யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
திருவருகைக்காலம் 2வது வாரம் வெள்ளிக்கிழமை
2020-12-11




முதல் வாசகம்

என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்திரு.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19

இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப்போலும், உன் வெற்றி கடல் அலை போலும் பாய்ந்து வந்திருக்கும். உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித் தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்; அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்; அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப் பட்டிராது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.
திருப்பாடல் 1: 1-2. 3. 4,6

நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்; 2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். பல்லவி

3 அவர் நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்; பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்; தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். பல்லவி

4 பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர். 6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்; பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவர் வரவிருக்கிறார். அவரை எதிர்கொள்ளுங்கள்; ஏனெனில், அமைதியின் அரசர் அவரே

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 16-19

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: �இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, `நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை' என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ `அவன் பேய் பிடித்தவன்' என்கிறார்கள். மானிடமகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, `இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்' என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'திருமுழுக்கு யோவான் காலமுதல் இந்நாள்வரையிலும் விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது. தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்' என்றார்'' (மத்தேயு 11:12)

கடவுள் ''வல்லமை மிக்கவர்'' என்னும் கருத்து பழைய ஏற்பாட்டில் பரவலாகக் காணக்கிடக்கிறது. தாம் தெரிந்துகொண்ட மக்களைப் பாதுகாப்பதற்காகக் கடவுள் எதிரிகளை முறியடிக்கிறார், நாடுகளை வீழ்த்துகிறார், அநீத அமைப்புகளை உடைத்தெறிகிறார். இவ்வாறு வல்லமையோடு செயல்படுகின்ற கடவுள் வன்முறையை ஆதரிப்பதுபோலத் தோன்றும். புதிய ஏற்பாட்டில் நாம் காண்கின்ற கடவுள் அன்புமிக்க தந்தையாக இருக்கிறார். இயேசு வழியாக அவர் தம் அன்பு இதயத்தை நமக்குத் திறந்துள்ளார். நமக்கு எதிராகப் பிறர் தீங்கிழைத்தாலும் நாம் அவர்களுக்குத் தீங்கிழைக்கலாகாது என இயேசு நமக்குக் கற்பிக்கிறார். எனவே, இயேசு வன்முறையை ஆதரிக்கவில்லை என்பது தெளிவு. அதே நேரத்தில் ''விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகிறது'' என்றும் ''வன்முறையாகத் தாக்குகின்றவர்கள் விண்ணரசைக் கைப்பற்றுவர்'' (காண்க: மத் 11:12) என்றும் இயேசு கூறுவதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? இச்சொற்றொடருக்கு ஒரு மாற்று மொழி பெயர்ப்பை நாம் தமிழ் விவிலியத்தில் காணலாம். அடிக்குறிப்பாகத் தரப்படுகின்ற அந்த மொழிபெயர்ப்பு இதோ: ''திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரை விண்ணரசு வல்லமையாகச் செயலாற்றி வருகிறது. ஆர்வமுள்ளோர் அதைக் கைப்பற்றுகின்றனர்''.

இயேசுவின் காலத்தில் ''தீவிரவாதிகள்'' என்றொரு பிரிவினர் இருந்தனர். அவர்கள் உரோமை ஆட்சியாளர்களைத் தம் நாட்டிலிருந்து வெளியேற்றி, நாட்டை விடுதலை செய்வதற்கு ஒரே வழி வன்முறையே என நம்பினர். அவர்களைப் பற்றிய சில குறிப்புகள் புதிய ஏற்பாட்டில் உள்ளன. எடுத்துக்காட்டாகக் காண்க: திப 5:35-37; லூக் 13:1. கலகத்தில் ஈடுபட்டுக் கொலைசெய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்த பரபா என்பவன் ஒரு தீவிரவாதியாக இருந்திருக்கலாம் (காண்க: லூக் 23:18-19). தீவிரவாதிகள் வன்முறையால் ஆட்சியை மாற்ற எண்ணினார்கள், வன்முறையைக் கையாளுகின்ற மெசியா கடவுளாட்சியை நிறுவுவார் எனவும் நம்பினார்கள். அவர்களுடைய முயற்சி வெற்றிபெறவில்லை. ஆனால் இயேசு வேறொரு ஆட்சியை அறிவித்தார். அதைக் கடவுளாட்சி (''விண்ணரசு'') என நற்செய்தியாளர்கள் குறிக்கின்றனர். அந்த ஆட்சி வன்முறையில் பிறக்கின்ற ஆட்சியல்ல. மாறாக, கடவுள் நம்மீது காட்டுகின்ற அன்பும் இரக்கமும் நீதியும் உண்மையும் அந்த ஆட்சியின் அடித்தளங்களாக அமையும். எனவே, ஒருவிதத்தில் கடவுளாட்சி வல்லமை மிக்கதுதான். அதன் வல்லமை வன்முறையிலிருந்து பிறப்பதல்ல, மாறாக அன்பிலிருந்து ஊற்றெடுப்பது. எங்கே அன்பும் நட்பும் உளதோ அங்கே கடவுளாட்சி தொடங்கிவிட்டது. அதன் நிறைவை எதிர்பார்த்து நாம் காத்திருக்கின்றோம். அந்த நம்பிக்கை வீண்போகாது என இயேசு நமக்கு உறுதியளிக்கிறார்.

மன்றாட்டு:

இறைவா, உம் ஆட்சியில் பங்கேற்க நாங்கள் அன்பு என்னும் ''வல்லமையோடு'' செயலாற்ற அருள்தாரும்.