யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 31வது வாரம் புதன்கிழமை
2020-11-04




முதல் வாசகம்

கடவுளே நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 12-18

என் அன்பர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிந்து வருகிறீர்கள்; நான் உங்களிடம் வந்தபோது மட்டுமல்ல, அதைவிட அதிகமாக உங்களோடு இல்லாத இப்பொழுதும் கீழ்ப்படிந்து வருகிறீர்கள். எனவே நீங்கள் அச்சத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் மீட்புக்காக உழைத்து வாருங்கள். ஏனெனில், கடவுளே உங்களுள் செயலாற்றுகின்றார். அவரே தம் திருவுளப்படி நீங்கள் செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் தருகிறார். முணுமுணுக்காமலும், வாதாடாமலும் யாவற்றையும் செய்யுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமும் கபடுமற்றவர்களாய்க் கடவுளின் மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்; உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். கிறிஸ்துவின் நாளில் நான் பெருமையடையும் வகையில், வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். வீணாக நான் ஓடவில்லை, வெறுமனே நான் உழைக்கவில்லை என்பது அதனால் தெளிவாகும். நம்பிக்கையால் நீங்கள் படைக்கும் பலியில் நான் என் இரத்தத்தையே பலிப்பொருளாக வார்க்கவேண்டியிருப்பினும் அது எனக்கு மகிழ்ச்சியே. அம்மகிழ்ச்சியை நான் உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறேன். அது போலவே நீங்களும் மகிழ்ச்சியடையுங்கள். உங்கள் மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.
திருப்பாடல் 27: 1. 4. 13-14

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? பல்லவி

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 25-33

அக்காலத்தில் பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: ``என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது. உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்க மாட்டாரா? இல்லா விட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, `இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை' என்பார்களே! வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும் போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேடமாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர், சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது' என்றார்'' (லூக்கா 14:26)

பழைய மொழிபெயர்ப்பில் ''...தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால்'' என்பது ''...தன் உயிரையுமே வெறுக்காவிட்டால்'' என்றிருந்தது. கிரேக்க மூலத்தில் ''வெறுக்காவிட்டால்'' என்றுதான் உள்ளது. ஆகவே, இயேசுவைப் பின்செல்வோர் தம் குடும்பத்தையும் தம்மையும் ''வெறுக்க வேண்டுமா'' என்னும் கேள்வி எழுகிறது. ''வெறுப்பு'' என்னும் சொல் ஓர் உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. நமக்கு விருப்பமில்லாததை நாம் ''வெறுக்கிறோம்'' எனலாம். குடும்பத்தை வெறுக்க வேண்டும் என்றால் இவ்வாறு ''உணர்ச்சி''யளவில் நாம் குடும்பத்தைப் ''பகைக்க வேண்டும்'' என்று பொருள் ஆகாது. அதுபோல நாம் நம்மையே ''வெறுக்கவேண்டும்'' என்றால் நம்மைப் பற்றித் தாழ்வு மனப்பான்மை கொண்டிருக்க வேண்டும் என்று பொருளாகாது. ''வெறுப்பு'' என்னும் சொல் நம்மைப் பற்றிப் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை இங்கே குறிக்கிறது. அதாவது, நாம் குடும்பத்தையும் நம் உயிரையும் விட இயேசு கிறிஸ்துவைப் பின்செல்வதை ''மேலானதாக''க் கருத வேண்டும். இவ்வாறு நாம் கருதுவதைப் பார்க்கின்ற பிற மக்கள் நாம் குடும்பத்தையும் நம் உயிரையும் ''வெறுக்கிறோம்'' என்னும் முடிவுக்குத் தான் வருவார்கள். ஆனால் இயேசு இத்தகைய முடிவுபற்றிக் கவலைப்படவில்லை. அவரே தம் குடும்பத்தை விட்டுவிட்டுத் தம் வாழ்க்கையை இறையாட்சிப் பணிக்காக அர்ப்பணித்தார். தம் ''தந்தையின் அலுவல்களில்'' அவர் ஈடுபட்டிருந்தார் (காண்க: லூக் 2:49). தம் உயிரை நமக்காகச் சிலுவையில் கையளித்தார். தந்தையின் திருவுளத்திற்கு அமைந்து வாழ்வதே இயேசுவின் வாழ்க்கைக் குறிக்கோளாக இருந்தது,

இயேசுவைப் பின்சென்ற சீடர்கள் தங்கள் பெற்றோரையும், மனைவி பிள்ளைகளையும், சகோதர சகோதரிகளையும் விட்டுவிட்டு அவரைப் பின்சென்றார்கள் என்றால் அவ்வாறு கைவிடப்பட்ட குடும்பத்தின் நிலை என்னவாயிற்று என்னும் கேள்வி எழலாம். அக்குடும்பத்தினர் துன்புற்றிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. மகன் பெற்றோருக்கு உதவ வேண்டும் என்பதும் கணவன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தேவையான பொருள் ஈட்டிக் கொடுக்க வேண்டும் என்பதும் அக்கால வழக்கம். குறிப்பாக, பெண்கள் பொருளாதார நிலையில் தனித்துச் செயல்பட முடியாத சூழமைவே அன்று இருந்தது. ஆக, சீடர்கள் தம் குடும்பத்தை விட்டு இயேசுவைப் பின்சென்ற போது அக்குடும்பத்தினர் பல துன்பங்களைச் சந்தித்திருப்பார்கள் என நாம் உறுதியாகக் கூறலாம். என்றாலும் இத்தகைய துன்பம் இரண்டு மூன்று ஆண்டுகளே நீடித்திருக்க வேண்டும். ஏனென்றால் இயேசுவின் சிலுவைச் சாவுக்குப் பிறகு, அவர் உயிர்பெற்றெழுந்ததும் சீடர்கள் தங்கள் குடும்பத்தினரோடு மீண்டும் உறவு ஏற்படுத்தியிருப்பார்கள் எனத் தெரிகிறது. எடுத்துக்காட்டாக, பவுல் ''மற்றத் திருத்தூதரும் ஆண்டவருடைய சகோதரரும் கேபாவும் செய்வது போல நம்பிக்கை கொண்டுள்ள மனைவியரை எங்களோடு அழைத்துச் செல்ல எங்களுக்கு உரிமை இல்லையா?'' என்று கேட்கிறார் (காண்க: 1 கொரி 9:5). இதிலிருந்து கேபா (பேதுரு) மற்றும் சீடர்கள் தங்கள் குடும்பத்தினரோடு உறவாடத் தொடங்கினர் என்பது தெரியவருகிறது. எவ்வாறாயினும், இயேசுவைப் பின்செல்வோர் தம் சொந்தக் குடும்பம், சொத்து, ஏன் தம் உயிர் என பற்றுக்கொண்டு வாழாமல் அனைத்தையும் கிறிஸ்துவின் பொருட்டுத் துறந்துவிடவும் தயாராக இருக்க வேண்டும் என்னும் இயேசுவின் போதனை இக்காலத்தில் வாழ்கின்ற நமக்கும் பொருந்தும்.

மன்றாட்டு:

இறைவா, பற்றற்ற உள்ளத்தோடு உம்மைப் பற்றிக் கொள்ள எங்களுக்கு அருள்தாரும்.