யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா எண்கிழமையில் வெள்ளிக்கிழமை
2020-04-17




முதல் வாசகம்

இயேசுவில் அன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 1-12

அந்நாள்களில் பேதுருவும் யோவானும் மக்களோடு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குருக்களும் சதுசேயர்களும் கோவில் காவல் தலைவரும் அங்கு வந்தார்கள்; அவர்கள் மக்களுக்குக் கற்பிப்பதையும் இறந்தோர் இயேசுவின்மூலம் உயிர்த்தெழுவர் என்று அறிவித்ததையும் கண்டு எரிச்சல் அடைந்து, அவர்களைக் கைது செய்தார்கள்; ஏற்கெனவே மாலையாகி விட்டதால் மறுநாள்வரை காவலில் வைத்தார்கள். அவர்களுடைய வார்த்தைகளைக் கேட்ட பலரும் நம்பிக்கை கொண்டனர். இவ்வாறு நம்பிக்கை கொண்ட ஆண்களது எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். மறுநாள் தலைவர்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் எருசலேமில் ஒன்றுகூடினார்கள். அவர்களுடன் தலைமைக் குருவான அன்னாவும், கயபா, யோவான், அலக்சாந்தர் ஆகியோரும், தலைமைக் குருவின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் கூடியிருந்தார்கள். அவர்கள் திருத்தூதர்களை நடுவில் நிறுத்தி, ``நீங்கள் எந்த வல்லமையால், அல்லது எந்தப் பெயரால் இதனைச் செய்தீர்கள்?'' என்று வினவினார்கள். அப்பொழுது பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: ``மக்கள் தலைவர்களே, மூப்பர்களே, உடல் நலமற்றிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம். நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். இந்த இயேசுவே, `கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக் கல்லாக விளங்குகிறார்.' இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.''

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

: கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்தின் மூலைக்கல் ஆயிற்று!
திருப்பாடல் 118: 1-2,4. 22-24. 25-27

1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 2 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! 4 `என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக. பல்லவி

22 கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! 23 ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! 24 ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். பல்லவி

25 ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றி தாரும்! 26 ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். 27ய ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 1-14

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர். அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், ``நான் மீன்பிடிக்கப் போகிறேன்'' என்றார். அவர்கள் ``நாங்களும் உம்மோடு வருகிறோம்'' என்று, போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்துகொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், ``பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ``இல்லை'' என்றார்கள். அவர், ``படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்'' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், ``அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்'' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்ற சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள். படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், ``நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்'' என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இயேசு அவர்களிடம், ``உணவருந்த வாருங்கள்'' என்றார். சீடர்களுள் எவரும், ``நீர் யார்?'' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'எல்லாம் நிறைவேறிற்று' என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்'' (யோவான் 19:30)

இயேசு சிலுவையில் அறையப்பட்டு ஒரு குற்றவாளியைப் போல இறந்தார். சிலர் அவரை அரசியல் குற்றவாளியாக, சமயக் கொள்கைகளை மறுத்த துரோகியாகப் பார்த்தார்கள். நாட்டிற்கும் சமயத்திற்கும் எதிராகச் செயல்படுவோர் சரியான தண்டனை பெறவேண்டும் எனக் கருதியோர் இயேசுவின் சாவு பற்றி அதிகம் கவலைப்பட்டிருக்கமாட்டார்கள். ஆனால் இயேசுவின் வரலாற்றில் மனித ஆட்கள் மட்டுமே செயல்படவில்லை. இயேசுவின் வரலாறு கடவுள் இவ்வுலகில் மக்களோடு செய்துகொண்ட அன்பு உடன்படிக்கையின் தொடர் வரலாறு. எனவே, கடவுளிடமிருந்து வந்த இயேசு தம் சொந்த விருப்பப்படி செயல்படாமல் தம்மை அனுப்பிய தந்தையின் விருப்பப்படியே செயல்பட்டார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய இயேசு தம் சொல், செயல், பணி வழியாக மக்களுக்கு நன்மை செய்துகொண்டே போனார். அவருடைய அன்பையும் இரக்கத்தையும் அனுபவித்து உணர்ந்த மனிதர் பலர் இருந்தனர். இயேசு யார் என்பதை அவர்கள் படிப்படியாக அறிந்துகொண்டார்கள். இயேசு ஆற்றிய பணியின் இறுதிக்கட்டம் அவருடைய சிலுவைச் சாவு ஆகும். அதே நேரத்தில் இயேசுவின் பணி முழுமைபெற்றதும் சிலுவையில்தான். எனவே, ''எல்லாம் நிறைவேறிற்று'' என இயேசு சிலுவையில் தொங்கியபோது கூறிய சொற்களை நாம் இரு விதங்களில் புரிந்துகொள்ளலாம். கடவுள் வகுத்த திட்டத்தை இயேசு நிறைவுக்குக் கொணர்ந்தார் என்பது ஒரு பொருள். இயேசு ஆற்றிய பணி தன் முழுமையை எய்தியது சிலுவையில் என்பது மறு பொருள். ஆக, இயேசு நிறைவேற்றிய பணி தன்னிலே முழுமைபெற்றது என்றாலும் அதன் பயன்கள் நம்மை வந்தடைய வேண்டும் என்றால் நாமும் இயேசுவின் பணியோடு நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும்.

சிலுவைச் சாவு இயேசு பெற்ற புதுவாழ்வுக்கு வழியாக அமைந்தது. எனவே, சிலுவையில் உயிர்துறந்த இயேசு ஏதோ ஒன்றை இழந்தவர்போல அல்லாமல் நமக்குத் தம்மையே மனமுவந்து கையளித்தார் என்பதே பொருத்தம். தம்மை நமக்குக் கையளித்த இயேசு தம் ''ஆவியை ஒப்படைத்தார்''. ஆவி என்பது உயிர்மூச்சைக் குறிக்கும். நாம் மூச்சுவிடும்போது உயிரோடு இருக்கிறோம் என்பது பொருள். மூச்சு நின்றுபோகும் வேளையில் உயிரும் நம்மைவிட்டுப் பிரிந்துவிடுகிறது. எனவே, இயேசு நமக்கு வழங்குகின்ற ''ஆவி'' அவர் நமக்குத் தருகின்ற உயிரைக் குறிக்கிறது. இயேசுவின் ஆவியைப் பெற்ற நாம் உயிர் வாழ்கிறோம். நமக்குப் புது வாழ்வு வழங்கப்பட்டது. எனவே இயேசுவின் சாவு குறித்து நாம் துயரப்படுவதற்குப் பதிலாக மகிழ்ச்சியடைய வேண்டும் எனலாம். நாம் பெற்ற வாழ்வைப் பிறரோடு பகிர்வது நம் பொறுப்பு.

மன்றாட்டு:

இறைவா, உம்மிடமிருந்து நாங்கள் பெற்ற புதுவாழ்வுக்கு நன்றி!