யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 9வது வாரம் செவ்வாய்க்கிழமை
2021-06-01

புனித நோபேட்




முதல் வாசகம்

"உம்முடைய தருமங்கள் எங்கே? நற்செயல்கள் எங்;கே? உம்முடைய குணம் இப்பொழுது நன்றாகவே புலப்படுகிறது!"
தோபித்து 2;9-14

9 அன்று இரவு குளித்துவிட்டு என் வீட்டு முற்றத்தின் சுவர் அருகில் படுத்து உறங்கினேன். வெப்பமாக இருந்ததால் என் முகத்தை மூடவில்லை. 10 என் தலைக்குமேல் சுவரில் குருவிகள் இருந்தது எனக்குத் தெரியாது. அவற்றின் சூடான எச்சம் என் கண்களில் விழுந்தது. உடனே கண்களில் வெண்புள்ளிகள் தோன்றின. நலம் பெறுமாறு மருத்துவர்களிடம் சென்றேன். அவர்கள் எவ்வளவோ மருத்துவம் செய்தும் வெண்புள்ளிகளால் என் பார்வை குன்றிவந்தது. இறுதியாகப் பார்வையை முற்றும் இழந்தேன். நான் பார்வையற்றவனாக நான்கு ஆண்டுகள் வாழ்ந்தேன். என் உறவின் முறையார் அனைவரும் எனக்காக வருந்தினர். எலிமாய் செல்லும்வரை இரண்டு ஆண்டுகளாக அகிக்கார் என்னைப் பேணிவந்தான். 11 அக்காலத்தில் என் மனைவி அன்னா பெண்களுக்குரிய கைவேலைகளில் ஈடுபட்டிருந்தாள். 12 தன் கைவேலைப்பாடுகளை அவள் உரிமையாளர்களுக்கு அனுப்பிவைக்க, அவர்கள் அவளுக்குக் கூலி கொடுப்பார்கள். திசித்தர் மாதம் ஏழாம் நாள் தான் நெய்திருந்ததை உரிமையாளர்களுக்கு அவள் அனுப்பிவைத்தாள். அவர்கள் அவளுக்கு முழுக் கூலியுடன், விருந்து சமைக்க ஓர் ஆட்டுக்குட்டியையும் கொடுத்தார்கள். 13 அவள் திரும்பி வந்தபொழுது ஆட்டுக்குட்டி கத்தத் தொடங்கியது. உடனே நான் அவளை அழைத்து, "இந்த ஆட்டுக்குட்டி எங்கிருந்து வந்தது?" என்று கேட்டேன். "ஒருவேளை இது திருடப்பட்டதோ? அப்படியானால் உரியவரிடம் இதைத்திருப்பிக் கொடுத்துவிடு; ஏனெனில் திருடிய எதையும் உண்ண நமக்கு உரிமை இல்லை" என்றேன். 14 அதற்கு அவள் என்னிடம், "கூலிக்கு மேலாக இது எனக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது" என்றாள். இருப்பினும் நான் அவளை நம்பவில்லை. உரியவருக்கு அதைத் திருப்பிக் கொடுத்துவிடுமாறு வற்புறுத்தினேன். அவளது செயலைக் குறித்து நான் நாணினேன். அப்பொழுது அவள் மறுமொழியாக என்னிடம், "உம்முடைய தருமங்கள் எங்கே? நற்செயல்கள் எங்;கே? உம்முடைய குணம் இப்பொழுது நன்றாகவே புலப்படுகிறது!" என்றாள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

அல்லேலூயா! ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.
112;1-2 , 7-9

1 அல்லேலூயா! ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்.பல்லவி

2 அவர்களது வழிமரபு ப+வுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். 7 தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்.பல்லவி

8 அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி.பல்லவி

9 அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும்.


நற்செய்திக்கு முன் வசனம்

இயேசு அவர்களை நோக்கி, "சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்றார்

நற்செய்தி வாசகம்

மாற்கு 12; 13-17

அக்காலத்தில் பரிசேயர் இயேசுவை அவருடைய பேச்சில் சிக்கவைக்க ஏரோதியர் சிலரை அவரிடம் அனுப்பி வைத்தனர். 14 அவர்கள் அவரிடம் வந்து, "போதகரே, நீர் உண்மையுள்ளவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கு ஏற்பக் கற்பிப்பவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா? நாங்கள் செலுத்தவா, வேண்டாமா?" என்று கேட்டார்கள். 15 அவர் அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்து கொண்டு, "ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? என்னிடம் ஒரு தெனாரியம் கொண்டுவாருங்கள். நான் பார்க்க வேண்டும்" என்றார். 16 அவர்கள் அதைக் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், "இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?" என்று கேட்டார். அவர்கள் அவரிடம், "சீசருடையவை" என்றார்கள். 17 அதற்கு இயேசு அவர்களை நோக்கி, "சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்" என்றார். அவர்கள் அவரைக் குறித்து வியப்படைந்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு ஏரோதியரை நோக்கி, 'சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்' என்றார்'' (மாற்கு 12:17)

