யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 2வது வாரம் வியாழக்கிழமை
2021-01-21




முதல் வாசகம்

தம்மைத் தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒருமுறைக்குள் செய்து முடித்தார்
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 7:25-8:6

25 ஆதலின், தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர் முற்றும் மீட்க வல்லவராயிருக்கிறார்: அவர்களுக்காகப் பரிந்து பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்.26 இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். இவர் தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர்.27 ஏனைய தலைமைக் குருக்கள் செய்வது போல, முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும் பின்னர் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில் தம்மைத் தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒருமுறைக்குள் செய்து முடித்தார்.28 திருச்சட்டப்படி வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப்படுகிறார்கள். ஆனால் அத்திருச்சட்டத்திற்குப் பின்னர், ஆணையிட்டுக் கூறப்பட்ட வாக்கின் மூலம் என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே குருவாக ஏற்படுத்தப்படுகிறார்.1 இத்தகைய தலைமைக் குரு நமக்கு வாய்த்துள்ளார் என்பதே இதுகாறும் நாம் கூறியவற்றின் தலையாய கருத்து. இவர் விண்ணகத்தில் பெருமைமிகு கடவுளுடைய அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்.2 அங்கே மனிதரால் அல்ல, ஆண்டவராலே அமைக்கப்பட்ட உண்மையான கூடாரமாகிய தூயகத்தில் ஊழியம் செய்கிறார்.3 ஒவ்வொரு தலைமைக் குருவும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தவே ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். எனவே பலி செலுத்துவதற்கு இவரிடமும் ஏதேனும் ஒரு பொருள் கட்டாயம் இருக்க வேண்டும்.4 உலகிலேயே இருந்திருப்பாரென்றால் இவர் குருவாக இருந்திருக்கமாட்டார். ஏனெனில், திருச்சட்டத்தின்படி காணிக்கைகளைச் செலுத்த ஏற்கெனவே இங்குக் குருமார்கள் இருக்கிறார்கள்.5 இவர்கள் வழிபடும் இடம் விண்ணகக் கூடாரத்தின் சாயலும் நிழலுமே. மோசே கூடாரத்தை அமைத்தபோது, மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்ட முறைப்படி நீ இவற்றையெல்லாம் செய்யுமாறு கவனித்துக்கொள் என்று கடவுள் பணித்தது இதைச் சுட்டிக்காட்டுகிறது.6 ஆனால், இவரோ அவர்களுடைய குருத்துவப்பணியை விட மிக மேன்மையான குருத்துவப் பணியைப் பெற்றிருக்கிறார். ஏனெனில் சீரிய வாக்குறுதிகளின் அடிப்படையில் செய்யப்பட்டு, இவரை இணைப்பாளராகக் கொண்டிருக்கும் உடன்படிக்கை முந்திய உடன்படிக்கையைவிட சிறப்புமிக்கது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்
திருப்பாடல்கள் 40:7-10

7 எனவே, 'இதோ வருகின்றேன்; என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது;8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது' என்றேன் நான்.

9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர்.

10 உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப்பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை.


நற்செய்திக்கு முன் வசனம்

தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, ' இறைமகன் நீரே ' என்று கத்தின.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3:7-12

7 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தம் சீடருடன் கடலோரம் சென்றார். கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். மேலும் யூதேயா,8 எருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் ஆகிய இடங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் அவர் செய்தவற்றையெல்லாம் கேள்வியுற்று அவரிடம் வந்தனர்.9 மக்கள் கூட்டம் தம்மை நெருக்கிவிடாதவாறு தமக்காகப் படகு ஒன்றை முன்னேற்பாடாக வைத்திருக்குமாறு அவர் சீடருக்குச் சொன்னார்.10 ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால், நோயுற்றோர் அனைவரும் அவரைத் தொடவேண்டுமென்று வந்து அவர்மீது விழுந்து கொண்டிருந்தனர்.11 தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, ' இறைமகன் நீரே ' என்று கத்தின.12 அவரோ, தம்மை வெளிப்படுத்த வேண்டாமென அவற்றிடம் மிகக் கண்டிப்பாய்ச் சொன்னார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே' என்றார்'' (லூக்கா 6:5)

