யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 5வது வாரம் புதன்கிழமை
2020-04-01




முதல் வாசகம்

தம் தூதரை அனுப்பி, தம்முடைய ஊழியர்களை மீட்டார்.
இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 3: 14-20, 24-25, 28

அந்நாள்களில் நெபுகத்னேசர் அவர்களை நோக்கி, ``சாத்ராக்கு! மேசாக்கு! ஆபேத்நெகோ! நீங்கள் மூவரும் என் தெய்வங்களை வணங்கவில்லை என்பதும், நான் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவில்லை என்பதும் உண்மைதானா? இப்பொழுதாவது எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கக் கேட்டவுடன், நீங்கள் தாழவீழ்ந்து நான் செய்துவைத்துள்ள சிலையைப் பணிந்து தொழத் தயாராய் இருக்கிறீர்களா? தொழாவிட்டால் அந்த நொடியிலேயே எரிகிற தீச்சூளையில் தூக்கிப் போடப்படுவீர்கள். உங்களை என் கைகளிலிருந்து தப்புவிக்கக்கூடிய தெய்வம் ஒன்று உண்டோ?" என்றான். சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ என்பவர்கள் நெபுகத்னேசர் அரசனை நோக்கிப் பதில்மொழியாக, ``இதைக் குறித்து நாங்கள் உமக்கு மறுமொழி கூறத் தேவையில்லை. அப்படியே எது நிகழ்ந்தாலும், நாங்கள் வழிபடுகின்ற எங்கள் கடவுள், எரிகின்ற தீச்சூளையினின்று எங்களை மீட்க வல்லவர். அவரே எங்களை உம் கையினின்றும் விடுவிப்பார். அப்படியே அவருக்கு மனமில்லாமல் போனாலும், அரசரே! நாங்கள் உம்முடைய தெய்வங்களை வழிபடமாட்டோம்; நீர் நிறுவிய பொற்சிலையையும் நாங்கள் தொழப்போவதில்லை. இது உமக்குத் தெரிந்திருக்கட்டும்'' என்றார்கள். இதைக் கேட்ட நெபுகத்னேசர் அரசன் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோர்மீது வெகுண்டெழ, அவனது முகம் சினத்தால் சிவந்தது. வழக்கத்தைவிட ஏழு மடங்கு மிகுதியாகத் தீச்சூளையைச் சூடாக்கும்படி அரசன் கட்டளையிட்டான். பின்னர் சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரைக் கட்டி, எரியும் தீச்சூளைக்குள் தூக்கிப் போடுமாறு தன் படைவீரர்களுள் வலியவர் சிலருக்குக் கட்டளையிட்டான்.

அப்பொழுது நெபுகத்னேசர் அரசன் வியப்புற்று விரைந்தெழுந்து தன் அமைச்சரை நோக்கி, ``மூன்று பேரைத்தானே கட்டி நெருப்பினுள் எறிந்தோம்!'' என்றான். ``ஆம் அரசரே'' என்று அவர்கள் விடையளித்தனர்.

அதற்கு அவன், ``கட்டவிழ்க்கப்பட்டவர்களாய் நெருப்பின் நடுவில் நான்கு பேர் உலவுகிறதை நான் காண்கிறேன்! அவர்களுக்கோ ஒரு தீங்கும் நேரவில்லையே! மேலும் நான்காவது ஆள் தெய்வ மகன் ஒருவன் போல் தோன்றுகிறானே!" என்றான்.

அப்பொழுது நெபுகத்னேசர், ``சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ ஆகியோரின் கடவுள் புகழப்படுவாராக! தங்கள் கடவுளைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் பணிந்து தொழ மறுத்து, அரசனது கட்டளையையும் பொருட்படுத்தாமல், அவர்மேல் நம்பிக்கை வைத்துத் தங்கள் உடலைக் கையளித்த அவருடைய ஊழியர்களை அவர் தம் தூதரை அனுப்பி மீட்டருளினார்'' என்றான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: என்றென்றும் அவரைப் புகழ்ந்து போற்றுங்கள்.
தானி (இ) 1: 29. 30-31. 32-33 (பல்லவி: 34)

29 எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக; என்றென்றும் நீர் புகழப்பெறவும் ஏத்திப் போற்றப் பெறவும் தகுதியுள்ளவர். மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது. பல்லவி

30 உமது தூய மாட்சி விளங்கும் கோவிலில் நீர் வாழ்த்தப் பெறுவீராக; உயர் புகழ்ச்சிக்கும் மிகு மாட்சிக்கும் நீர் உரியவர். 31 கெருபுகள் மேல் வீற்றிருந்து படுகுழியை நோக்குபவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக; நீர் என்றென்றும் புகழப்படவும் ஏத்திப் போற்றப்படவும் தகுதியுள்ளவர். பல்லவி

32 உமது ஆட்சிக்குரிய அரியணைமீது நீர் வாழ்த்தப் பெறுவீராக; என்றென்றும் நீர் புகழ்ந்தேத்தப் பெறுவீராக, ஏத்திப் போற்றப் பெறுவீராக. 33 உயர் வானகத்தில் நீர் வாழ்த்தப் பெறுவீராக; என்றென்றும் நீர் பாடல் பெறவும், மாட்சி அடையவும் தகுதியுள்ளவர். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால், நீங்கள் உண்மையிலேயே விடுதலை பெற்றவர்கள்.

