யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 5வது வாரம் வியாழக்கிழமை
2020-04-02




முதல் வாசகம்

எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 3-9

அந்நாள்களில் ஆபிராம் பணிந்து வணங்க, கடவுள் அவரிடம் கூறியது: ``உன்னுடன் நான் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய். இனி உன் பெயர் ஆபிராம் அன்று; `ஆபிரகாம்' என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய். ஏனெனில் எண்ணற்ற நாடுகளுக்கு உன்னை நான் மூதாதையாக்குகிறேன். மிகப் பெருமளவில் உன்னைப் பலுகச் செய்வேன்; உன்னிடமிருந்து நாடுகளை உண்டாக்குவேன். உன்னிடமிருந்து அரசர்கள் தோன்றுவர். தலைமுறை தலைமுறையாக உன்னுடனும், உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருடனும் என்றுமுள்ள உடன்படிக்கையை நான் நிலைநாட்டுவேன். இதனால் உனக்கும் உனக்குப்பின் வரும் உன் வழிமரபினருக்கும் நான் கடவுளாக இருப்பேன். நீ தங்கியிருக்கும் நாட்டையும் கானான் நாடு முழுவதையும் என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழிமரபினருக்கும் வழங்குவேன். நான் அவர்களுக்குக் கடவுளாக இருப்பேன்'' என்றார். மீண்டும் கடவுள் ஆபிரகாமிடம், ``நீயும் தலைமுறைதோறும் உனக்குப் பின் வரும் உன் வழிமரபினரும் என் உடன்படிக்கையைக் கடைப்பிடிக்க வேண்டும்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்.
திபா 105: 4-5. 6-7. 8-9 (பல்லவி: 8ய)

4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! 5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! 7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்! அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. பல்லவி

8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உங்கள் தந்தை ஆபிரகாம், நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்.

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 51-59

அக்காலத்தில் இயேசு யூதர்களிடம், ``என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

யூதர்கள் அவரிடம், ``நீ பேய் பிடித்தவன்தான் என்பது இப்போது தெரிந்துவிட்டது. ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் என் வார்த்தையைக் கடைப்பிடிப்போர் என்றுமே சாகமாட்டார் என்கிறாயே! எங்கள் தந்தை ஆபிரகாமைவிட நீ பெரியவனோ? ஆபிரகாம் இறந்தார்; இறைவாக்கினரும் இறந்தனர். நீ யாரென்று நினைத்துக்கொண்டிருக்கிறாய்?'' என்றார்கள்.

இயேசு மறுமொழியாக, ``நானே என்னைப் பெருமைப்படுத்தினால், அது எனக்குப் பெருமை இல்லை. என்னைப் பெருமைப்படுத்துபவர் என் தந்தையே. அவரையே நீங்கள் உங்கள் தந்தை என்றும் சொல்கிறீர்கள். ஆனால் அவரை உங்களுக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். எனக்கு அவரைத் தெரியாது என நான் சொன்னால் உங்களைப் போல நானும் பொய்யனாவேன். அவரை எனக்குத் தெரியும். அவருடைய வார்த்தையையும் நான் கடைப்பிடிக்கிறேன். உங்கள் தந்தை ஆபிரகாம் நான் வரும் காலத்தைக் காண முடியும் என்பதை முன்னிட்டுப் பேருவகை கொண்டார்; அதனைக் கண்டபோது மகிழ்ச்சியும் கொண்டார்'' என்றார்.

யூதர்கள் இயேசுவை நோக்கி, ``உனக்கு இன்னும் ஐம்பது வயதுகூட ஆகவில்லை; நீ ஆபிரகாமைக் கண்டிருக்கிறாயா?'' என்று கேட்டார்கள்.

இயேசு அவர்களிடம், ``ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார். இதைக் கேட்ட அவர்கள் அவர்மேல் எறியக் கற்களை எடுத்தார்கள். ஆனால் இயேசு மறைவாக நழுவிக் கோவிலிலிருந்து வெளியேறினார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார்...நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்' என்றார்'' (யோவான் 8:29)

இயேசுவின் வாழ்க்கையில் துலங்கிய ஒரு முக்கியமான பண்பு அவர் எப்போதுமே கடவுளின் திருவுளத்திற்கு அமைந்து நடந்ததாகும். கடவுளிடமிருந்து வந்த இயேசு கடவுள் தன்மை கொண்டவராக இருந்தாலும், நம்மைப் போல மனித இயல்பை ஏற்றுக்கொண்டார். கடவுள் அவருக்கு அளித்த பணியை நிறைவேற்றுவதில் இயேசு கண்ணும் கருத்துமாயிருந்தார். அவர் தம் சொந்த விருப்பப்படி செயல்படவில்லை. மாறாக, கடவுள் எதை விரும்பினாரோ அதையே இயேசுவும் தம் விருப்பமாகக் கொண்டிருந்தார். தம்மை அனுப்பிய கடவுள் தம்மோடு இருப்பதை இயேசு எப்போதுமே உணர்ந்திருந்தார். எனவேதான் இயேசு நற்செய்தி அறிவிப்புக்கு இடையிலும் கடவுளோடு தனித்திருந்து இறைவேண்டலில் ஈடுபட்டார். கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவிய ஆழ்ந்த உறவு அந்த இறைவேண்டல் நேரங்களில் இன்னும் அதிகமாக ஆழப்பட்டிருக்க வேண்டும்.

கடவுளோடு ஒன்றித்திருந்த இயேசு மனிதரோடும் தம்மை ஒன்றுபடுத்திக் கொண்டார். ஏன், மனிதருக்குக் கடவுளின் அன்பைக் கொடையாக வழங்குவதற்குத் தானே இயேசு வந்தார்? கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்னும் உணர்வு நம்மில் ஆழப்பட வேண்டும். கடவுள் நம்மோடு இருப்பதால் நாம் கடவுளின் குரலுக்குச் செவிமடுப்பது தேவை. கடவுளின் குரலை நம் உள்ளத்திலும் வாழ்வு அனுபவத்திலும் நாம் கேட்டு உள்வாங்கும்போது அக்குரல் நம் இதயத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த அனுபவம் நம்மில் நிலைக்கும்போது நாமும் ''கடவுளுக்கு உகந்தவற்றையே செய்திட'' முன்வருவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் பிரசன்னத்தை எங்கள் வாழ்வில் உணர்ந்திட அருள்தாரும்.