யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - B
2021-05-16

(இன்றைய வாசகங்கள்: திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 1:1-11,பதிலுரைப்பாடல்: திபா: 47: 1-2. 5-6, 7-8,திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-13,மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16:15-20)




என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '. என் அன்பார்ந்த மைந்தர் இவரே: இவருக்குச் செவிசாயுங்கள் '.


திருப்பலி முன்னுரை

இறைவனில் இனியவர்களே, ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் பெருமகிழ்வு அடைகிறோம். மரணத்தை வெற்றி கொண்டு உயிர்த்தெ ழுந்த இறைமகன் இயேசு, நாற்பது நாட்கள் தனது சீடர்களை சந்தித்து உறுதிபடுத்திய பின்பு விண்ணேற்றம் அடைந்து தந்தையாம் இறைவனின் வலது பக்கத்தில் அமர்கிறார். உலகெங்கும் நற்செய்தியை அறிவிக்கவும், அரும் அடையாளங்களைச் செய்யவும் நம் ஆண்டவர் நமக்கு அதிகாரம் தந்துவிட்டு சென்றிருக்கிறார். அவர் தந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, இயேசுவின் உண்மையுள்ள சாட்சிகளாக வாழ, இத்திருப்பலியில் நாம் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 1:1-11

தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்யவேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார்.விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன்.இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்: பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார். அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், "நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள் " என்று கூறினார். பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், "ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ? " என்று கேட்டார்கள். அதற்கு அவர், "என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல: ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள் " என்றார். இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, "கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் " என்றனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
பதிலுரைப்பாடல்: திபா: 47: 1-2. 5-6, 7-8

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்: ஆர்ப்பரித்துக் கடவுளைப் புக ழ்ந்து பாடுங்கள். ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்: உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே: பல்லவி:

ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்: எக்காளம் முழங்கி டவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பாடுங்கள்: கடவுளுக்குப் புகழ் பாடுங் கள்: பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். பல்லவி:

ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்: அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். கடவுள் பிற இனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்: அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். பல்லவி:

இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-13

சகோதரர் சகோதரிகளே! ஆண்டவர் பொருட்டு கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்: நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்.முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே: தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே: நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே: திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே: அவர் எல்லாருக்கும் மேலானவர்: எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்: எல்லாருக்குள்ளும் இருப்பவர். கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால்தான், "அவர் உயரே ஏறிச் சென்றார்: அப்போது, சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றார்: மனிதருக்குப் பரிசுகளை வழங்கினார் " என்று மறைநூல் கூறுகிறது. "ஏறிச் சென்றார் " என்பதனால் அதன் முன்பு மண்ணுலகின் கீழான பகுதிகளுக்கு அவர் இறங்கினார் என்று விளங்குகிறது அல்லவா? கீழே இறங்கியவர்தான் எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர். அவரே சிலரைத் திருத்தூதராகவும் சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும் ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார். அதனால் நாம் எல்லாரும் இறை மகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங் கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன். என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16:15-20

அக்காலத்தில் இயேசு பதினொருவருக்குத் தோன்றி அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்" என்று கூறினார். இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

எல்லாம் வல்லவராம் இறைவா,

உமது திருமகனின் உயிப்பு, விண்ணேற்றம் ஆகிய மறைபொருட்களின் அடிப்படையில் தோன்றி வளர்ந்த திருச்சபையின் நம்பிக்கை வாழ்வு சிறக்க பணியாற்றுமாறு, திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் தேவையான ஞானத்தை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

விண்ணில் வாழ்பவராம் இறைவா,

இவ்வுலகின் சுகங்களை நாடி உம்மைப் புறக்கணித்து வாழும் மக்கள் அனைவரும், விண்ணக வாழ்வைப் பற்றி சிந்திக்கவும், நீர் காண்பித்த அன்பு வழியில் நடந்து விண்ணக வாழ்வை உரிமையாக்கிக்கொள்ளவும் உதவ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

அன்பின் அரசரான இறைவா,

எங்கள் நாட்டு மக்களிடையே, உம்மைப் பற்றிய விழிப்புணர்வு பெருகவும், உமது அன்பின் அரசில் ஒன்றிணையும் ஆர்வம் வளரவும், அதன் வழியாக எம் நாட்டில் அன்பும் மகிழ்ச்சியும் நிறைவு காணவும் துணைபுரிய வேண்டுமென்று உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.

புதுமைகளின் நாயகராம் இறைவா,

பேய்களை ஒட்டவும் நோய்களை நீக்கவும் இறைமகன் இயேசு அளித்த அதிகாரம் எம்மில் செயல்படவும், எங்கள் நம்பிக்கையால் உலகெங்கும் நற்செய்தியைப் பறை சாற்றி, உமது அரசை நிறுவவும் ஆற்றல் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உன்னதரான தந்தையே!

