யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 6வது வாரம் புதன்கிழமை
2020-05-20




முதல் வாசகம்

நீங்கள் அறியாமல் வழிபட்டுக்கொண்டிருக்கும் அந்தத் தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 17: 15,22 - 18: 1

அந்நாள்களில் பவுலுடன் சென்றவர்கள் அவரை ஏதென்சு வரை அழைத்துச் சென்றார்கள். சீலாவும் திமொத்தேயுவும் விரைவில் வந்து சேரவேண்டும் என்னும் கட்டளையைப் பவுலிடமிருந்து பெற்றுக்கொண்டு அவர்கள் திரும்பிச் சென்றார்கள். அரயோப்பாகு மன்றத்தின் நடுவில் பவுல் எழுந்து நின்று கூறியது: ``ஏதென்சு நகர மக்களே, நீங்கள் மிகுந்த சமயப் பற்றுள்ளவர்கள் என்பதை நான் காண்கிறேன். நான் உங்களுடைய தொழுகையிடங்களை உற்றுப் பார்த்துக்கொண்டு வந்தபோது `அறியாத தெய்வத்துக்கு' என்று எழுதப்பட்டிருந்த பலிபீடம் ஒன்றைக் கண்டேன். நீங்கள் அறியாமல் வழிபட்டுக்கொண்டிருக்கும் அந்தத் தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். உலகையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்த கடவுள் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவர். மனிதர் கையால் கட்டிய திருக்கோவில்களில் அவர் குடியிருப்பதில்லை. அனைவருக்கும் உயிரையும் மூச்சையும் மற்றனைத்தையும் கொடுப்பவர் அவரே. எனவே மனிதர் கையால் செய்யும் ஊழியம் எதுவும் அவருக்குத் தேவையில்லை. ஒரே ஆளிலிருந்து அவர் மக்களினம் அனைத்தையும் படைத்து அவர்களை மண்ணுலகின்மீது குடியிருக்கச் செய்தார்; அவர்களுக்குக் குறிப்பிட்ட காலங்களையும் குடியிருக்கும் எல்லைகளையும் வரையறுத்துக் கொடுத்தார். கடவுள் தம்மை அவர்கள் தேடவேண்டும் என்பதற்காக இப்படிச் செய்தார்; தட்டித் தடவியாவது தம்மைக் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தார். ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார். அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம். உங்கள் கவிஞர் சிலர் கூறுவதுபோல, `நாம் அவருடைய பிள்ளைகளே.' நாம் கடவுளுடைய பிள்ளைகளாய் இருப்பதால், மனிதக் கற்பனையாலும் சிற்ப வேலைத் திறமையாலும் உருவாக்கப்பட்ட பொன், வெள்ளி, கல் உருவங்களைப்போலக் கடவுள் இருப்பார் என நாம் எண்ணுவது முறையாகாது. ஏனெனில் மக்கள் அறியாமையில் வாழ்ந்த காலத்தில் கடவுள் இதனைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் இப்போது எங்குமுள்ள மக்கள் யாவரும் மனம் மாற வேண்டும் என்று அவர் கட்டளையிடுகிறார். ஏனென்றால் ஒரு நாள் வரும். அப்போது தாம் நியமித்த ஒருவரைக் கொண்டு அவர் உலகத்துக்கு நேர்மையான தீர்ப்பு அளிப்பார். இறந்த அவரை உயிர்த்தெழச் செய்ததன் வாயிலாக இந்நம்பிக்கை உறுதியானது என எல்லாருக்கும் தெளிவுபடுத்தினார்.'' `இறந்தவர் உயிர்த்தெழுதல்' என்பது பற்றிக் கேட்டதும் சிலர் அவரைக் கிண்டல் செய்தனர். மற்றவர்கள், ``இதைப்பற்றி நீர் மீண்டும் வந்து பேசும்; கேட்போம்'' என்றார்கள். அதன்பின் பவுல் அவர்கள் நடுவிலிருந்து வெளியே சென்றார். சிலர் நம்பிக்கை கொண்டு அவர்களுடன் சேர்ந்துகொண்டனர். அவர்களுள் அரயோபாகு மன்றத்தின் உறுப்பினரான தியோனிசியுவும் தாமரி என்னும் பெண் ஒருவரும் வேறு சிலரும் அடங்குவர். இவற்றுக்குப் பின்பு பவுல் ஏதென்சை விட்டுக் கொரிந்துக்குப் போய்ச் சேர்ந்தார்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, விண்ணும் மண்ணும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன
திருப்பாடல் 148: 1-2. 11-12. 13. 14

