யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 19வது வாரம் புதன்கிழமை
2021-08-11

புனித மாக்ஸ்மிலன் மேரி கோல்பே




முதல் வாசகம்

. உன் கண்களால் நீ அதைப் பார்க்கும்படி செய்துவிட்டேன். ஆனால் நீ அங்கு போகமாட்டாய்".
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம். 34;1-12

1 அதன்பின், மோசே மோவாபுச் சமவெளியிலிருந்து எரிகோவுக்குக் கிழக்கே நெபோ மலையில் உள்ள பிஸ்காவின் உச்சிக்கு ஏறிச் சென்றார். ஆண்டவர் அவருக்குத் தாண் வரையில் உள்ள கிலயாது நாடு முழுவதையும் காட்டினார். 2 மேலும் நப்தலி முழுவதையும் எப்ராயிம் நிலப்பகுதியையும், மனாசே நிலப்பகுதியையும் யூதாவின் நிலப்பகுதி முழுவதையும், மேற்கே மத்தியதரைக் கடல் வரையிலும் காட்டினார்; 3 மற்றும் நெகேபையும் பேரீச்சை மாநகராகிய எரிகோ முதல் சோவார் வரையிலும் உள்ள நிலப்பரப்பையும் காட்டினார். 4 அப்போது ஆண்டவர் மோசேக்கு உரைத்தது; "நான் உன் வழிமரபினருக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு ஆகியோருக்கு ஆணையிட்டுக் கூறிய நிலம் இதுவே. உன் கண்களால் நீ அதைப் பார்க்கும்படி செய்துவிட்டேன். ஆனால் நீ அங்கு போகமாட்டாய்". 5 எனவே, ஆண்டவர் கூறியபடியே, அவர்தம் ஊழியர் மோசே மோவாபு நாட்டில் இறந்தார். 6 மோவாபு நாட்டில் பெத்பகோருக்கு எதிரே உள்ள பள்ளத்தாக்கில் அவர் அவரை அடக்கம் செய்தார். ஆனால் இன்றுவரை எந்த மனிதருக்கும் அவரது கல்லறை இருக்குமிடம் தெரியாது. 7 மோசே இறக்கும் போது அவருக்கு வயது நூற்றிருபது. அவரது கண்கள் மங்கினதுமில்லை; அவரது வலிமை குறைந்ததுமில்லை. 8 மோவாபுச் சமவெளியில் இஸ்ரயேல் மக்கள் மோசேக்காக முப்பது நாள்கள் துக்கம் கொண்டாடினர். மோசேக்காக இஸ்ரயேல் மக்கள் அழுது துக்கம் கொண்டாடின நாள்கள் நிறைவுற்றன. 9 நூனின் மகனாகிய யோசுவாவின் மேல் மோசே தம் கைகளை வைத்ததால், அவர் ஞானத்தின் ஆவியால் நிரப்பப் பெற்றிருந்தார். இஸ்ரயேல் மக்கள் யோசுவாவுக்குச் செவிகொடுத்து, மோசேக்கு ஆண்டவர் கட்டளையிட்டபடி நடந்தார்கள். 10 ஆண்டவர் நேருக்குநேர் சந்திக்க மோசேயைப்போல், இறைவாக்கினர் வேறெவரும் இஸ்ரயேலில் இதுகாறும் எழுந்ததில்லை. 11 ஏனெனில். எகிப்து நாட்டில், பார்வோனுக்கும், அவன் அலுவலருக்கும், அவன் நாடு முழுவதற்கும் அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்யும்படி ஆண்டவர் மோசேயை அனுப்பினார். 12 இஸ்ரயேலர் அனைவரின் கண்கள் காணுமாறு அவர் ஆற்றிய அனைத்து ஆற்றல்மிகு செயல்களும் அச்சுறுத்தும் மாபெரும் செயல்களுமே இதற்குச் சான்றாகும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!
திருப்பாடல்கள் 66;1-5 8 16-17

1 அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்!2 அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.பல்லவி

3 கடவுளை நோக்கி 'உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை; உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக உம் எதிரிகள் உமது முன்னலையில் கூனிக் குறுகுவர்;பல்லவி

4 அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்' என்று சொல்லுங்கள். (சேலா)பல்லவி

5 வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவைபல்லவி

. 8 மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள்..பல்லவி

16 கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்.17 அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது.பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18;15-20

