யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 13வது வாரம் சனிக்கிழமை
2020-07-04




முதல் வாசகம்

என் மக்களாகிய இஸ்ரயேலை முன்னைய நன்னிலைக்குக் கொண்டு வருவேன்.
இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 9: 11-15

ஆண்டவர் கூறுவது: ``அந்நாள்களில் விழுந்து கிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் உயர்த்துவேன். அதிலுள்ள கிழிசல்களைப் பழுதுபார்த்துச் சிதைந்தவற்றைச் சீர்படுத்திப் பண்டை நாளில் இருந்தது போல் மீண்டும் கட்டி எழுப்புவேன். அப்பொழுது, ஏதோமில் எஞ்சியிருப்போரையும் எனது பெயரைத் தாங்கியிருக்கும் பிற இனத்தார் அனைவரையும் அவர்கள் தங்கள் உடைமை ஆக்கிக் கொள்வார்கள்,'' என்கிறார் இதைச் செயல்படுத்தும் ஆண்டவர். ``இதோ! நாள்கள் வரப் போகின்றன; அப்போது, அறுவடை செய்வோரை உழுவோரும், கனி பிழிவோரை விதைப்போரும் தொடர்ந்து முன்னேறுவர்; மலைகள் இனிய இரசத்தைப் பொழியும்; குன்றுகள்தோறும் அது வழிந்தோடும்'' என்கிறார் ஆண்டவர். ``என் மக்களாகிய இஸ்ரயேலை முன்னைய நன்னிலைக்குக் கொண்டு வருவேன்; அவர்கள் பாழடைந்த நகர்களைத் திரும்பக் கட்டி அவற்றில் குடியேறுவார்கள்; திராட்சைத் தோட்டங்களை அமைத்து அவற்றின் கனிரசத்தை அருந்துவார்கள். பழத் தோட்டங்கள் அமைத்து அவற்றின் கனிகளை உண்பார்கள். அவர்களைத் தங்கள் நாட்டில் மீண்டும் நான் வேரூன்றச் செய்வேன்; நான் அவர்களுக்கு அளித்திருக்கும் நாட்டிலிருந்து இனி ஒருபோதும் அவர்கள் பிடுங்கப்பட மாட்டார்கள்'' என்கிறார் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தம் மக்களுக்கு நிறைவாழ்வை வாக்களிக்கின்றார்.
திருப்பாடல் 85: 8 10-11. 12-13

ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார். பல்லவி

10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். 11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். பல்லவி

12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும். 13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன.

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-17

அக்காலத்தில் யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, ``நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?'' என்றனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ``மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்பொழுது அவர்களும் நோன்பு இருப்பார்கள். மேலும் எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில் அந்த ஒட்டு ஆடையைக் கிழித்துவிடும்; கிழிசலும் பெரிதாகும். அதுபோலப் பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் தோற்பைகள் வெடிக்கும்; மதுவும் சிந்திப்போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் வீணாய்ப் போகா'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

அவர்களும் நோன்பு இருப்பார்கள் !

தமது சீடர்கள் நோன்பிருக்காததை நியாயப்படுத்திப் பேசிய இயேசு, கடைசியாகச் சொன்ன சொற்கள்: “அவர்களும் நோன்பு இருப்பார்கள் ” என்பதுதான். எனவே, நாமும் நோன்பிருக்க வேண்டும். தவக்காலத் திருப்பலியின் நான்காம் தொடக்கவுரை இறைவனுக்கு இவ்வாறு நன்றி சொல்கிறது: “எங்கள் ஒறுத்தல் முயற்சியால் மனத்தை மேலே எழுப்புகின்றீர். ஆணவத்தை அடக்குகின்றீர். நற்பலன்களையும், அதன் பரிசான நல்வாழ்வையும், எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக வழங்குகின்றீர்”. ஆம், நோன்பு இருப்பதால், பல நன்மைகள் நிகழ்கின்றன. அவற்றில் மூன்றைச் சொல்லி, நன்றி சொல்கிறது இத்திருப்பலிச் செபம். நோன்பிருப்பதால் நமது ஆணவம் அடங்குகிறது. மனம் இறைவனை நோக்கி எழும்புகிறது. இறைவனும் நமது நோன்பை, இழப்பை ஏற்று, நற்பலனைப் பரிசாகத் தருகின்றார் என்பதுதான் நமது நம்பிக்கை, இறையியல். எனவே, நாமும் நோன்பிருப்போம். நல்வாழ்வில் வளர்வோம்.

மன்றாட்டு:

அன்பின் தெய்வமே இறைவா, அவர்களும் நோன்பிருப்பார்கள் என்று சொல்லி, எங்களை நோன்பிருக்க அழைப்பதற்காக உமக்கு நன்றி. நாங்கள் தாராள மனத்துடன் நோன்பை மேற்கொள்ள அருள்தாரும். எங்கள் நோன்பு உமக்கு ஏற்றதாக அமைவதாக. உமக்கு மாட்சி அளிப்பதாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.