யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 30வது வாரம் சனிக்கிழமை
2020-10-31




முதல் வாசகம்

நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18-26

சகோதரர் சகோதரிகளே, எப்படியும் கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆம், இனியும் மகிழ்ச்சியடைவேன். இவ்வாறு உங்கள் மன்றாட்டும் இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் துணையும் என் விடுதலைக்கு வழி வகுக்கும் என நான் அறிவேன். என்ன நேர்ந்தாலும் வெட்கமுற மாட்டேன். இன்றும் என்றும், வாழ்விலும் சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப்படுத்துவேன். இதுவே என் பேராவல், இதுவே என் எதிர்நோக்கு. ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்துகொள்வதென எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே ஓர் இழுபறி நிலையில் உள்ளேன். உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம்: இதுவே மிகச் சிறந்தது: ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம்: இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது. நான் உங்களோடு இருப்பதால் நீங்கள் நம்பிக்கையில் வளர்ச்சி பெற்று மகிழ்ச்சியடைவீர்கள். எனவே உங்கள் அனைவரோடும் தொடர்ந்து தங்கியிருப்பேன் என உறுதியாக நம்புகிறேன். ஆகவே, நான் உங்களிடம் மீண்டும் வருவதால், கிறிஸ்து இயேசுவின் உறவில் வாழும் நீங்கள் என் பொருட்டு இன்னும் மிகுதியாகப் பெருமிதம் கொள்வீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: உயிருள்ள இறைவன்மீது என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது.
திருப்பாடல் 42: 1. 2. 4

கலைமான் நீரேடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. பல்லவி

2 என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப் போகின்றேன்? பல்லவி

4மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப் பாடல்களும் முழங்க விழாக் கூட்டத்தில் நடந்தேனே. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1,7-11

அக்காலத்தில் ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்துகொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: ``ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், `இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், `நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும் பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு அவர்களை நோக்கி, 'உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ மாடோ கிணற்றில்; விழுந்தால் ஓய்வுநாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிடமாட்டாரா?' என்று கேட்டார். அதற்குப் பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை'' (லூக்கா 14:5-6)

எதற்கெடுத்தாலும் சட்டத்தை மேற்கோள் காட்டுகின்ற மனிதர்கள் சட்டம் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதைச் சில வேளைகளில் மறந்துவிடுகிறார்கள், அல்லது வேண்டுமென்றே மறைத்துவிடுகிறார்கள். ஓய்வுநாள் பற்றிய சட்டத்தைத் துல்லியமாகக் கடைப்பிடிப்பதாகக் கூறிய பரிசேயர்கள் இவ்வாறு நடந்துகொண்டதை இயேசு பல முறை கடிந்ததுண்டு. ஆடுமாடுகளுக்கு ஆபத்து நேர்ந்தால் அவற்றைக் காக்க வேண்டும் என்னும் சட்டம் பழைய ஏற்பாட்டில் உண்டு. ''உனக்கு அடுத்திருப்பவனின் கழுதையோ மாடோ வழியில் விழுந்து கிடப்பதைக் கண்டும் காணாதவன்போல் இருந்துவிடாதே. அதைத் தூக்கிவிட அவனுக்கு உதவி செய்'' (இச 22:4) என்பது இணைச்சட்டம் அளித்த ஒழுங்குமுறை. வேறொருவரது மாடோ கழுதையோ குழியில் விழுந்து இறந்துவிட்டால் அதற்கு எவ்வாறு ஈடுசெய்வது என்பது பற்றியும் சட்டம் இருந்தது (காண்க: விப 21:33-34). இவ்வாறு மனித நலனுக்கு ஆதரவான சட்டங்கள் இருந்த பிறகும் பரிசேயர் இயேசுவிடத்தில் குறைகண்டனர். இயேசு ஆடுமாடு போன்ற விலங்குகளைக் காப்பது தவறு எனக் கூறவில்லை. மாறாக, மனிதருக்கு நன்மை செய்வதற்குக் காலம் நேரம் பார்க்கலாகாது எனவும், எந்த தருணத்திலும் நாம் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும் எனவும் இயேசு கற்பிக்கிறார். அவருடைய போதனையைக் கேட்ட பரிசேயர் இயேசு கேட்ட கேள்விக்குப் பதில் கொடுக்காமல் ''அமைதியாய் இருந்தனர்'' (லூக் 14:4). அது மட்டுமல்ல, இயேசுவின் கேள்விக்குப் ''பதில் சொல்ல அவர்களால் இயலவில்லை'' (லூக் 14:6).

இன்றைய உலகிலும் ஏழை எளியவர்க்கும் தாழ்த்தப்பட்டோர்க்கும் எதிராக இருக்கின்ற சட்ட திட்டங்களைக் கேள்விக்கு உள்ளாக்குகின்ற மனிதரைப் பார்த்து ''அமைதி காக்கின்ற'' போக்கு நிலவுவதை நாம் பார்க்கலாம். அநீதியான அமைப்புகளை மாற்றியமைத்து மனித வாழ்வை மேம்படுத்துகின்ற அமைப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடாமல் ''அமைதி காப்போர்'' பலர் உண்டு. ஆடுமாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படுவோர் மனிதருக்கு ஆதரவாக ஏன் செயல்படுவதில்லை என நம்மை நோக்கிக் கேட்கின்ற இயேசுவுக்கு நம்மால் ''பதில் சொல்ல இயலாது'' என்பதே உண்மை.

மன்றாட்டு:

இறைவா, அன்பு என்னும் சட்டத்தைக் கடைப்பிடிப்பதில் நாங்கள் உறுதியாயிருக்க அருள்தாரும்.