யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 3வது வாரம் வெள்ளிக்கிழமை
2020-03-20




முதல் வாசகம்

ஆண்டவரின் நெறிகள் நேர்மையானவை
ஓசேயா நூலிலிருந்து வாசகம் 14:1-9

1 இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா: நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய்.2 இம்மொழிகளை ஏந்தி ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்: தீவினை அனைத்தையும் அகற்றியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்: நாங்கள் எங்கள் வாய்மொழியாம் கனிகளை உமக்கு அளிப்போம்:3 அசீரியர் எங்களை விடுவிக்கமாட்டார்கள்: குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்: எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, எங்கள் கடவுளே! என்று இனிச் சொல்லமாட்டோம்: திக்கற்றவன் உம்மிடத்தில் பரிவைப் பெறுகிறான் எனச் சொல்லுங்கள்.4 அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன்: அவர்கள்மேல் உளமார அன்புகூர்வேன். அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்துவிட்டது.5 நான் இஸ்ரயேலுக்குப் பனி போலிருப்பேன்: அவன் லீலிபோல் மலருவான்: லெபனோனின் மரம்போல் வேரூன்றி நிற்பான்.6 அவனுடைய கிளைகள் விரிந்து பரவும்: அவன் பொலிவு ஒலிவமரம் போல் இருக்கும்: லெபனோனைப்போல் அவன் நறுமணம் பரப்புவான்.7 அவர்கள் திரும்பிவந்து என் நிழலில் குடியிருப்பார்கள்: கோதுமைபோல் தழைத்தோங்குவார்கள். திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள். லெபனோனின் திராட்சை இரசம்போல் அவர்களது புகழ் விளங்கும்.8 இனிமேல் எப்ராயிமுக்குச் சிலைகள் எதற்கு? நானே அவனுக்குச் செவி சாய்த்து, அவன்மேல் அக்கறை கொண்டுள்ளேன்: நான் பசுமையான தேவதாரு மரம் போன்றவன். உன் கனி எல்லாம் என்னிடமிருந்தே வரும்.9 ஞானம் நிறைந்தவன் எவனோ, அவன் இவற்றை உணர்ந்து கொள்ளட்டும்: பகுத்தறிவு உள்ளவன் எவனோ, அவன் இவற்றை அறிந்து கொள்ளட்டும்: ஆண்டவரின் நெறிகள் நேர்மையானவை: நேர்மையானவர்கள் அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்: மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகின்றார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

உன் கடவுளாகிய ஆண்டவர் நானே, என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்
திருப்பாடல்கள் 81:5-10, 13, 16

5 அவர் எகிப்துக்கு எதிராகச் சென்றபொழுது யோசேப்புக்கு அளித்த சான்று இதுவே. அப்பொழுது நான் அறியாத மொழியைக் கேட்டேன். 6 தோளினின்று உன் சுமையை அகற்றினேன்; உன் கைகள் கூடையினின்று விடுதலை பெற்றன.

7 துன்ப வேளையில் என்னை நோக்கி மன்றாடினீர்கள்; நான் உங்களை விடுவித்தேன்; இடிமுழங்கும் மறைவிடத்தினின்று நான் உங்களுக்கு மறுமொழி கூறினேன்; மெரிபாவின் நீருற்று அருகில் உங்களைச் சோதித்தேன். 8 என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன்; இஸ்ரயேலரே, நீங்கள் எனக்குச் செவிசாய்த்தால், எவ்வளவு நலமாயிருக்கும்!

9 உங்களிடையே வேற்றுத் தெய்வம் இருத்தலாகாது; நீங்கள் அன்னிய தெய்வத்தைத் தொழலாகாது. 10 உங்களை எகிப்து நாட்டினின்று அழைத்துவந்த கடவுளாகிய ஆண்டவர் நானே; உங்கள் வாயை விரிவாகத் திறங்கள்; நான் அதை நிரப்புவேன்.

13 என் மக்கள் எனக்குச் செவிசாய்த்திருந்தால், இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில் நடந்திருந்தால், எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்.

16 ஆனால், உங்களுக்கு நயமான கோதுமையை உணவாகக் கொடுப்பேன்; உங்களுக்கு மலைத் தேனால் நிறைவளிப்பேன்.


நற்செய்திக்கு முன் வசனம்

உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12:28-34

28 அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, ' அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? ' என்று கேட்டார்.29 அதற்கு இயேசு, ' இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.30 உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக ' என்பது முதன்மையான கட்டளை.31 ' உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக ' என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை ' என்றார்.32 அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், ' நன்று போதகரே, ' கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை ' என்று நீர் கூறியது உண்மையே.33 அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது ' என்று கூறினார்.34 அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், ' நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை ' என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"எங்களுக்குக் கண் தெரிகிறது.. .. நீங்கள் பாவிகளாகவே இருக்கிறீர்கள்"

கண் இருந்தால் மட்டும் போதாது. பார்வை பெற கண்ணில் ஒளி இருக்க வேண்டும். பார்க்கும் பொருளிலும் ஒளி பட்டு பிரதிபலிக்க வேண்டும். இயேசு என்னும் ஒளி, கண்ணின் ஒளியாகவும் பார்க்கும் பொருளின் ஒளியாகவும் இருக்கவேண்டும்.அப்பொழுது, பார்க்கும் பொருளின் உண்மைப் பொருளை உணர முடியும். அந்த பரிசேயர்களுக்கு கண் இருந்தது. கண்ணில் ஒளி இருந்தது. ஆனால் இயேசு என்னும் உன்னத ஒளி அவர்களில் இல்லை.எனவேதான், பார்த்தார்கள். ஆனால் தவறாகப் பார்த்தார்கள். பார்வையற்றிருந்த ஒருவர் இன்று பார்வையோடு இருப்பதை ஏற்றுக்கொள்ளம் பார்வை அவர்களுக்கு இல்லை. "உங்கள் மகன் இவன்தானா?" என்று கேட்கும் அளவுக்கு அவர்களின் பார்வை தடை பெற்றிருந்தது. பாவத்தில் இருக்கும் மனிதனின் பார்வையும் தடைபடுகிறது. தீய சிந்தனை, தீய செயல்பாடுகள் உள்ள மனிதனின் பார்வை மங்கிவிடுகிறது. இதயம் சுருங்கி, உண்மையையும் எதார்த்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் அகக்கண் புறையுற்று, பார்வையைப் பாதித்துவிடுகிறது. பார்வைக்கும் பாவத்திற்கும் நெருக்கம் அதிகம். புனித பார்வையில் சரியானதை, உண்மையை காண்போம். அங்கு கடவுளின் மாட்சியைக் காணலாம். கண்டு இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிமடுத்து, அவர் காட்டும் வழியில் நடக்க அருள்தாரும்.