1 விண்ணுலகில் உள்ளவையே, ஆண்டவரைப் போற்றுங்கள்; உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள். 2 அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்; அவருடைய படைகளே, நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள். பல்லவி

11 உலகின் அரசர்களே, எல்லா மக்களினங்களே, தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே, 12 இளைஞரே, கன்னியரே, முதியோரே மற்றும் சிறியோரே, நீங்கள் எல்லாரும் ஆண்டவரைப் போற்றுங்கள். பல்லவி

13 அவர்கள் ஆண்டவரின் பெயரைப் போற்றுவார்களாக; அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது; அவரது மாட்சி விண்ணையும் மண்ணையும் கடந்தது. பல்லவி

14 அவர் தம் மக்களின் ஆற்றலை உயர்வுறச் செய்தார்; அவருடைய அனைத்து அடியாரும் அவருக்கு நெருங்கிய அன்பார்ந்த மக்களாகிய இஸ்ரயேல் மக்களும் அவரைப் போற்றுவார்கள். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 12-15

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் `அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்' என்றேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல' என்றார்'' (யோவான் 14:27)

இயேசு தம்மோடு பந்தியமர்ந்திருக்கின்ற தம் சீடர்களுக்கு அமைதியை வாக்களிக்கிறார். வழக்கமாகக் கூறப்படுகிற வாழ்த்துச் சொல் ''அமைதி!'' என்பதாகும். இயேசு சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்து தம் சீடர்களுக்குத் தோன்றிய போதும் ''உங்களுக்கு அமைதி உண்டாகுக!'' என வாழ்த்தினார். இவ்வாறு இயேசு வாக்களிக்கின்ற அமைதி உலகம் தருகின்ற அமைதி அல்ல. அதாவது, கடவுளிடமிருந்து வருகின்ற அமைதி நம்மைக் கடவுளோடு ஒன்றிணைக்கின்ற சக்தி கொண்டது. கடவுளே நம் குற்றங்களை மன்னித்து நம்மைத் தம் பிள்ளைகளாக ஏற்பதால் நாம் கடவுளின் அமைதியில் பங்கேற்கிறோம். இந்த அமைதியை உலகமோ உலகத்திலுள்ள எந்த சக்தியோ நமக்குத் தர இயலாது. எனவே, இயேசு வாக்களிக்கின்ற அமைதி நம்மைக் கடவுளோடு உறவாக்குகின்ற அதே வேளையில் நம்மை அடுத்திருப்போரோடும் நாம் நல்லுறவில் வாழ்ந்திட நமக்கு வழியாகிறது.

இயேசு கொணர்கின்ற அமைதி சொல்லளவில் நின்றுவிடாது. மாறாக, கடவுளின் வல்லமையால் அமைதி செயலாக்கப்படும். இயேசு காற்றையும் கடலையும் நோக்கி, ''அமைதியாயிரு!'' என்றதும் ''மிகுந்த அமைதி'' உண்டாயிற்று (காண்க: மாற் 4:39). ஆனால் கடவுள் அமைதி கொணர்வது இயற்கையைத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதோடு நின்றுவிடுவதில்லை. அது மனித உள்ளங்களைப் பண்படுத்தி எல்லா மனிதரும் அன்பும் நீதியும் நிறைந்த உலகை உருவாக்கிட அவர்களுக்கு ஊக்கம் தருகின்ற சக்தியாகவும் செயல்படுகிறது. எனவே, அமைதி என்பது போர் நிகழா நிலை மட்டுமல்ல, மாறாக, கடவுள் உலகுக்கென்று வகுத்த திட்டத்தை மனிதர் நன்மனத்தோடு இணைந்து செயல்படுத்துவதன் பயனாகவே அமைதி தோன்றும். இத்தகைய அமைதி கடவுளின் கொடையாக நமக்கு அளிக்கப்படும் என இயேசு கற்பிக்கிறார். ஆனால் இக்கொடையை நாம் நன்றியோடு பெற்றுக்கொள்ள வேண்டும். அது நிலையாக நம்மிடையே நிலவிட நாம் உழைக்கவும் வேண்டும். ஆக, கடவுள் வாக்களிக்கின்ற அமைதி நம் உள்ளத்திலும் இல்லத்திலும் உலகிலும் நிலவித் தழைத்திட வேண்டும் என்றால் கடவுளின் அருளோடு நாமும் ஒத்துழைப்பது தேவை.

மன்றாட்டு:

இறைவா, உம் அமைதியை எங்களுக்கும் இவ்வுலகிற்கும் அளித்தருளும்.