யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி
2020-02-28




முதல் வாசகம்

உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பது அன்றோ நாம் விரும்பும் நோன்பு!
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 1-9

இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: பேரொலி எழுப்பிக் கூப்பிடு, நிறுத்திவிடாதே; எக்காளம் முழங்குவதுபோல் உன் குரலை உயர்த்து; என் மக்களுக்கு அவர்களின் வன்செயல்களையும், யாக்கோபின் குடும்பத்தாருக்கு அவர்களின் பாவத்தையும் எடுத்துக்கூறு. அவர்கள், நேர்மையானவற்றைச் செய்யும் மக்களினம்போலும், தங்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிப்போர் போலும் நாள்தோறும் என்னைத் தேடுகின்றார்கள்; என் நெறிமுறைகள் பற்றிய அறிவை நாடுகின்றார்கள்; நேர்மையான நீதித்தீர்ப்புகளை என்னிடம் வேண்டுகின்றார்கள்; கடவுளை அணுகிவர விழைகின்றார்கள். `நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக்கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்?' என்கின்றார்கள். நீங்கள் நோன்பிருக்கும் நாளில் உங்கள் ஆதாயத்தையே நாடுகின்றீர்கள்; உங்கள் வேலையாள்கள் அனைவரையும் ஒடுக்குகின்றீர்கள். இதோ, வழக்காடவும், வீண் சண்டையிடவும், கொடும் கையால் தாக்கவுமே நீங்கள் நோன்பிருக்கிறீர்கள்! இன்றுபோல் நீங்கள் உண்ணா நோன்பிருந்தால் உங்கள் குரல் உன்னதத்தில் கேட்கப்படாது. ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணா நோன்பின் நாளாகத் தெரிந்துகொள்வது? ஒருவன் நாணலைப்போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்கள்? கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு! பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் `இதோ! நான்' என மறுமொழி தருவார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை
திருப்பாடல் 51: 1-2. 3-4. 16-17

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும். உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி

3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. 4ய உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். பல்லவி

16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. 17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றம் உணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-15

அக்காலத்தில் யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, ``நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?'' என்றனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ``மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை' என்றார்'' (மத்தேயு 9:16)

இயேசு மனித வரலாற்றில் ஒரு மாபெரும் புதுமை கொணர்ந்தார். பழைய முறைகள் மறைந்துபோக புதிய முறைகள் உதயம் ஆயின. கடவுளை வழிபடுவதில் நோன்பு ஒரு முக்கிய இடம் வகித்தது. ஆனால் இயேசுவோ விருந்துகளில் மனமுவந்து பங்கேற்றார். யூத சமய வழக்குகளைப் பின்பற்றாத மக்களைப் ''பாவிகள்'' என அழைத்தனர் அக்காலத்துப் பரிசேயர்கள். ஆனால் இயேசு அந்தப் ''பாவிகளோடு'' சேர்ந்து உணவருந்தினார்; தீட்டுப்பட்டோர் எனக் கருதப்பட்ட மக்களோடு உறவாடிப் பழகினார். இவ்வாறு புதுமைகள் பல கொணர்ந்த இயேசு தம்மை மணமகனுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். திருமண விழாவின்போது சிறப்பான விதத்தில் விருந்து கொண்டாடுவர். அங்கே நோன்புக்கு இடமில்லை. எனவே, இயேசு மக்கள் நடுவே மகிழ்ச்சி கொணர்ந்தார்; அவர்கள் நட்புறவில் நிலைத்துநின்று அன்புப் பிணைப்புகளால் இணைந்திட வழிவகுத்தார்.

பழையதையும் புதியதையும் ஒன்றுசேர்த்தால் குழப்பம்தான் உருவாகும் என இயேசு இரு உவமைகள் வழியாக எடுத்துரைக்கிறார். பழைய ஆடையில் ஒட்டுப்போட புதிய துணியைப் பயன்படுத்துவதில்லை எனவும், புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோற்பையில் ஊற்றலாகாது எனவும் இயேசு கற்பிக்கிறார். இயேசுவின் வருகையோடு புதியதொரு யுகம் பிறந்துவிட்டது. எனவே, மக்கள் தம் வாழ்க்கையைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். புதிய பார்வையோடு கடவுளை அணுக வேண்டும். புதிய உறவுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இயேசு கொணர்ந்த புதுமை எதில் அடங்கும்? அடிப்படையில் இயேசு கடவுளை நாம் ஒரு புதிய ஒளியில் பார்க்க வழிவகுத்தார். கடவுள் மனிதரைவிட்டு அகன்று இருப்பவர் அல்ல. அவர் மனித இனத்தோடு தம்மை முழுமையாக ஒன்றித்துக் கொண்டு விட்டார். இது ஒரு புதுமையான நிலையே. மேலும், கடவுள் மனிதரை உயர்ந்தோர் தாழ்ந்தோர் என வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவருடைய பார்வையில் எல்லா மனிதரும் சமமே. ஏனென்றால் உலக மனிதர் அனைவரும் அவருடைய பிள்ளைகளே. இவ்வாறு கடவுள் பற்றி ஒரு புதிய பார்வையை இயேசு நமக்கு வழங்குகிறார். புதுப் பார்வை பெற்ற நாம் புது முறையில் வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம். இயேசுவிடம் துலங்கிய மனநிலையும் அவருடைய பார்வையும் நமதாக மாறினால் நாம் புது மனிதராக வாழ்ந்திடுவோம்.

மன்றாட்டு:

இறைவா, ஊறிப்போன பழைய சிந்தனையைக் கைவிட்டு, புதிய பார்வை பெற்று வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.