். இத்தகைய அரும் பேற்றினைப் பெற்றுக் கொண்ட நாம் வேறு யாரைத் தேடிச் செல்ல முடியும்? நம் வாழ்வின் ஆழ்ந்த வேட்கையை நிறைவேற்றுபவர் இயேசு. நம் இதயத்திலிருந்து எழுகின்ற தாகத்தைத் தணிக்கின்றவர் அவர். இவ்வாறு இயேசு நம் வாழ்க்கையை நிறைவுசெய்வதால் அவரிடமே நாம் மீண்டும் மீண்டும் செல்ல வேண்டும். அவரிடமிருந்தே நாம் கடவுளின் சக்தியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இயேசுவே கடவுளின் அருளை நம் இதயத்தில் பொழிந்து நம் வாழ்வின் வேட்கையைத் தணிப்பார்.

மன்றாட்டு:

இறைவா, நீரே எங்கள் ஆன்ம வேட்கையைத் தணிக்கின்ற உணவாக வந்தருளும்.