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 31-42

அக்காலத்தில் இயேசு தம்மை நம்பிய யூதர்களை நோக்கி, ``என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்; உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்'' என்றார். யூதர்கள் அவரைப் பார்த்து, `` `உங்களுக்கு விடுதலை கிடைக்கும்' என நீர் எப்படிச் சொல்லலாம்? நாங்கள் யாருக்கும் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. நாங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் ஆயிற்றே!'' என்றார்கள். அதற்கு இயேசு, ``பாவம் செய்யும் எவரும் பாவத்திற்கு அடிமை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். வீட்டில் அடிமைக்கு நிலையான இடம் இல்லை; மகனுக்கு அங்கு என்றென்றும் இடம் உண்டு. மகன் உங்களுக்கு விடுதலை அளித்தால் நீங்கள் உண்மையிலே விடுதலை பெற்றவர்களாய் இருப்பீர்கள். நீங்கள் ஆபிரகாமின் வழிமரபினர் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என் வார்த்தை உங்கள் உள்ளத்தில் இடம் பெறாததால் நீங்கள் என்னைக் கொல்ல முயலுகிறீர்கள். நான் என் தந்தையிடம் கண்டதைச் சொல்கிறேன். நீங்கள் உங்கள் தந்தையிடமிருந்து கேட்டதைச் செய்கிறீர்கள்'' என்றார்.

அவர்கள் அவரைப் பார்த்து, ``ஆபிரகாமே எங்கள் தந்தை'' என்றார்கள். இயேசு அவர்களிடம், ``நீங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றால் அவரைப் போலச் செயல்படுவீர்கள். ஆனால் கடவுளிடமிருந்து கேட்டறிந்த உண்மையை உங்களுக்கு எடுத்துரைத்த என்னை நீங்கள் கொல்ல முயலுகிறீர்கள். ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே! நீங்கள் உங்கள் தந்தையைப்போலச் செயல்படுகிறீர்கள்'' என்றார்.

அவர்கள், ``நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல; எங்களுக்கு ஒரே தந்தை உண்டு; கடவுளே அவர்'' என்றார்கள்.

இயேசு அவர்களிடம் கூறியது: ``கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள். நான் கடவுளிடமிருந்தே இங்கு வந்துள்ளேன். நானாக வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார்...நானும் அவருக்கு உகந்தவற்றையே எப்போதும் செய்கிறேன்' என்றார்'' (யோவான் 8:29)

இயேசுவின் வாழ்க்கையில் துலங்கிய ஒரு முக்கியமான பண்பு அவர் எப்போதுமே கடவுளின் திருவுளத்திற்கு அமைந்து நடந்ததாகும். கடவுளிடமிருந்து வந்த இயேசு கடவுள் தன்மை கொண்டவராக இருந்தாலும், நம்மைப் போல மனித இயல்பை ஏற்றுக்கொண்டார். கடவுள் அவருக்கு அளித்த பணியை நிறைவேற்றுவதில் இயேசு கண்ணும் கருத்துமாயிருந்தார். அவர் தம் சொந்த விருப்பப்படி செயல்படவில்லை. மாறாக, கடவுள் எதை விரும்பினாரோ அதையே இயேசுவும் தம் விருப்பமாகக் கொண்டிருந்தார். தம்மை அனுப்பிய கடவுள் தம்மோடு இருப்பதை இயேசு எப்போதுமே உணர்ந்திருந்தார். எனவேதான் இயேசு நற்செய்தி அறிவிப்புக்கு இடையிலும் கடவுளோடு தனித்திருந்து இறைவேண்டலில் ஈடுபட்டார். கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவிய ஆழ்ந்த உறவு அந்த இறைவேண்டல் நேரங்களில் இன்னும் அதிகமாக ஆழப்பட்டிருக்க வேண்டும்.

கடவுளோடு ஒன்றித்திருந்த இயேசு மனிதரோடும் தம்மை ஒன்றுபடுத்திக் கொண்டார். ஏன், மனிதருக்குக் கடவுளின் அன்பைக் கொடையாக வழங்குவதற்குத் தானே இயேசு வந்தார்? கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்னும் உணர்வு நம்மில் ஆழப்பட வேண்டும். கடவுள் நம்மோடு இருப்பதால் நாம் கடவுளின் குரலுக்குச் செவிமடுப்பது தேவை. கடவுளின் குரலை நம் உள்ளத்திலும் வாழ்வு அனுபவத்திலும் நாம் கேட்டு உள்வாங்கும்போது அக்குரல் நம் இதயத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்த அனுபவம் நம்மில் நிலைக்கும்போது நாமும் ''கடவுளுக்கு உகந்தவற்றையே செய்திட'' முன்வருவோம்.

மன்றாட்டு:

இறைவா, உம் பிரசன்னத்தை எங்கள் வாழ்வில் உணர்ந்திட அருள்தாரும்.