5 ' உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்.16 இல்லையென்றால் ' இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தால் அனைத்தும் உறுதி செய்யப்படும் ' என்னும் மறைநூல் மொழிக்கு ஏற்ப உங்களோடு ஒன்றிரண்டு பேரைக் கூட்டிக் கொண்டு போங்கள்.17 அவர்களுக்கும் செவிசாய்க்காவிடில் திருச்சபையிடம் கூறுங்கள். திருச்சபைக்கும் செவிசாய்க்காவிடில் அவர் உங்களுக்கு வேற்று இனத்தவர் போலவும் வரிதண்டுபவர் போலவும் இருக்கட்டும்.18 மண்ணுலகில் நீங்கள் தடைசெய்பவை அனைத்தும் விண்ணுலகிலும் தடைசெய்யப்படும்; மண்ணுலகில் நீங்கள் அனுமதிப்பவை அனைத்தும் விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.19 உங்களுள் இருவர் மண்ணுலகில் தாங்கள் வேண்டும் எதைக் குறித்தும் மனமொத்திருந்தால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தை அதை அவர்களுக்கு அருள்வார்.20 ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். '

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள்'' (மத்தேயு 18:15)

கிறிஸ்து வழங்கிய அன்புக் கட்டளைக்கு இரு பக்கங்கள் உண்டு. ஒன்று, நாம் கடவுளை அன்புசெய்வது, மற்றொன்று நாம் பிறர் மட்டில் அன்புகாட்டுவது. இந்த இரு பக்கங்களும் ஒரே அன்புக் கட்டளையின் இணைபிரியா அம்சங்கள். ஆனால், பிறரை அன்புசெய்ய வேண்டும் என்னும் கட்டளையை நடைமுறையில் கடைப்பிடிப்பது எப்படி? அன்பின் வடிவங்கள் பல. அவற்றுள் ஒன்றுதான் பிறர் குற்றம் செய்யும்போது அவர்களைத் திருத்துவதற்காக நாம் எடுக்கும் முயற்சி. பிறரிடம் குற்றம் காண்பதையே தங்கள் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொள்வோர் சிலர் உண்டு. இவர்கள் தங்களுடைய குறைகளைப் பற்றிக் கவலைப்படாமல் பிறரைத் திருத்துவதிலேயே கருத்தாயிருப்பார்கள். இது இயேசுவின் அணுகுமுறை அல்ல. நம்மிடம் காணப்படுகின்ற குறைகளை நாம் களைந்துவிட்டு, அதன் பின்னர் பிறரிடம் உள்ள குற்றங்களைச் சுட்டிக்காட்டுவதே முறை. ஆனால், குற்றம் காண்பதிலும் பல வகைகள் உண்டு. பிறரைக் குறைகூறுவதற்கென்றே குற்றம் காண்பது உண்மையான அன்பு அல்ல. மாறாக, பிறர் நல்வழிக்குத் திரும்ப வேண்டும் என்னும் நல்லெண்ணத்தோடு பிறருடைய குற்றங்களைத் திருத்துவதற்கு நாம் முயன்றால் அதுவே பிறரன்பின் சிறந்த வெளிப்பாடாக அமையும்.

பிறரைத் திருத்த நாம் முனையும்போது முதல்முதலில் அவர்களோடு தனித்துப் பேசி அக்குறையைச் சரிப்படுத்த வேண்டும் என்பது இயேசு வழங்குகின்ற வழிமுறை. இயேசு இவ்வாறு ஏன் கூறுகிறார் என்றொரு கேள்வியை நாம் கேட்கலாம். இயேசுவின் பார்வையில் எந்த ஒரு மனிதரும் தம்மைக் குற்றமற்றவர் எனக் கூறிட இயலாது. கடவுளின் முன்னிலையில் நாம் அனைவருமே குறையுள்ளவர்கள்தாம். கடவுளின் இரக்கமும் மன்னிப்பும் நம் அனைவருக்கும் தேவையானதே. அப்படியிருக்க, நம் சகோதரர் சகோதரிகளிடம் மட்டும் குற்றம் இருப்பதாக எண்ணி நாம் செயல்படுவதற்கு மாறாக, நமக்குக் கடவுளின் மன்னிப்பு அருளப்படுவதுபோல பிறரும் அதே அன்பு அனுபவத்தை நம் செயல்கள் வழியாகப் பெற்றிட நாம் வழிவகுக்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம்மிடமிருந்து நாங்கள் பெறுகின்ற மன்னிப்பு அனுபவத்தால் ஊக்கம் பெற்று எங்களை அடுத்திருப்போரையும் அன்போடு நெறிப்படுத்த எங்களுக்கு அருள்தாரும்.