யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம்
2021-04-10

பாஸ்கா எண்கிழமை சனி




முதல் வாசகம்

நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 13-21

அந்நாள்களில் பேதுருவும் யோவானும் கல்வியறிவு அற்றவர்கள் என்பதைத் தலைமைச் சங்கத்தார் அறிந்திருந்ததால், அவர்களது துணிவைக் கண்டு வியப் படைந்தனர்; அவர்கள் இயேசுவோடு இருந்தவர்கள் என்பதையும் உணர்ந்துகொண்டனர். நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால் அவர்களால் ஒன்றும் மறுத்துப் பேச முடியவில்லை. எனவே அவர்கள் பேதுருவையும் யோவானையும் சங்கத்தை விட்டு வெளியேறும்படி ஆணையிட்டு, பின்பு தங்களுக்குள் இது குறித்துக் கலந்து பேசினார்கள்.
``நாம் இந்த மனிதர்களை என்ன செய்யலாம்? ஏனென்றால் குறிப்பிடத்தக்க ஓர் அரும் அடையாளத்தை இவர்கள் செய்துள்ளார்கள்; இது எருசலேமில் வாழும் அனைவருக்கும் தெரியும். இதை நாம் மறுக்க முடியாது. ஆகவே இச்செய்தி மேலும் மக்களிடையே பரவாமலிருக்குமாறு இந்த இயேசுவைக் குறித்து யாரிடமும் பேசக்கூடாதென நாம் இவர்களை அச்சுறுத்தி வைப்போம்'' என்று கூறினார்கள்.
அதன் பின்பு தலைமைச் சங்கத்தார் அவர்களை அழைத்து, ``இயேசுவைப் பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது'' என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டனர்.
அதற்குப் பேதுருவும் யோவானும் மறுமொழியாக, ``உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; என்ன ஆனாலும் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது'' என்றனர்.
அவர்களைத் தண்டிப்பதற்கு வேறு வழி கண்டுபிடிக்க முடியாததாலும், மக்களுக்கு அஞ்சியதாலும் தலைமைச் சங்கத்தார் அவர்களை மீண்டும் அச்சுறுத்தி விடுதலை செய்தனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, என் மன்றாட்டை நீர் கேட்டதால் நான் நன்றி செலுத்துகின்றேன்.
திபா 118: 1,14-15. 16,18. 19-21

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 14 ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. 15 நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றி உள்ளது. பல்லவி

16 ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 18 கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. பல்லவி

19 நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்துவிடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். 20 ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர். 21 என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15

வாரத்தின் முதல்நாள் காலையில் இயேசு உயிர்த்தெழுந்த பின்பு அவர் முதலில் மகதலா மரியாவுக்குத் தோன்றினார். அவரிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களை ஓட்டியிருந்தார். மரியா புறப்பட்டுச் சென்று இயேசுவோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள்.
அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.
அதன்பிறகு அவர்களுள் இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார். அவர்கள் சென்று அதனை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்கள் சொன்னதையும் சீடர்கள் நம்பவில்லை.
இறுதியாகப் பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றினார். உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதையும் நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார்.
இயேசு அவர்களை நோக்கி, ``உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்'' என்றுரைத்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு மரியாவிடம், 'ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?' என்று கேட்டார் (யோவான் 20:15)

இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி கிறிஸ்தவ நம்பிக்கைக்கு அடிப்படை. கல்லறையிலிருந்து உயிர்பெற்றெழுந்த அந்த நேரத்தில் இயேசுவைக் கண்டவர் எவருமில்லை. ஆனால் உயிர்பெற்றெழுந்த இயேசு அவரில் நம்பிக்கை கொண்ட பல மனிதருக்குத் தோன்றினார். யோவான் நற்செய்தியில் இயேசு மகதலா மரியாவுக்குத் தோன்றிய நிகழ்ச்சி விரிவாகத் தரப்பட்டுள்ளது. இயேசுவின் உடலைக் கல்லறையில் காணாததால் கவலையோடு அழுதுகொண்டிருந்த மரியா ஒரு மனிதரைக் காண்கின்றார். அவர் தோட்டக்காரராக இருப்பாரோ என மரியா எண்ணுகிறார். ஆனால் உண்மையிலே அவர் உயிர்பெற்றெழுந்த இயேசுதான். இயேசு மரியாவிடம் ''ஏனம்மா அழுகிறாய்?'' எனக் கரிசனையோடு வினவுகிறார். ''யாரைத் தேடுகிறாய்?'' என இயேசு கேட்கிறார். இயேசுவைத் தேடுவதாக மரியா கூறியதும் இயேசு ''மரியா'' என்று பெயர் சொல்லி அழைக்கிறார். அக்குரலுக்குச் சொந்தக்காரர் யார் என்பதை மரியா உடனேயே கண்டுகொள்கிறார். தான் பேசிக்கொண்டிருக்கின்ற மனிதர் உண்மையிலேயே இயேசுதான் என உணர்ந்த அந்த நேரத்திலேயே மரியா ''ரபூனி'' (''போதகரே'') என இயேசுவைக் கூப்பிடுகிறார்.

இயேசு நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைக்கிறார். இயேசுவை யார் என நாம் அறிந்து அவரிடத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றால் அதற்கு முதல் நிபந்தனை நாம் அவர் நம்மை எல்லையற்ற விதத்தில் அன்புசெய்கிறார் என்னும் உண்மையை ஏற்பதுதான். இயேசுவின் அன்பு நம்மை அரவணைக்கிறது எனவும் அவருடைய அன்பின் பிணைப்பில் நாம் புதுவாழ்வு பெறுகிறோம் எனவும் நாம் ஏற்றுக்கொண்டால் அவரை நாம் ஆண்டவரே எனவும் போதகரே எனவும் அழைப்பதோடு அவருடைய போதனையை நம் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் கொள்வோம். இயேசுவை அனுபவித்து உணர்கின்ற மனிதர் அவருடைய அன்பின் ஆழத்தை அறிவார்கள். அப்போது நாம் தேடுகின்ற இயேசு நம் கைகளுக்கு எட்டாதவராகவோ நம் பார்வைக்கு அப்பாற்பட்டவராகவோ இருக்கமாட்டார். மாறாக, அவர் நாம் நமக்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளோமோ அதைவிடவும் நமக்கு நெருக்கமாக உள்ளார் என நாம் உணர்வோம். இயேசுவின் உயிர்த்தெழுதல் நம்மை முற்றிலுமாக உருமாற்றுகிறது. பாவம் என்னும் தீமையிலிருந்து இயேசு நம்மை விடுவித்துள்ளார் என்னும் அனுபவம் நமதாக வேண்டும். அப்போது நன்மையைத் தேடிச் செல்கின்ற மனநிலை நம்மில் உருவாகும். நாம் தேடுகின்ற இயேசு நம்மை விட்டு அகன்றுவிட்டாரோ என்னும் அச்சம் நம்மில் எழாது. மாறாக, இயேசுவின் உடனிருப்பு நம் உள்ளத்தில் உள்ளதை நாம் உணர்வோம்; அவருடைய ஆவியால் புது வாழ்வு பெறுவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகன் இயேசுவைப் பின்பற்றி நாங்களும் உம் திருவுளத்தை நிறைவேற்ற அருள்தாரும்.