சீசருக்கு வரிசெலுத்துவது முறையா, இல்லையா என்னும் கேள்வியை இயேசுவிடம் கேட்டவர்கள் அவரைப் ''பேச்சில் சிக்கவைக்க'' முயன்றனர். அவர்களுடைய உள்ளத்தில் நேர்மை இல்லை. ஆனால் இயேசு அவர்களுடைய வெளிவேடத்தைப் புரிந்துகொள்கிறார். அவர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலும் அளிக்கிறார். ''சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுப்பதே முறை'' என்று இயேசு கூறியதைப் புரிந்துகொள்வதில் ஒரு சிக்கல் உள்ளது. சிலர் ''சீசர்'' என்றால் இவ்வுலக ஆட்சியாளர்களையும் நாட்டுத் தலைவர்களையும் குறிக்கும் என்று பொருள்கொண்டு, இவ்வுலகு சார்ந்த காரியங்களுக்கும் கடவுள் சார்ந்த காரியங்களுக்கும் இடையே உறவு கிடையாது என்றும், அவற்றிற்கிடையே நிலவுகின்ற வேறுபாட்டை நாம் போக்க இயலாது என்றும் முடிவுசெய்கின்றனர். இவர்கள் உலகு சார்ந்த காரியங்களாக அரசியல், சமூக அமைப்பு, கலாச்சாரப் பாணிகள் போன்றவற்றைக் கருதுவர். இவற்றிற்கும் கடவுளுக்கும் தொடர்பு இல்லை எனவும், சமயக் கருத்துக்களின் அடிப்படையில் உலக அமைப்பை மாற்றியமைக்க முயல்வது முறையற்றது எனவும் வாதாடுவர். ஆனால் இயேசு இப்பொருளில் பேசவில்லை. அவர் ''சீசருக்கு உரியது'' எனக் குறிப்பிட்டது அவரிடம் காட்டப்பட்ட தெனாரியம் என்னும் வெள்ளி நாணயத்தை. அதில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. யாருடைய உருவம் நாணயத்தில் உள்ளதோ அவரே அந்நாணயத்தை உருவாக்கியவர் என்னும் முறையில் அதற்கு உரிமையாளர் என இயேசு முடிவுசெய்கிறார். எனவே, சீசருக்கு வரிசெலுத்துவது சீசருக்கு உரியதைத் திருப்பிக் கொடுப்பதே ஆகும். இதைக் கூறியபின் இயேசு ''கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்குக் கொடுங்கள்'' என்றார்.

இங்கே இயேசு ஆழ்ந்ததோர் உண்மையை அறிவிக்கிறார். சீசரின் உருவம் இருந்தது நாணயத்தில்; ஆனால் கடவுளின் ''உருவமும் சாயலும்'' இருப்பது மனிதரில். ஏனென்றால் கடவுள் மனிதரைத் தம் சாயலிலும் உருவிலும் உருவாக்கினார்; அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார் (காண்க: தொநூ 1:27). எனவே, மனிதர் கடவுளுக்குச் சொந்தமானவர்கள். அவர்கள் கடவுள் ஒருவருக்கே பணிந்து நடக்கக் கடமைப்பட்டவர்கள். இவ்வுலக அதிகாரம் மனிதரை அடிமைப்படுத்துவதும் அடக்கியாளுவதும் தவறு. இந்த உண்மையை இயேசு அழகாக எடுத்துரைத்தார். இன்று நாம் மனிதரில் கடவுளின் சாயலலைக் காண்பது அவர்களுடைய மாண்பை நாம் மதிப்பதில் அடங்கும். மனிதர் மனிதரை அடிமைகளாவோ தங்கள் சொத்தாகவோ கருதுவது முறையன்று. நாம் அனைவரும் கடவுளுக்கு உரியவர்கள் என்னும் முறையில் கடவுளையே நம் கதியாக ஏற்றிட வேண்டும். அப்போது பிறருடைய மாண்பினைப் போற்றி ஏற்றிட நாம் முன்வருவோம்.

மன்றாட்டு:

இறைவா, மனிதர் அனைவரையும் உம் சாயலில் படைத்துள்ளீர் என நாங்கள் உணர்ந்து மனித மாண்பை மதித்திட அருள்தாரும்.