யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 1வது வாரம் திங்கட்கிழமை
2020-03-02




முதல் வாசகம்

நான் ஆண்டவர்! உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே!
லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 11-18

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்! களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும் ஒருவரை ஒருவர் வஞ்சியாமலும், என் பெயரால் பொய்யாணையிட்டு, உங்கள் கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள். நான் ஆண்டவர்! அடுத்திருப்பவரை ஒடுக்கவோ அவருக்குரியதைக் கொள்ளையிடவோ வேண்டாம்; வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது. காது கேளாதோரைச் சபிக்காதே! பார்வையற்றோரை இடறச் செய்யாதே! உன் கடவுளுக்கு அஞ்சி நட. நான் ஆண்டவர்! தீர்ப்பிடுகையில், அநீதி இழைக்காதே. சிறியோர் பெரியோர் என முகம் பாராது, உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு. உன் இனத்தாருக்குள் புறங்கூறித் திரியாதே. உனக்கு அடுத்து வாழ்பவரின் குருதிப் பழிக்குக் காரணம் ஆகாதே! நான் ஆண்டவர்! உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கு அடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்துகொள். பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவருடைய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.
திருப்பாடல் 19: 7. 8. 9. 14

7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. -பல்லவி

8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. -பல்லவி

9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி

14 என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக்கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார். அதற்கு நேர்மையாளர்கள் `ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?' என்று கேட்பார்கள். அதற்கு அரசர், `மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார். பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை' என்பார். அதற்கு அவர்கள், `ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், `மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலைவாழ்வு பெறவும் செல்வார்கள்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவுகொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்'' (மத்தேயு 25:35)

மத்தேயு நற்செய்தியின் இறுதிப் பகுதியில் ''மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு'' என்னும் பிரிவு உள்ளது (மத் 25:31-46). இயேசு வழங்கிய அன்புக் கட்டளையை வாழ்வில் கடைப்பிடிக்கும்போது இறையன்பும் பிறரன்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதை இப்பகுதி காட்டுகின்றது. ஒவ்வொரு மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்பதை ''நல்ல சமாரியர்'' உவமை வழியாக எடுத்துரைத்த இயேசு (காண்க: லூக் 10:25-37), இங்கே நாம் பிறர் மட்டில் காட்டுகின்ற அன்பு கடவுளுக்கு நாம் காட்டுகின்ற அன்பின் மறுவடிவமே என்று எடுத்துரைக்கிறார். உலகத்தில் பசியாலும் தாகத்தாலும் வாடுகின்ற மனிதர் பலருண்டு; அன்னியராக நடத்தப்படுவோர் உண்டு; இருக்க இடமும் உடுக்க ஆடையும் இல்லாதோர் உண்டு; நோயினால் வாடுவோர் உண்டு; சிறைப்பட்டுத் துன்புறுவோர் உண்டு. இவர்களைப் பார்க்கும்போது இயேசுவே இவ்வாறு பசி பிணி நோய் போன்ற துன்பங்களை அனுபவிக்கிறார் என உணரவும், மனிதருக்குச் செய்வதையே அவருக்கே செய்கிறோம் என அறியவும் இயேசு நம்மை அழைக்கிறார்.

இங்கே ஒரு முரண்பாடு எழுவதுபோல் தெரிகிறது. அதாவது, இயேசு சாவை வென்று நம் ஆண்டவராக ஏற்கெனவே மகிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதே நேரத்தில் இயேசு இவ்வுலகில் மனிதராக நம்மிடையே நடமாடுகிறார். குறிப்பாக, ஏழை எளியவர்கள், ஒடுக்கப்பட்டோர் போன்ற ''மிகச்சிறியோர்'' (மத் 25:40,25) வடிவத்தில் அவர் நம்மிடையே உள்ளார். இந்த உண்மையைத் தூய பவுல் ''நாம் கிறிஸ்துவின் உடல்'' என விளக்குவார் (காண்க: உரோ 12:4). மனித குலம் முழுவதும் மனிதராக நம்மிடையே வந்த கிறிஸ்துவில் ஒன்றித்திருப்பதால் நாம் ஒருவர் ஒருவருக்குச் செய்வதை (நன்மையோ தீமையோ) கிறிஸ்துவுக்கே செய்கிறோம் எனலாம். ஆக, நம்மிடையே சகோதர அன்பு விளங்கும்போது அங்கே இறையன்பும் துலங்குகிறது; அதற்கு மாறாக, சகோதர அன்பு குறைபடுகின்ற வேளையில் இறையன்பும் குறைபடுகிறது. நேர்மையாளராக நாம் வாழ்ந்து ''நிலைவாழ்வு'' அடைவதும், தீயோராக நடந்து ''தண்டனை'' பெறுவதும் நாம் பிறரில் கடவுளைக் கண்டு அவர்களை அன்போடு நடத்தினோமா இல்லையா என்பதன் அடிப்படையில் அமையும்.

மன்றாட்டு:

இறைவா, ஏழைகளில் உம்மைக் கண்டு அன்புசெய்ய அருள்தாரும்.