யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 33வது வாரம் வெள்ளிக்கிழமை
2020-11-20




முதல் வாசகம்

பல்வேறு மக்களினத்தார், நாட்டினர், மொழியினர், மன்னர் பற்றி நீ மீண்டும் இறைவாக்கு உரைக்க வேண்டும்'
திருத்தூதர் யோவான் எழுதிய திரு வெளிப்பாட்டில் இருந்து வாசகம் 10: 8-11

சகோதரர் சகோதரிகளே, விண்ணகத்திலிருந்து நான் கேட்ட குரல் என்னிடம் மீண்டும் பேசி, ``கடலின்மீதும் நிலத்தின்மீதும் நிற்கின்ற வானதூதரின் கையில் உள்ள பிரிக்கப்பட்ட சுருளேட்டை நீ போய் வாங்கிக்கொள்'' என்றது. நானும் அந்த வானதூதரிடம் சென்று, அந்தச் சிற்றேட்டை என்னிடம் தரும்படி கேட்டேன். அவரோ, ``இதை எடுத்துத் தின்றுவிடு; இது உன் வயிற்றில் கசக்கும், ஆனால் வாயில் தேனைப் போல் இனிக்கும்'' என்று என்னிடம் சொன்னார். உடனே வானதூதரின் கையிலிருந்து அந்தச் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன். அது என் வாயில் தேனைப் போல் இனித்தது; ஆனால் அதைத் தின்றபொழுது என் வயிற்றில் கசந்தது. ``பல்வேறு மக்களினத்தார், நாட்டினர், மொழியினர், மன்னர் பற்றி நீ மீண்டும் இறைவாக்கு உரைக்க வேண்டும்'' என்று எனக்குச் சொல்லப் பட்டது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை!
திருப்பாடல் 119: 14,24. 72,103. 111,131

14 பெருஞ்செல்வத்தில் மகிழ்ச்சி அடைவது போல், நான் உம் ஒழுங்குமுறைகளின்படி நடப்பதில் மகிழ்ச்சியுறுகின்றேன். 24 ஏனெனில், உம் ஒழுங்குமுறைகள் எனக்கு இன்பம் தருகின்றன; அவை எனக்கு அறிவுரை தருகின்றன. -பல்லவி

72 நீர் திருவாய் மலர்ந்த சட்டம், ஆயிரக்கணக்கான பொன், வெள்ளிக் காசுகளை விட எனக்கு மேலானது. 103 உம் சொற்கள் என் நாவுக்கு எத்துணை இனிமையானவை! என் வாய்க்குத் தேனினும் இனிமையானவை. -பல்லவி

111 உம் ஒழுங்குமுறைகளை என்றும் என் உரிமைச் சொத்தாய்க் கொண்டுள்ளேன். ஆகவே, அவை என் இதயத்தை மகிழ்விக்கின்றன. 131 வாயை `ஆ'வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்; ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின் தொடர்கின்றன, என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 45-48

அக்காலத்தில் இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார். அவர்களிடம், `` `என் இல்லம் இறைவேண்டலின் வீடு' என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்'' என்று கூறினார். இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள். ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு எருசலேம் நகரை நெருங்கி வந்ததும் அதைப் பார்த்து அழுதார்... அதைப் பார்த்து, '...உன் பகைவர்கள் உன்னையும் உன்னிடத்திலுள்ள உன் மக்களையும் எப்பக்கத்திலுமிருந்து நெருக்கி அழித்து உன்னைத் தரை மட்டமாக்குவார்கள்' என்றார்'' (லூக்கா 19:41,43-44)

