யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
கிறிஸ்து பிறப்புக்காலம்
2021-01-02




முதல் வாசகம்

தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்
யோவான் முதல் திருமுகம் 2:22-28

22 இயேசு மெசியா அல்ல என்று மறுப்போரைத் தவிர வேறு யார் பொய்யர்? தந்தையையும் மகனையும் மறுப்போர்தாம் எதிர்க் கிறிஸ்துகள்.23 மகனை மறுதலிப்போர் தந்தையை ஏற்றுக்கொள்வதில்லை: மகனை ஏற்று அறிக்கையிடுவோர் தந்தையையும் ஏற்றுக்கொள்கின்றனர்.24 தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருக்கட்டும்: தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்தது உங்களுள் நிலைத்திருந்தால் நீங்கள் மகனுடனும் தந்தையுடனும் இணைந்திருப்பீர்கள்.25 அவரே நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார். அவ்வாக்குறுதி நிலைவாழ்வு பற்றியதாகும்.26 உங்களை ஏமாற்றுகிறவர்களை மனத்தில் கொண்டு இவற்றை உங்களுக்கு எழுதியுள்ளேன்.27 நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள் பொழிவு உங்களுள் நிலைத்திருக்கிறது. அதனால் உங்களுக்கு எவரும் கற்பிக்க வேண்டிய தேவையில்லை. மாறாக, நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட அருள்பொழிவால் அனைத்தையும் கற்றுக்கொள்கிறீர்கள். அவ்வருள்பொழிவு உண்மையானது: பொய்யானது அல்ல. நீங்கள் அவரோடு இணைந்து வாழுங்கள்.28 ஆகவே, பிள்ளைகளே, அவர் தோன்றும்போது நாம் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கவும் அவருடைய வருகையின்போது வெட்கி விலகாதிருக்கவும் அவரோடு இணைந்து வாழுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
திருப்பாடல்கள் 98:1-4

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். ஆவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.

4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.


நற்செய்திக்கு முன் வசனம்

அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1:19-28

19 எருசலேமிலுள்ள யூதர்கள் குருக்களையும் லேவியர்களையும் யோவானிடம் அனுப்பி, ' நீர் யார்? ' என்று கேட்டபோது அவர், ' நான் மெசியா அல்ல ' என்று அறிவித்தார்.20 இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.21 அப்போது, ' அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா? ' என்று அவர்கள் கேட்க, அவர், ' நானல்ல ' என்றார். ' நீர் தாம் வர வேண்டிய இறைவாக்கினரா? ' என்று கேட்டபோதும், அவர், ' இல்லை ' என்று மறுமொழி கூறினார்.22 அவர்கள் அவரிடம், ' நீர் யார்? எங்களை அனுப்பியவர்களிடம் நாங்கள் மறுமொழி சொல்லியாக வேண்டும்; எனவே உம்மைப்பற்றி என்ன சொல்கிறீர்? ' என்று கேட்டார்கள்.23 அதற்கு அவர், ' ″ ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது ″ என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப்பற்றியே ' என்றார்.24 பரிசேயரால் அனுப்பப்பட்ட அவர்கள்25 அவரிடம், ' நீர் மெசியாவோ எலியாவோ வர வேண்டிய இறைவாக்கினரோ அல்லவென்றால் ஏன் திருமுழுக்குக் கொடுக்கிறீர்? ' என்று கேட்டார்கள்.26 யோவான் அவர்களிடம், ' நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்;27 அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை ' என்றார்.28 இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''யோவான், 'நான் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்' என்றார்'' (யோவான் 1:26)

யோர்தான் ஆற்றருகே யோவான் நின்றுகொண்டிருக்கிறார். அவருடைய குரல் கணீரென ஒலிக்கிறது. மக்கள் மனம் மாறி, கடவுளிடம் திரும்பாவிட்டால் அவர்களுக்கு அழிவு வந்தே தீரும் என அச்சுறுத்தும் மொழியில் பறைசாற்றுகிறார் யோவான். மக்கள் கடவுளோடு நல்லுறவு கொண்டாட வேண்டும் என்றால் அவர்கள் தம் பாவ வாழ்க்கையைத் துறந்துவிட்டு நன்னெறியில் வழிநடக்க வேண்டும். இதற்கு அடையாளமாகத்தான் திருமுழுக்கு அமைகின்றது. யோவான் வழங்கிய திருமுழுக்கு யூத மரபில் முற்றிலும் புதிது என்று சொல்ல முடியாது. எஸ்ஸேன் என்னும் துறவியர் குழுவில் திருமுழுக்கு வழக்கம் இருந்தது. மேலும், நீரைப் பயன்படுத்தித் தூய்மைப்படுத்தும் சடங்குகளும் யூதரிடையே நிலவின. ஆயினும், யோவான் அறிவித்த திருமுழுக்கில் சில தனித்தன்மைகள் உள்ளன. மக்கள் தங்கள் பாவ வாழ்க்கையைத் துறக்கவேண்டும் எனவும் மனம் மாறிக் கடவுளிடம் செல்லவேண்டும் என்றும் கேட்ட யோவான் தம்மைவிடவும் பெரியவர் ஒருவர் வருகிறார் எனவும் அறிவித்தார். ''நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்'' என்று யோவான் இயேசுவைப் பற்றிக் கூறுகிறார்.

இயேசுவைப் பலர் பார்த்திருக்க வேண்டும்.ஆனால் அவர்கள் இயேசுவை உண்மையிலேயே அறியவில்லை. திருமுழுக்குப் பெற்ற பிறகுதான் இயேசு தம் பொதுப் பணியைத் தொடங்கினார் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும், இன்று நம் நடுவே இயேசு இருக்கிறார் என நாம் நம்புகிறோம். ஆனால் அவரை நாம் உண்மையிலேயே அறிந்துகொண்டுள்ளோமா என்னும் கேள்வியை எழுப்புவது பொருத்தமே. விவிலியத்தில் ''அறிதல்'' என்னும் சொல்லுக்கு ஆழ்ந்த பொருள் உண்டு. ஏதோ மேல்மட்டமாக ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்வது உண்மையான ''அறிவு'' அல்ல. அன்றாட வாழ்க்கையில் நாம் புரகின்ற செயல்கள் மேலோட்டமான நிலையில் நின்றுவிடுகின்றன. ஆனால் இயேசுவை ''அறிதல்'' என்பது அவருடைய உண்மையான இயல்பை ஆழப் புரிந்துகொண்டு, அவரை நம் உள்ளத்தில் வரவேற்பதைக் குறிக்கும். இந்த அறிவு வெறும் புலனளவிலோ சிந்தனையளவிலோ நின்றுவிடாது. மாறாக, புலனும் சிந்தையும் காட்டுகின்ற இயேசுவை நம் இதயத்தில் ஏற்று, அவரின் வரவால் நம் வாழ்க்கை முற்றிலுமாகத் திருப்பம் பெறச் செய்வதே இயேசு பற்றிய உண்மையான ''அறிவு''. ஆக, நாம் அறியாத ஒருவர் நம்மிடையே இருக்கிறார் என்றால் அவரை அறிந்துகொள்ள நாம் என்ன செய்கிறோம்?

மன்றாட்டு:

இறைவா, இயேசுவை நாங்கள் அறிந்து அந்த அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்திட அருள்தாரும்.