யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - A
2020-01-01

(இன்றைய வாசகங்கள்: எண்ணிக்கை ஆகமத்திலிருந்து வாசகம் 6:22-27,பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! ,திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4:4-7,புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.2:16-21)




மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்அ. மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்அ. மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்அ. மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார்அ.


திருப்பலி முன்னுரை

அன்பான இறைமக்களே இன்று நம் அனைவர்க்கும் மகிழ்ச்சியான நாள். ஏனெனில் கடந்த ஓர் ஆண்டாக எல்லா துன்பங்கள் மத்தியிலும் இறைவனுடைய அன்புகரம் நம்மை வழிநடத்தியது. அதற்காக நன்றி செலுத்த இந்த பலிபீடத்தை சுற்றி குழுமியிருக்கிறோம். இன்றைய திருவழிபாடானது அன்னைமரியாள் இறைவனின் தாய் என்கிற பெருவிழாவை சிறப்பிக்கின்றது. மனித வாழ்க்கையில் துன்பங்கள் போராட்டங்களும் நிச்சயம் உண்டு. ஆனால் கடவுளின் குழந்தைகளான நாம் நம்பிக்கையோடு அப்பா என்று அழைத்தவர்களாய் உரிமையோடு இறைவனை அணுகிச் செல்ல வேண்டும். அப்போது அவருடைய ஆசிரை வழங்கி நம்மை காப்பார். எனவே வருகின்ற நாட்களில் நம் அன்னை மரியாளைப் போல இறைவனின் அன்பையும் நன்மைத்தனத்தையும் மனதில் சிந்தித்தவர்களாய் வாழ முயற்சி எடுப்போம். அன்னையின் பரிந்துரையால் இறைபாலகனின் ஆசீர் பெற தொடரும் பெருவிழாவில் பங்கெடுப்போம்.

அல்லது

இறைத் திருமகன் இயேசுவின் இனிய நண்பர்களே சகோதரர்களே சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம் கூறி இன்று தொடங்கும் இந்தப் புதிய ஆண்டில் நலமும் வளமும் பெருகி இறை ஆசீரை நிறைவாகப்பெற்றுவாழ வாழ்த்துகிறேன். இந்த நல்லநாளில்; அன்னையாகிய திருச்சபை நாம் இறை ஆசீருடன் சீரும் சிறப்பும் பெற்று வாழ ஒரு சிறந்த கொடையை இறைவன் நம் அனைவருக்கும் தந்துள்ளதை நினைவுபடுத்தி அக்கொடையின் பயனால் இந்த ஆண்டு முழுவதும் நலமாய் நிறைவாய் வாழ நம்மைத் தூண்டுகிறது. அக்கொடைதான் இறைவனின் தாயாகிய தூய கன்னிமரியா. எனவே இன்று சிறப்பான வகையில் சாதாரண மானுடப் பெண்ணான மரியா இயேசுவின் தாயானதால் இறைவனின் தாயான மாண்பினை பெருமையுடன் நினைவு கூர்ந்து இன்று விழா கொண்டாடுகிறோம். நேற்று இருந்தார் இன்றில்லை எனும் பெருமையுடைத்து இவ்வுலகு என்னும் சொல்லின்படி கடந்த ஆண்டு நம்முடன் இருந்த பலர் இன்று நம்முடன் இல்லை. ஆனால் நம் இறைவன் நம்மை நினைவு கூர்ந்துள்ளார். இன்று இப் புதிய ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்க அருள்கூர்ந்துள்ளார். இறைவனுக்கு தாழ்மையுடன் தன்னை முழுதும் ஈகம் செய்து மாண்புற்ற தூய கன்னிமரியாவைப் பின்சென்று இறைவனின் மக்களாக வாழ தொடர்ந்து ஒரு புது ஆண்டைத் நமக்குத் தந்து வாழவைத்துள்ளார். இப் புதிய ஆண்டில்:

- புது உணர்வு கொள்வோம்.

