யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 4வது வாரம் சனிக்கிழமை
2020-05-09




முதல் வாசகம்

சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 44-52

அடுத்து வந்த ஓய்வுநாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் கூடிவந்தனர். மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப் பழித்துரைத்தார்கள். பவுலும் பர்னபாவும் துணிவுடன், ``கடவுளின் வார்த்தையை உங்களுக்குத்தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித் தள்ளி நிலைவாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம். ஏனென்றால், `உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்' என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்'' என்று எடுத்துக் கூறினார்கள். இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட் டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது. ஆனால் யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள். அவர்கள் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு இக்கோனியாவுக்குச் சென்றார்கள். சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

மாந்தர் அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
திருப்பாடல் 98: 1. 2-3, 3-4

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன. -பல்லவி

2 ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார். 3 இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். -பல்லவி

3 உலகெங்குமுள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர். 4 உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள், என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 7-14

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி: ``நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்'' என்றார். அப்போது பிலிப்பு அவரிடம், ``ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்'' என்றார். இயேசு அவரிடம் கூறியது: ``பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, `தந்தையை எங்களுக்குக் காட்டும்' என்று நீ எப்படிக் கேட்கலாம்? நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால், என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் என் பெயரால் கேட்பதையெல்லாம் நான் செய்வேன். இவ்வாறு தந்தை மகன் வழியாய் மாட்சி பெறுவார். நீங்கள் என் பெயரால் எதைக் கேட்டாலும் செய்வேன்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

'''மீண்டும் இயேசு, 'நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்' என்றார்'' (யோவான் 14:1)

இயேசு ம் சீடர்களோடு இறுதி முறையாக உணவருந்துகிறார். யூதாசு இயேசுவைக் காட்டிக்கொடுக்கப் போவதை இயேசு முன்னறிவிக்கிறார். அதுபோல, பேதுரு கூடத் தம்மை மறுதலிக்கப்போகிறார் என இயேசு கூறுகிறார். இதையெல்லாம் கேட்டதும் சீடர்களின் உள்ளத்தில் ஒரே கலக்கம். தங்கள் குருவும் தலைவருமாகிய இயேசு ஏன் இவ்வாறு பேசுகிறார் என அவர்கள் திகைக்கின்றனர். அப்போது இயேசு அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறுகிறார்: ''நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்'' (யோவா 14:1). சீடர்கள் கவலையை விட்டொழித்து, கடவுளிடத்தில் தங்கள் நம்பிக்கையை வைக்கவேண்டும். கடவுளால் அனுப்பப்பட்டு இவ்வுலகிற்கு வந்த இயேசுவிடம் நம்பிக்கை கொள்ள வேண்டும் - இதுவே இயேசு அவர்களிடமிருந்து எதிர்பார்த்த பதில். இவ்வாறு சீடர்கள் கடவுளையும் இயேசுவையும் நம்பி ஏற்பதாக இருந்தால் அவர்களுக்குக் கடவுளோடு எந்நாளும் நிலைத்து வாழ்கின்ற பேறு கிடைக்கும். இதைக் குறிப்பிட்டே இயேசு, ''என் தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன'' என்றும், ''நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள்'' என்றும் கூறுகிறார் (காண்க: யோவா 14:2,3).

''தந்தை வாழும் இடம் (இல்லம்)'' என இயேசு எருசலேம் கோவிலை முன்னொரு நாள் குறிப்பிட்டிருந்தார் (காண்க: யோவா 2:16). அந்த இல்லம் இடிபட்டு விழுந்தாலும் அதை மீண்டும் கட்டி எழுப்புவதாக இயேசு கூறியிருந்தார். ''இயேசு தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார்'' (யோவா 2:21) என யோவான் குறிப்பிடுகிறார். எனவே, இயேசுவே தந்தை வாழும் இடம் (கோவில்) என்பது தெளிவாகிறது. இவ்வாறு, கடவுளின் இல்லமாக இயேசுவே நம்மிடையே இருப்பதால் இயேசுவின் சீடர்கள் அவரிடத்தில் உறைவிடம் பெறுவார்கள். இயேசு தம்மை நம்புவோருக்குத் தம் வாழ்வில் பங்களிப்பார். அவர்கள் இயேசுவோடு இணைந்திருப்பர். இயேசுவே கடவுளின் இல்லமாக இருப்பதால் அவர்கள் தந்தையோடும் இயேசுவோடும் அன்புறவில் பிணைந்திருப்பர். இவ்வாறு கடவுளின் அன்பில் நிலைத்திருப்போருக்கு இயேசு நிலைவாழ்வை வாக்களிக்கிறார். அந்த வாழ்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நாம் இயேசுவிடத்தில் நம்பிக்கை கொள்ளவேண்டும். இயேசுவை வழியாகக் கொண்டு, அவர் அறிவிக்கின்ற உண்மையை நம் வாழ்வில் ஏற்றுச் செயல்பட்டால் நிலைவாழ்வைக் கண்டடைவோம். இயேசு கூறுகிறார்: ''வழியும் உண்மையும் வாழ்வும் நானே'' (யோவா 14:6)

மன்றாட்டு:

இறைவா, நிலைவாழ்வுக்கு வழியான இயேசுவை நாங்கள் பின்சென்றிட அருள்தாரும்.