திருஅவையின் தூண்களாக வளர்ந்து வரும் எம் இளையோர்கள் உலகில் ஏற்படும் மாற்றங்களால் அவர்களின் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் அச்சுறுத்தலாக அமைந்து, அவை தரும் வாக்குறுதியால் தவறான பாதையில் போகாமல், உமது வாக்குறுதிகள் அவாகளின் வாழ்க்கைப் பாதைக்கு வழிக்காட்டி என்பதில் உறுதியோடு காத்திருக்கும் நல்லுள்ளத்தை அவர்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

உறவை வளர்க்கும் இறைவா!

நீர் ஆள்பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை உணர்ந்து எங்கள் குடும்பங்களிலும், உறவுகளிடமும் அன்புப் பாராட்டவும். ஒற்றுமையாய் அன்பு உள்ளங்களைப் பகிர்ந்து கொண்டு எம் இல்லங்களில் மகிழ்ச்சிப் பொங்கிட, வரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நிலை வாழ்வு அளித்திடும் எம் இறைவா!

உம் குடும்பங்களில் கிறிஸ்துவில் மரித்த விசுவாசிகள் மற்றும் தொற்றுநோயால் மரித்த அனைவரும் நித்திய இளைப்பாற்றி அடையவும், உம் புனிதர்களில் திருக்கூட்டத்தில் அவர்களை இணைத்திடவும் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களை நோக்கி, 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்றார் (மாற்கு 16:15)

இயேசு கொணர்ந்த நற்செய்தி என்ன? கடவுள் நம்மை அன்புசெய்கிறார்; நாம் கடவுளின் பிள்ளைகளாக இருப்பதால் கடவுள் காட்டும் வழியில் நடந்து சென்று அவரிடத்தில் நிலையான அமைதியையும் மகிழ்ச்சியையும் கண்டுகொள்ள வேண்டும்; கடவுள் உலகின்மீது கொண்ட எல்லையற்ற அன்பினால் தன் ஒரே மகனை (இயேசுவை) நமக்கு மீட்பராக அளித்தார்; அவரிடத்தில் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். - இதுவே இயேசு கொணர்ந்த நற்செய்தியின் சுருக்கம். இச்செய்தியை இயேசு ஒருசில மனிதர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்படவேண்டிய இரகசியமாகக் கருதவில்லை. மாறாக, உலகில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் இந்நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்பதே இயேசுவின் பார்வை. ஆகவே, அவர் தம் சீடர்களுக்கு ஒரு முக்கிய கட்டளை தருகிறார்: ''உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'' என்பதே இக்கட்டளை. இதை மத்தேயு இன்னும் விரிவாகத் தருகிறார் (காண்க: மத் 28:16-20). இயேசுவின் சீடர்கள் ஆற்ற வேண்டிய முக்கிய பணி ''நற்செய்தி அறிவித்தல்'' ஆகும். இது வெறும் வார்த்தைகளால் நடைபெறுகின்ற நிகழ்வு அல்ல. மாறாக, நற்செய்தி என்பது ஒரு வாழ்க்கை முறை. இயேசுவின் போதனையை உள்ளத்தில் ஏற்று, அதை வாழ்வில் கடைப்பிடிப்பதே நற்செய்தி அறிவிப்பின் முக்கிய அம்சம். இதையே நாம் ''சான்று பகர்தல்'' என்கிறோம்.

இவ்வாறு நாம் நற்செய்திக்கு நம் வாழ்வின் வழியாகச் சான்று பகர்ந்தால் உலக மக்கள் நற்செய்தியை அன்னியமாகப் பார்க்கமாட்டார்கள். மேலும், இயேசுவின் போதனை மனிதரை ஓர் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் வழியாக உள்ளது. இவ்வுலகத்தோடு எல்லாமே முடிந்துபோகும் என்றில்லாமல், கடவுளின் ஆட்சி நிறைவுறும் காலம் இவ்வுலகைக் கடந்தது என கிறிஸ்தவ நம்பிக்கை நமக்கு அறிவுறுத்துகிறது. அதே நேரத்தில் இவ்வுலகை அன்பு நிலவும் ஓர் இடமாக, நீதி தவழ்கின்ற தளமாக மாற்றியமைத்திட நாம் உழைக்க வேண்டும் என்பதும் நற்செய்தி அறிவிப்பின் முக்கிய அம்சம் ஆகும். இவ்வாறு, இயேசுவைப் பின்செல்வோர் அவருடைய ஆவியால் உந்தப்பட்டு நற்செய்தியின் தூதுவர்களாக மாறினால் இவ்வுலகில் கடவுளின் ஆட்சி இன்னும் தெளிவாகத் துலங்கும். நற்செய்தியை அறிவிப்போர் கிறிஸ்துவையே உலகுக்குக் கொண்டுசெல்கின்ற கருவிகளாகச் செயல்படுவர். நற்செய்தியின் ஆற்றல் இவ்வுலகை உருமாற்றும் திறன் கொண்டது என நாம் உணர்ந்தால் நம் வாழ்வு அனைத்துமே நற்செய்தியில் தோய்ந்ததாக மாறும்.

மன்றாட்டு:

இறைவா, உம் மகன் வெளிப்படுத்திய நற்செய்தியால் நாங்கள் உருமாற்றம் அடைய அருள்தாரும்.