யூத மக்களின் வரலாற்றில் எருசலேம் நகரமும் அங்கிருந்த கோவிலும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. ஒரு நாள் இயேசு எருசலேம் நகரை நெருங்கிவந்து, அது விரைவில் அழியப்போவதை முன்னறிவித்தார். பளிங்குக் கற்களும் பொன்னும் வெள்ளியும் அழகு செய்த அந்நகரம் தரைமட்டமாக்கப்படும் என்று இயேசு கூறிய சொற்கள் கி.பி. 70இல் நிறைவேறின. உரோமைப் படையினர் எருசலேமை அழித்து அங்கிருந்த மக்கள் பலரையும் கொன்றுகுவித்தார்கள். இந்த வரலாற்று நிகழ்ச்சியின் அடிப்படையில் சிலர் யூத மக்களுக்கு எதிரான ஒரு போக்கினைத் தூண்டிவிட்டது உண்மைதான். இருபதாம் நூற்றாண்டில் 6 மில்லியன் யூத மக்களை அடோல்ஃப் ஹிட்லர் கொன்று குவித்ததும் யூதர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பெரும் கொடுமை ஆகும். ஆனால் இரண்டாம் வத்திக்கான் சங்கம் (1962-1965) யூதர்-வெறுப்பு மனநிலை தவறு என்று அறிக்கையிடுகிறது. யூதர்கள்தான் இயேசுவைக் கொன்றவர்கள் என்று குற்றம் சாட்டுவதும் சரியல்ல; இயேசுவின் காலத்தில் வாழ்ந்த யூதர்களில் சிலர் இயேசுவை ஏற்கவில்லை என்பதைக் காரணமாகக் காட்டி இக்காலத்தில் வாழ்கின்ற யூதர்களை வெறுப்பதும் சரியல்ல. அண்மைக் காலத்தில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் யூத மக்களோடு நாம் நல்லுறவை வளர்க்கவேண்டும் என்பதை மிகவே வலியுறுத்தினார். கிறிஸ்தவர்கள் பலர் யூத வெறுப்பு மனநிலையோடு செயல்பட்டதற்காக அவர் 1994இல் வருத்தம் தெரிவித்தார். மேலும், அவர் 2000ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் நாள் எருசலேம் சென்று, அழிந்துபட்ட கோவிலின் மேற்குச் சுவர் அருகே நின்று யூதர்களுக்காக இறைவேண்டல் செய்தார். வரலாற்றில் யூதர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளை நினைத்து கத்தோலிக்க திருச்சபை வருத்தம் தெரிவிக்கிறது என அறிவித்தார். யூத சமயத்தோடும் யூத மக்களோடும் நாம் உரையாடலில் ஈடுபட வேண்டும் என்னும் கருத்தை இன்றைய திருச்சபை மிகவும் வலியுறுத்துகிறது.

இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலத்தில் யூதர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளைத் திருச்சபை போதிய அளவு கண்டித்துப் பேசவில்லை என்று பல யூத அமைப்புக்கள் குறைகூறுகின்றன. அப்போது திருச்சபைத் தலைவராக இருந்த திருத்தந்தை 12ஆம் பயஸ் (பத்திநாதர்) போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் குற்றச்சாட்டு. அக்கால நிகழ்ச்சிகள் பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களைத் திருச்சபைத் தலைமைப் பீடம் முற்றிலுமாக வெளியிட வேண்டும் என்பதும் ஒரு கோரிக்கை. நாசி ஆட்சியினரின் கொடுமையிலிருந்து தப்பிக்கும் வண்ணம் பல யூத குழந்தைகளுக்குக் கிறிஸ்தவ சபை வழக்கப்படி திருமுழுக்கு வழங்கப்பட்டது. இவ்வாறு கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்ட குழந்தைகளை மீண்டும் யூத குடும்பத்தினரோடு சேர்த்துவைக்கவில்லை என்பது இன்னொரு குற்றச் சாட்டு. இவ்வாறு பல குறைகள் சுட்டிக்காட்டப்பட்டாலும் இன்றைய திருச்சபை யூத சமயத்தோடும் யூத மக்களோடும் தனக்குள்ள உறவுகளைக் கோடிட்டுக் காட்டுகிறது. இயேசு யூத குடும்பத்தில் பிறந்து, யூதராக வளர்ந்து இறந்தார் என்னும் உண்மையை நாம் மறக்கலாகாது. அவருடைய வாழ்வுக்கு ஊற்றாக இருந்தது யூத சமய ஆன்மிகம்தான். எனவே, கடவுளின் திட்டத்தில் யூத சமயம் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது என்பதை எல்லாக் கிறிஸ்தவ மக்களும் உணர்ந்து, யூத சமயத்தாரோடு உரையாடலில் ஈடுபட்டு, நல்லுறவு கொண்டு வாழ்ந்திட திருச்சபை நம்மை அழைக்கிறது.

மன்றாட்டு:

இறைவா, உம் அருள் பெருக்கின் பெருமையை நாங்கள் வியந்து பாடிட அருள்தாரும்.