யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 6வது வாரம் சனிக்கிழமை
2020-02-22

திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம் விழா




முதல் வாசகம்

நான் கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சி, உங்கள் உடன்மூப்பன்.
திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-4

அன்புக்குரியவர்களே, கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சியும், வெளிப்படவிருக்கும் மாட்சியில் பங்குகொள்ளப் போகிறவனுமாகிய நான், உடன்மூப்பன் என்னும் முறையில் மூப்பர்களுக்குக் கூறும் அறிவுரை: உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்; கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்; ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு முன்மாதிரிகளாய் இருங்கள். தலைமை ஆயர் வெளிப்படும் போது, அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக்கொள்வீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
திருப்பாடல் 23: 1-3. 4. 5. 6

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. 2 பசும் புல்வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். 3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். பல்லவி

4 சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. பல்லவி 6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா, என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19

அக்காலத்தில் இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ``மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ``யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்'' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்'' (மாற்கு 7:33)

யூத இனத்தைச் சேராத பிற இன மக்கள் வாழ்ந்த பகுதி தீர், சீதோன், தெக்கப்பொலி ஆகும். இயேசு அப்பகுதிகளுக்குச் சென்றார் என மாற்கு குறிப்பிடுகிறார் (மாற் 7:31). அங்கே பிற இனத்தைச் சார்ந்த ஒருரை - காது கேளாவரும் திக்கிப் பேசுபவருமான ஒருவரை - இயேசுவிடம் கொண்டுவருகிறார்கள். இயேசு அந்த மனிதருக்குக் குணம் நல்கிய நிகழ்ச்சியை மாற்கு தத்ரூயஅp;பமாகச் சித்தரிக்கிறார். அந்த மனிதருக்குப் பேச்சுத் திறனும் இல்லை, கேள்வித் திறனும் இல்லை. தாம் போதித்தவற்றை மக்கள் கவனமாகக் ''கேட்க வேண்டும்'' என இயேசு ஏற்கெனவே கூறியிருந்தார் (மாற் 7:6). அவரிடம் வாய்திறந்து சாதுரியமாக ''பேசிய'' ஒரு பெண்ணின் கோரிக்கையை இயேசு நிறைவேற்றி வைத்தார் (காண்க: மாற் 7:24-30). இப்போது இயேசு ஒரு மனிதருக்குப் ''பேசும்'' திறனையும் ''கேட்கும்'' திறனையும் அளிக்கிறார். ''பேச முடியாதவர்களின் வாயை ஞானம் திறந்தது: குழந்தைகளின் நாவுக்குத் தெளிவான பேச்சைத் தந்தது'' (சாஞா 10:21) என்னும் இறைவாக்கின் அடிப்படையில் இயேசு அம்மனிதருக்கு உள்ளறிவையும் ஞானத்தையும் அளித்தார் எனலாம்.

தனியே அழைத்துச் செல்லுதல், விரல்களைக் காதுகளில் இடுதல், உமிழ்நீரால் தொடுதல் ஆகிய செயல்களை மாற்கு குறிப்பிடுவதன் வழியாக இயேசு உண்மையிலேயே ஒரு ''மருத்துவராக'' செயல்பட்டார் என அறிகிறோம். ஆனால் வெளி அடையாளம் என்பது உள் எதார்த்தத்திற்கு நம்மை இட்டுச் செல்ல வேண்டும். இயேசு அந்த மனிதருக்குப் பேச்சுத் திறனும் கேள்வித் திறனும் வழங்கிய போது அந்த மனிதரின் உள்ளத்தைத் திறந்தார்; அவருடைய இதயத்தைத் திறந்தார்.அதைத் தொடர்ந்து, கடவுளின் வார்த்தையைக் ''கேட்கவும்'' அதைப் ''பேசவும்'' அந்த மனிதர் முன்வந்தார். இயேசுவிடத்தில் நாம் நம்பிக்கை கொள்ளும்போது அவர் நமக்கு இத்தகைய கேள்வித் திறனையும் பேச்சுத் திறனையும் நல்குவார். அப்போது நாம் இயேசுவை மாயஜாலம் நிகழ்த்துகின்ற அதிசய மனிதராகப் பார்க்காமல் கடவுளின் அன்பை நம்மோடு பகிர்கின்ற இறைமகனாக நம்பி ஏற்போம்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு இறைஞானம் அளித்து நல்வழி காட்டும் இயேசுவிடம் நாங்கள் முழு நம்பிக்கை கொள்ள அருள்தாரும்.