ஓய்வு நாள் என்பது யூதருடைய சமய வழக்கங்களில் மிக முக்கியமான ஒன்று. வெள்ளிக் கிழமை மாலை பொழுது சாயும் வேளையிலிருந்து தொடங்கி மறுநாள் சனிக்கிழமை பொழுது சாய்வது வரை ஓய்வு நாள் அனுசரிக்கப்பட்டது. ஆறு நாள்களில் உலகைப் படைத்த கடவுள் ஏழாம் நாள் ஓய்வெடுத்தார் என்னும் விவிலியச் செய்தியின் அடிப்படையில் ஓய்வுநாள் சட்டம் விளக்கப்பட்டது. கடவுளின் படைப்பை வியந்து, நன்றியுணர்வோடு கடவுளுக்குப் புகழ்செலுத்தும் நாளாக ஓய்வுநாள் அமைந்தது. அன்றாட வேலையிலிருந்து ஓய்வெடுப்பதற்கும் அந்நாள் பொருத்தமாக இருந்தது. என்றாலும் யூத சமயத் தலைவர்கள் ஓய்வுநாள் கட்டளைக்கு அளித்த விளக்கங்கள் மக்கள்மேல் திணித்த ஒரு பெரிய சுமையாக மாறிவிட்டிருந்தது. சட்டத்தைப் பாதுகாப்பதற்காகப் புதுப்புது விளக்கங்களைத் தந்து இறுதியில் சட்டத்தின் உண்மையான நோக்கத்தை அவர்கள் மறந்துவிட்டிருந்தார்கள். சட்டம் மனிதருக்கா மனிதர் சட்டத்திற்கா என்று கேட்டால் அவர்கள் மனிதர் சட்டத்திற்காகவே என்று பதிலளித்திருப்பர். ஆனால், இயேசுவின் அணுகுமுறை யூத அறிஞரின் அணுகுமுறைக்கு நேர்மாறாக அமைந்தது. மனிதத் தேவைகள் எழும்போது சட்டம் அடிபணிய வேண்டுமே ஒழிய மனிதரை அடிமைப்படுத்துகின்ற சக்தியாக மாறிவிடலாகாது.

ஓய்வு நாளில் இயேசுவின் சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றது சட்டத்திற்கு மாறானதல்ல (காண்க: இச 23:25). ஆனால் அவர்கள் ஓய்வுநாளன்று அவ்வாறு செய்தது சரியல்ல என இயேசுவின் எதிரிகள் வாதாடினர். இயேசு அவர்களோடு வாதத்தில் ஈடுபட மறுத்துவிட்டார். மாறாக, பசியாய் இருந்தபோது தாவீதும் அவரோடு இருந்தவர்களும் ''அர்ப்பண அப்பங்களை'' எடுத்து உண்டது எப்படி சட்டத்திற்கு எதிராக அமையவில்லையோ அதுபோலவே, பசியாயிருந்த சீடர் ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து தானியத்தை உண்டது சட்டத்தை மீறியதாகாது என இயேசு போதித்தார். மக்களின் வாழ்வுக்காக இயேசுவே ''அர்ப்பண அப்பமாக'', நற்கருணையாக மாறினார்; தம்மையே நமக்கு உணவாக அளித்தார் என்பதையும் நாம் இவண் நினைவுகூரலாம். ஓய்வுநாள் என்றால் என்னவென்று விளக்குவதற்கு இயேசு அதிகாரம் கொண்டிருந்தார் என்னும் செய்தி அவருடைய எதிரிகளுக்குப் பெரும் வியப்பைத் தந்திருக்க வேண்டும். ஆனால், இயேசுவின் போதனைப்படி, சட்டம் மனிதருக்குப் பணிபுரிய வேண்டுமே ஒழிய மனிதரை அடிமைப்படுத்துகின்ற எசமானனாக மாறிவிடலாகாது. சிலர் சட்டத்தின் பெயரால் அநீதி இழைக்கத் தயங்கமாட்டார்கள். பிறருக்கு என்ன நிகழ்ந்தாலும் சரி, சட்டம் மட்டும் மீறப்படலாகாது என்பது அவர்களுடைய பார்வை. ஆனால் இயேசுவின் பார்வை அதுவல்ல. அவர் மனிதருக்கே முதன்மை அளித்தார். எதுவெல்லாம் மனித நலனுக்குத் தடையாக அமைகிறதோ அதைத் தகர்த்து எறிய வேண்டும் என்பதே இயேசுவின் அணுகுமுறை.

மன்றாட்டு:

இறைவா, மனித நலனை எப்போதும் முன்னிலைப்படுத்தி உமது புகழைப் பாடிட எங்களுக்கு அருள்தாரும்.