யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2021-07-11

(இன்றைய வாசகங்கள்: இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம். 7: 12-15,பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்:,திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய் திருமுகத்திலிருந்து வாசகம். 1: 3-14,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-13)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இயேசுவின் அன்பில் நிறைவாழ்வைப் பெற அன்புடன் திருப்பலி வழிபாட்டில் பங்கேற்கும் அன்பின் சொந்தங்கள் அனைவருக்கும் பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறு திருப்பலியை கொண்டாட உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

அழைக்கப்பெற்றவர்களே, இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் அனைவரும், அவரது பணிக்காக அனுப்பப்பட்டிருப்பதை இன்றைய திருவழிபாடு நமக்கு நினைவூட்டுகிறது. இயேசுவை அறியாதவர்களிடம், அவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் கடமை உண்டு என்பதை உணர அழைக்கப்படுகிறோம். இயேசுவிடம் பிறரைக் கொண்டு சேர்க்கும் வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு.
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம். 7: 12-15

பின்பு அமட்சியா ஆமோசைப் பார்த்து, "காட்சி காண்பவனே, இங்கிருந்து போய்விடு: யூதாவின் நாட்டுக்கு ஓடிவிடு: அங்கே போய் இறைவாக்கு உரைத்து, உன் பிழைப்பைத் தேடிக்கொள். பெத்தேலில் இனி ஒருபோதும் இறைவாக்கு உரைக்காதே: ஏனெனில், இது அரசின் புனித இடம், அரசுக்குரிய இல்லம் " என்று சொன்னான். ஆமோஸ் அதற்கு மறுமொழியாக அமட்சியாவைப் பார்த்துக் கூறினார்: "நான் இறைவாக்கினன் இல்லை: இறைவாக்கினர் குழுவில் உறுப்பினனும் இல்லை: நான் ஆடு மாடு மேய்ப்பவன், காட்டு அத்திமரத் தோட்டக்காரன். ஆடுகள் ஓட்டிக் கொண்டபோன என்னை ஆண்டவர் தேர்ந்தெடுத்து, "என் மக்களாகிய இஸ்ரயேலிடம் சென்று, இறைவாக்கு உரைத்திடு " என்று அனுப்பினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பதிலுரைப்பாடல்: திபா. 85: 8-13
பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்:

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்: தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்: அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி: நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். பல்லவி

பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்: நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். மண்ணினின்று உண்மை முளைத்தெழும்: விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

நல்லதையே ஆண்டவர் அருள்வார்: நல்விளைவை நம்நாடு நல்கும். நீதி அவர்முன் செல்லும்: அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி

இரண்டாம் வாசகம்

உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய் திருமுகத்திலிருந்து வாசகம். 1: 3-14

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி! அவர் விண்ணகம் சார்ந்த, ஆவிக்குரிய ஆசி அனைத்தையும் கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார். நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார். அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள அன்பினால் முன்குறித்துவைத்தார். இதுவே அவரது விருப்பம்: இதுவே அவரது திருவுளம். இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால் அவரது புகழைப் பாடுகிறோம். கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்: இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம். அந்த அருளை அவர் நம்மில் பெருகச்செய்து, அனைத்து ஞானத்தையும் அறிவுத்திறனையும் தந்துள்ளார். அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை நமக்குத் தெரியப்படுத்தியுள்ளார். இது கிறிஸ்து வழியாகக் கடவுள் விரும்பிச் செய்த தீர்மானம். கால நிறைவில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின்; தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள். கடவுள் தமது திருவுளத்தின் திட்டத்தின்படி அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். அவரது தீர்மானத்தால் நாம் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்து வழியாய் அவரது உரிமைப் பேற்றுக்கு உரியவரானோம். இவ்வாறு கிறிஸ்துவின்மேல் முதலில் நம்பிக்கை வைத்த நாங்கள் கடவுளுடைய மாட்சியைப் புகழ்ந்து பாட வேண்டுமென அவர் விரும்பினார். நீங்களும், உங்களுக்கு மீட்பளிக்கும் நற்செய்தியாகிய உண்மையின் வார்த்தையைக் கேட்டு, அவர்மீது நம்பிக்கை கொண்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியால் அவருக்குள் முத்திரையிடப்பட்டீர்கள். அந்தத் தூய ஆவியே நாம் மீட்படைந்து உரிமைப்பேறு பெறுவோம் என்பதை உறுதிப்படுத்தும் அடையாளமாக இருக்கிறது. இவ்வாறு கடவுளது மாட்சியின் புகழ் விளங்கும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று; நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக!. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 7-13

அப்பொழுது அவர் பன்னிருவரையுயம் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார். மேலும், "பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்: அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும் " என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். மேலும் அவர், "நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும் " என்று அவர்களுக்குக் கூறினார்: அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்: பல பேய்களை ஓட்டினார்கள்: உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

பணியாற்ற அழைப்பவராம் இறைவா,

திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனை வரும் உமக்கு உகந்த பணியாளர்களாக விளங்கவும், திருச்சபையின் மக்கள் அனைவரையும் உமது பணி செய்பவர்களாக உருமாற்றவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

தலைவராக பணிப்பவராம் இறைவா,

இந்த உலகின் ஒவ்வொரு நாட்டிலும் தலைமைப் பணியாற்றும் ஒவ்வொருவரையும் உமது அன்பினால் நிறைத்து, உமக்கு உகந்தவர்களாய் இறையரசைக் கட்டியெழுப்பும் தெளிந்த மனதை அவர்களில் உருவாக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்பின் இயேசுவே,

என்னையும் ஓர் இறைவாக்கினராக நீர் அழைத்திருக்கின்றீர் என்பதே எனக்கு வியப்பாகவும், மலைப்பாகவும் இருக்கிறது. ஆயினும், உம் அழைப்பை ஏற்கிறேன். நன்றி கூறுகிறேன். என் வாழ்வும், பணிகளும் என் இறைவாக்காக அமையட்டும். உலகைப் பற்றிக்கொள்ளாமல், உம்மையே பற்றி வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஒப்பற்ற நாயகனே எம் இறைவா!