- புது முயற்சிகள் மேற்கொள்வோம்

- புது உறவுகள் வளர்ப்போம்

- இறைவனுக்கு நன்றி உள்ளவராய் வாழ்வோம்

- நம்மைச் சுற்றியுள்ளவரை மனதார அன்புடன் வாழ்த்தி நலமாய் வாழ ஊக்கமூட்டுவோம்.

அன்னைக்கு ஏற்ற பிள்ளைகளாய் ஆண்டு முழுவதும் இறை அருளிலும் அமைதியிலும் நிறைவுடன் வாழ்ந்திட வரம்வேண்டி இப்புத்தாண்டுத் திருப்பலியில் இணைவோம்.



முதல் வாசகம்

"ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!
எண்ணிக்கை ஆகமத்திலிருந்து வாசகம் 6:22-27

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்: நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை: "ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக! "இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்: நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

திருப்பாடல்67;1-2,,4-5.7
பல்லவி: கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக!

கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பல்லவி

பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! பல்லவி

ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர்.பல்லவி

கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக. பல்லவி

கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!பல்லவி

இரண்டாம் வாசகம்

இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள்.
திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4:4-7

சகோதர சகோதரிகளே, காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்: அந்த ஆவி "அப்பா, தந்தையே" எனக் கூப்பிடுகிறது. ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல: பிள்ளைகள்தாம்: பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

புனித லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்.2:16-21

அக்காலத்தில் இடையர்கள் விரைந்து சென்று மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும்; கண்டார்கள். பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது. குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

புதுமையின் பிறப்பிடமே எம் இறைவா எம்!

திருச்சபையை வழிநடத்தும் எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள் குருக்கள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். இவர்கள் அனைவரும் உம் மந்தைகளாகிய எங்களை சிறப்புடன் வழிநடத்த வேண்டிய ஞானத்தை அவர்களுக்கு அளிக்க வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

மீட்பு வழங்கும் நாயகனாம் இயேசுவே,

இப் புதிய ஆண்டிலே புதிய மனிதர்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் இறையாட்சியின் மதீப்பிடுகளை உணர்ந்து அதன்படி அர்த்தமுள்ள புதுவாழ்வு வாழ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே!

புதிய ஆண்டில் நாங்கள் செய்யும் தொழிலை ஆசீர்வதியும். எங்கள் குடும்பத்தில் சமாதானம் நிலவவும், எங்கள் செயல்கள் உமக்கு உகந்தவைகளாய் மாறவும், எங்கள் அருகில் வாழும் மக்களின் தேவைகள் நிறைவேறவும், தேவையான அருளைப் பொழிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத் தந்தையே இறைவா!

நீர் எமக்குக் கொடுத்துள்ள மக்கள் செல்வங்களுக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இவர்கள் உம்மையே தேடி நேசிப்பதிலும், உமது வார்த்தைக்கு ஆர்வத்துடன் செவிமடுத்து வாழுவதிலும் தங்கள் கவனத்தைச் செலுத்தவும்: எமது பிள்ளைகள் இறையுறவிலும், ஒழுக்கத்திலும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கி உமக்குகந்த பிள்ளைகளாக வாழவும், செயற்படவும் அவர்களை ஆசீர்வதித்து வழிப்படுத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஒளியான எம் இறைவா!

இளைஞர், இளம்பெண்கள் தங்கள் வாழ்வில் உம்மை அறியாமல் வாழ்ந்தக் காலங்களில் தங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப, இவ்வுலகச் சிற்றின்பங்களைப் பெரிதாகக் கருதி அதற்கு ஏற்பத் தங்கள் வாழ்வை இழந்த நிலையில் தங்களைத் தேற்றுவதற்கு யாரும் இல்லையே என்று ஏங்கித் தவிக்கும் இவர்களுக்கு நீர் உமது உடனிருப்பை நிறைவாகப் பொழிந்து உமது ஆவியின் அருளை நிறைவாய் பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

கீழ்ப்படிதலின் மகிமையை உம் திருக்குடும்பத்தின் வழியாக உணர்த்திய எம் இறைவா!

