யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 3வது வாரம் செவ்வாய்க்கிழமை
2020-03-17




முதல் வாசகம்

உமது பெயரை முன்னிட்டு எங்களை என்றும் கைவிட்டுவிடாதீர்
தானியேல்(இணைப்பு) நூலிலிருந்து வாசகம் 1:2, 11-19

2 அப்பொழுது அசரியா நெருப்பின் நடுவில் எழுந்து நின்று, உரத்த குரலில் பின்வருமாறு மன்றாடினார்:11 உமது பெயரை முன்னிட்டு எங்களை என்றும் கைவிட்டுவிடாதீர்: உமது உடன்படிக்கையை முறித்துவிடாதீர்.12 உம் அன்பர் ஆபிரகாமை முன்னிட்டும், உம் ஊழியர் ஈசாக்கை முன்னிட்டும், உம் தூயவர் இஸ்ரயேலை முன்னிட்டும், உம் இரக்கம் எங்களைவிட்டு நீங்கச் செய்யாதீர்.13 விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் அவர்களின் வழிமரபினரைப் பெருகச் செய்வதாக நீர் அவர்களுக்கு உறுதி அளித்தீர்.14 ஆண்டவரே, எங்கள் பாவங்களால் மற்ற மக்களினங்களைவிட நாங்கள் எண்ணிக்கையில் குறைந்து விட்டோம்: உலகெங்கும் இன்று தாழ்வடைந்தோம்.15 இப்பொழுது எங்களுக்கு மன்னர் இல்லை, இறைவாக்கினர் இல்லை, தலைவர் இல்லை: எரிபலி இல்லை, எந்தப் பலியும் இல்லை: காணிக்கைப்பொருளோ தூபமோ இல்லை: உம் திருமுன் பலியிட்டு, உம் இரக்கத்தைப் பெற இடமே இல்லை.16 ஆயினும், செம்மறிக்கடாக்கள், காளைகளால் அமைந்த எரிபலி போலும் பல்லாயிரம் கொழுத்த ஆட்டுக்குட்டிகளாலான பலிபோலும் நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோமாக.17 அவ்வாறே எமது பலி இன்று உம் திருமுன் அமைவதாக: நாங்கள் முழுமையாக உம்மைப் பின்பற்றுவோமாக: ஏனெனில் உம்மில் நம்பிக்கை வைப்போர் வெட்கத்திற்கு ஆட்படமாட்டார்.18 இப்பொழுது நாங்கள் முழு உள்ளத்துடன் உம்மைப் பின்பற்றுகிறோம்: உமக்கு அஞ்சி, உம் முகத்தை நாடுகிறோம். எம்மை வெட்கத்துக்கு உள்ளாக்காதீர்:19 மாறாக, உம் பரிவிற்கு ஏற்பவும், இரக்கப் பெருக்கிற்கு ஏற்பவும் எங்களை நடத்தும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்
திருப்பாடல்கள் 25:4-9

4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்;

6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே.7 என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார்.


நற்செய்திக்கு முன் வசனம்

தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18:21-35

21 பின்பு பேதுரு இயேசுவை அணுகி, ' ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார்.22 அதற்கு இயேசு அவரிடம் கூறியது: ' ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன்.23 விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார்.24 அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர்.25 அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார்.26 உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, ' என்னைப் பொறுத்தருள்க; எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன் ' என்றான்.27 அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.28 ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, 'நீ பட்ட கடனைத் திருப்பித் தா' எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான்.29 உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க; நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் ' என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார்.30 ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான்.31 அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள்.32 அப்போது தலைவர் அவனை வரவழைத்து, ' பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன்.33 நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா? என்று கேட்டார்.34 அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.35 உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார். '

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்"

தண்ணீர் இன்று பெரிய பிரச்சனை. வீராணம் திட்டம், கூட்டுக் குடி நீர் திட்டம் என்றெல்லாம் தண்ணீர் பிரச்சனை நீழ்கிறது. என்ன திருப்பலிக்கு லேட் என்று கேட்டால், பெண்களின் பதில், "தண்ணீர் வந்தது அல்லவா" என்பது. ஒரு லிட்டர் பால் விலை ரூயஅp;பாய் 12. இருந்தாலும் 13 ரூயஅp;பாய் கொடுத்து ஒரு லிட்டர் மினரல் வாட்டர் வாங்கத் தயார்.தண்ணீர் தாகத்தின் அவசியம், அவசரம்.

நம் சார்பில் அந்த சமாரியப் பெண் வெளிப்படுத்தும் சில தாகங்கள் இவைகள்:

- "நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?" (யோவா 4:9) ஏற்றத்தாழ்வு என்ற தாகம், உயர்ந்தவள் தாழ்ந்தவள் என்ற தாகம், அருள் பெற்றவள் பெறாதவள் என்ற தாகம். - பெண் என்ற தாழ்வு மனப்பான்மைத் தாகம். ஆண் என்ற ஆதிக்க வெறியின் தாகம். - "எனக்குக் கணவர் இல்லையே" (யோவா 4:17) தனக்குக் குடும்பம் இல்லை என்ற தாகம். முறையான குடும்ப வாழ்க்கை இல்லையே என்ற தாகம்.அறநெறி கூறும் வாழ்க்கை வாழ முடியவில்லையே என்ற தாகம். - "எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ?" (யோவா 4:12) சம்பிரதாயம், பாரம்;பரியம், மூதாதையர் பரம்பரை என்ற தாகம். - "எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே" (யோவா 4:20) ஆன்மீக தாகம். உண்மை இறைவனை வணங்கி வழிபட வேட்கை. வழிபட முடியாத தாகம். எல்லா தாகங்களையும் தணித்து நிறைவான வாழ்வைத் தரும் நம் தேவன் இயேசு ஒருவரே.

"நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்"(யோவா4:14) எதைக்கொடுத்தாயினும், எதை இழந்தாயினும், என்ன முயற்சி செய்தாயினும், என்ன விலை கொடுத்தாயினும் அத்தண்ணீரை வாங்கிப் பருகுவோம்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் குரலுக்கு நாங்கள் செவிமடுத்து, அவர் காட்டும் வழியில் நடக்க அருள்தாரும்.