யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 5வது வாரம் வெள்ளிக்கிழமை
2021-02-12




முதல் வாசகம்

நீங்களும் கடவுளைப்போல் நன்மை தீமையை அறிவீர்கள்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 3: 1-8

அந்நாள்களில் ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், ``கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?'' என்று கேட்டது. பெண் பாம்பிடம், ``தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். ஆனால் `தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக் கூடாது; அதைத் தொடவும் கூடாது, மீறினால் நீங்கள் சாவீர்கள்' என்று கடவுள் சொன்னார்'' என்றாள். பாம்பு பெண்ணிடம், ``நீங்கள் சாகவே மாட்டீர்கள்; ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப்போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்'' என்றது. அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடன் இருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர். மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ அவர் பேறுபெற்றவர்.
திருப்பாடல் 32: 1-2. 5. 6. 7

எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர். 2 ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். பல்லவி

5 `என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். பல்லவி

6 ஆகவே, துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும் உம்மை நோக்கி மன்றாடுவர்; பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது. பல்லவி

7 நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும்

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 31-37

இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். காது கேளாதவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கை வைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக்கொண்டனர். இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ் நீரால் அவர் நாவைத் தொட்டார்; பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி, ``எப்பத்தா'' அதாவது `திறக்கப்படு' என்றார். உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார். இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ``இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காது கேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!'' என்று பேசிக்கொண்டார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல' என்றார்'' (மாற்கு 7:27)

இயேசு கடவுளின் ஆட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்த போது பெரும்பாலும் யூத மக்கள் நடுவேதான் சென்று போதித்தார். ஆனால் சில வேளைகளில் அவர் பிற இனத்தார் வாழ்ந்த பகுதிகளுக்கும் சென்றார் எனவும், பிற இனத்தைச் சார்ந்தவர்களுக்கும் நலமளித்தார் எனவும் நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. குறிப்பாக, மாற்கு நற்செய்தி இயேசு பிற இனத்தார் நடுவே ஆற்றிய பணியை உயர்த்திப் பேசுகிறது. தீர் என்னும் நகர்ப்பகுதி பிற இனத்தார் வாழ்ந்த இடம். அங்கே இயேசு சென்ற போது பிற இனத்தைச் சார்ந்த ஒரு பெண் அவரை அணுகி வந்து, தம் மகளைப் பிடித்திருந்த பேயை ஓட்ட வேண்டும் என இயேசுவிடம் வேண்டுகிறார். இயேசு தம் பணி இஸ்ரயேலருக்கு மட்டுமே என்று கூறுகிறார். ''பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல'' (மாற் 7:27) என்று இயேசு கூறிய சொற்கள் அப்பெண்ணின் உள்ளத்தில் முள்போலத் தைத்திருக்க வேண்டும். இஸ்ரயேலைப் பிள்ளைகளுக்கும் பிற இனத்தாரை நாய்களுக்கும் இயேசு ஒப்பிட்டதை அப்பெண் உணர்ந்தார். ஆயினும் அவர் நம்பிக்கை இழக்கவில்லை. இயேசுவோடு எதிர்வாதம் செய்யவும் அவர் தயங்கவில்லை.

''பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகள் நாய்க்குட்டிகளுக்குக் கிடைக்குமே'' என்று அந்தப் பிற இனப் பெண் பதில் கூறியதைக் கேட்டு இயேசு ஒருவேளை புன்னகைத்திருப்பார். அப்பெண்ணிடம் விளங்கிய நம்பிக்கையைக் கண்டு இயேசு வியப்புற்றார். அவர் கேட்டவாறே அவருடைய மகளுக்கு நலமளித்தார். இந்நிகழ்ச்சி வழியாக மாற்கு உணர்த்தும் உண்மைகள் இரண்டு: முதலில், கடவுளாட்சியில் புகுவதற்கான அழைப்பு இஸ்ரயேலுக்கு மட்டுமல்ல, பிற இனத்தாருக்கும் விடுக்கப்படுகிறது. கடவுளாட்சியில் புக வேண்டும் என்றால் நம் உள்ளத்திலும் வாழ்விலும் நம்பிக்கை துலங்க வேண்டும். இரண்டாவது, கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு வாழ்வோரின் சமூகமாகிய திருச்சபை எந்த ஒரு பிரிவினரையும் ஒதுக்கிவைக்காமல் அனைத்து மக்களுக்கும் இறையாட்சியின் சாட்சியாக விளங்க வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எல்லா மக்களும் உம் பிள்ளைகளே என நாங்கள் உணர்ந்து, மனித மாண்பை மதித்து வாழ்ந்திட அருள்தாரும்.