எங்கள் குடும்பங்களில் இறைமகன் வாழ்ந்துக் காட்டிய அதே வழியை, நாங்களும் கடைபிடித்து, எங்கள் குடும்பங்கள் கோவிலாய் ஒளிர்ந்திட, எமக்கு சுயநலமற்ற அன்பும், அடுத்திருப்பவருடன் நட்பு பாராட்டும் நல்ல உள்ளங்களையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

குணப்படுத்தும் வள்ளலே எம் இறைவர்!

இன்று உருவாகும் அநேக புதிய நோய்கள், அந்த நோய்களின் நிமித்தம் பாதிக்கப்பட்ட எம் முதியோர்கள், சிறுவர் சிறுமிகள், அநாதைகள், கைவிடப்பட்டவர்கள் இவர்கள் அனைவரும், உம் அன்பின் கரம் கொண்டு ஆசீர்வதித்துப் பாதுகாத்து வரும் புதிய ஆண்டில் உடல், உள்ள, ஆன்மீக நலம் பெற்று உம் சாட்சிகளாய் வாழ வரம் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

அன்னையின் ஆசியோடு!

இன்று புத்தாண்டு விழா. இறைவனின் அன்னையாம் தூய மரியாவின் பெருவிழா. நம் வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் நம் தாயின் ஆசியோடு தொடங்குதுதானே நமது பண்பாடு. எனவே, இந்தப் புத்தாண்டையும் இறைவனின் தாயும், நம் விண்ணக அன்னையுமான மரியாவின் ஆசியோடு தொடங்குவோமா!

இந்தப் புதிய ஆண்டில் ஒரு புதிய நல்ல பழக்கம் ஒன்றை நாம் மேற்கொண்டால் என்ன? குறி;ப்பாக, அது நம் ஆன்மீக வாழ்வை வளப்படுத்தும் பழக்கமாக இருந்தால் மிகவும் நல்லது. எடுத்துக்காட்டாக, நாள்தோறும் விவிலியம் வாசித்து செபிப்பது, அல்லது நாள்தோறும் 3 திருப்பாடல்களை செபிப்பது, அல்லது வாரம் ஒருமுறை உண்ணாநோன்பிருப்பது, அல்லது வாரம் ஒருநாள் தொலைக்காட்சியையோ, அலைபேசியையோ பயன்படுத்தாமல் இருப்பது என்று ஏதாவது ஒரு புதிய பழக்கத்தை இந்த ஆண்டின் முதல் நாளில் இருந்து தொடங்கினால் என்ன? நல்ல பழக்கங்கள் நம் ஆளுமையை வளர்த்து, நம் வாழ்வை வளப்படுத்துகின்றன. உளவியலாளர்கள் சொல்கிறார்கள் எந்த ஒரு பழக்கமும் உருவாக ஒரு செயலைத் தொடர்ந்து 21 நாள்கள் செய்தால் அது பழக்கமாக மாறிவிடும் என்று. ஆம், 21 நாள்கள் என்பதுதான் ஒரு பழக்கத்தை உருவாக்கவோ, நிறுத்தவோ தேவைப்படும் நாள்கள்.

இன்று முதல் ஒரு நல்ல செயலைத் தேர்ந்தெடுத்து, அதனை 21 நாள்கள் தொடர்ந்து கடைப்பிடித்து, நம் வாழ்வின் தொடர்பழக்கமாக அதனை மாற்றுவோம். நம் அன்புத் தாய் அன்னை மரியா அதற்கான ஆசியை நமக்கு வழங்குவார்.

மன்றாட்டு:

அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நீர் தந்திருக்கிற இந்தப் புதிய ஆண்டு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இந்தப் புதிய ஆண்டில் உமது ஆசிக்காக இறைஞ்சுகிறோம். நாங்கள் தொடங்க விரும்பும் ஒரு நல்ல பழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க உமது ஆவியின் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும். ஆமென்.