இன்றைய நவீன உலகில் பணம், பொருள், ஆடம்பரம் என்ற உலகக் காரியங்களில் நாங்கள் எங்களையே அடிமையாக்கிக் கொள்ளாதவாறு, “கிறிஸ்துவே எனக்கு ஒப்பற்றச் செல்வம். அதுவே எனது ஆதாயம்” என்னும் திருதூதர் பவுலின் வார்த்தைகளை வாழ்வாக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

காலங்களைக் கடந்த எம் இறைவா!

எம் நாட்டில் உள்ள இளையோர் தங்கள் இளமைக் காலங்களில் உம் தூய ஆவியின் துணையை நாடி ஞானத்தைப் பெற்றுத் தங்கள் சொல்லாலும், செயலாலும் கிறிஸ்துவின் சாட்சிகளாகத் திகழத் தேவையான அருள் வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இரக்கமுள்ள எம் இறைவா!

புலம்பெயந்து துன்புரும் எல்லாநாட்டு மக்களையும் கண்நோக்கியருளும். அவர்களுக்கு அடைக்கலம் தரும் நல்ல உள்ளத்தையும், மனிதநேயத்தையும் தந்து, அம்மக்களை ஆதரிக்க உலகநாட்டு அரசியல் தலைவர்கள் முன்வரவும், வாழ்வும், வளமும், ஏற்றமும் பெற்றிட தேவையான அருள் வரங்களை அருளுமாறு உம்மை மன்றாடுகிறோம்.

நிலை வாழ்வு அளித்திடும் எம் இறைவா!

உம் குடும்பங்களில் கிறிஸ்துவில் மரித்த விசுவாசிகள் மற்றும் தொற்றுநோயால் மரித்த அனைவரும் நித்திய இளைப்பாற்றி அடையவும், உம் புனிதர்களில் திருக்கூட்டத்தில் அவர்களை இணைத்திடவும் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''அப்பொழுது இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார்'' (மாற்கு 6:7)

இயேசுவின் பணியைத் தொடர்வது அவருடைய சீடர்களின் கடமை. இயேசு எந்த உண்மையைப் பறைசாற்றினாரோ அதே உண்மையை வருங்காலத் தலைமுறையினரும் அறிந்து, கடவுளிடமும் அவர் அனுப்பிய திருமகனிடமும் நம்பிக்கை கொள்ளும் விதத்தில் நற்செய்திப் பணி தொடர்ந்து நடைபெற வேண்டும். இயேசு பன்னிரு திருத்தூதரையும் தம்மிடம் அழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பினார் என மாற்கு விவரிப்பது தொடக்க காலத் திருச்சபையில் நிலவிய வழக்கத்தை நம் கண்முன் கொணர்கிறது. யூத வழக்கப்படி, ஒரு நிகழ்ச்சி குறித்து சாட்சி பகர இருவர் தேவை. எனவே, இருவர் இருவராகச் சென்று கடவுளாட்சி பற்றிய நற்செய்தியை அறிவிப்பது வழக்கமாக இருந்தது. அவர்கள் தாங்கள் அறிவித்த செய்தி உண்மையே எனச் சான்று பகர்ந்தார்கள். மேலும், நற்செய்தி அறிவிக்கச் செல்வோர் எளிய வாழ்க்கைமுறையைத் தழுவ வேண்டும் என்பதும் உணர்த்தப்பட்டது. பன்னிரு திருத்தூதரும் இயேசுவின் பணியைத் தொடர்ந்தார்கள். எனவேதான் அவர்கள் ''மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்'' (மாற் 6:12).

இயேசு அறிவித்த நற்செய்தியை ஏற்போர் வாழ்க்கையில் ஒரு மாற்றம் நிகழ வேண்டும். மன மாற்றம் என்பது மனிதரின் உள்ளத்தின் ஆழத்தில் வேரோட்டமான விதத்தில் நிகழ்கின்ற ஒன்று. உள்ளார்ந்த விதத்தில் நிகழ்கின்ற மாற்றம் கண்ணோட்டங்களையும் பாhர்வைகளையும் மாற்றியமைக்கும். அப்போது நம் வாழ்க்கை முறையும் மாற்றம் பெறும். இவ்வுலகும் ஆங்கே செயலாற்றும் கடவுளின் உடனிருப்பும் நம் உள்ளத்தில் புதிய முறையில் தோன்றும். கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்கின்ற அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்துவிட்டு, அவரை நம்பிக்கையோடு அணுகிட நாம் முன்வருவோம். நம் உள்ளத்திலும் வாழ்விலும் மாற்றம் ஏற்படும்போது நாம் பிறருடைய வாழ்விலும் மாற்றம் நிகழ வேண்டும் என்னும் குறிக்கோளைச் செயல்படுத்த ஊக்கத்தோடு ஈடுபடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் வழியாக எங்களுக்கு நீர் வழங்கிய உண்மைக்கு நாங்கள் உறுதியான உள்ளத்தோடு சான்று பகர அருள்தாரும்.