யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 33வது வாரம் புதன்கிழமை
2019-11-20

புனித பெலிக்ஸ்




முதல் வாசகம்

எபிரேயருக்கு எதிராக எல்லா வகைத் துன்பங்களையும் திட்டமிட்ட நீ, கடவுளின் கைக்குத் தப்பமாட்டாய்''
மக்கபேயர் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1, 20-31

அந்நாள்களில் சகோதரர்கள் எழுவரும் அவர்களுடைய தாயும் கைது செய்யப்பட்டார்கள்; சாட்டைகளாலும் வார்களாலும் அடிக்கப்பட்டுச் சட்டத்துக்கு முரணாகப் பன்றி இறைச்சியை உண்ணும்படி மன்னனால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். எல்லாருக்கும் மேலாக, அவர்களுடைய தாய் மிகவும் போற்றுதற்குரியவர், பெரும் புகழுக்குரியவர். ஒரே நாளில் தம் ஏழு மைந்தர்களும் கொல்லப்பட்டதை அவர் கண்ட போதிலும், ஆண்டவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் அவை அனைத்தையும் மிகத் துணிவோடு தாங்கிக் கொண்டார்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் தாய்மொழியில் அறிவுரை கூறினார். பெருந்தன்மை நிறைந்தவராய்ப் பெண்ணுக்குரிய பண்பையும் ஆணுக்குரிய துணிவையும் இணைத்து அவர்களிடம், ``நீங்கள் என் வயிற்றில் எவ்வாறு உருவானீர்கள் என நான் அறியேன்; உங்களுக்கு உயிரும் மூச்சும் அளித்ததும் நான் அல்ல; உங்களுடைய உள்ளுறுப்புகளை ஒன்றுசேர்த்ததும் நான் அல்ல. உலகைப் படைத்தவரே மனித இனத்தை உருவாக்கியவர்; எல்லாப் பொருள்களையும் உண்டாக்கியவர்; அவரே தம் இரக்கத்தினால் உங்களுக்கு உயிரையும் மூச்சையும் மீண்டும் கொடுப்பார்; ஏனெனில் அவருடைய சட்டங்களை முன்னிட்டு நீங்கள் இப்போது உங்களையே பொருட்படுத்துவதில்லை'' என்றார். தாம் இகழப்படுவதாக அந்தியோக்கு நினைத்தான்; அந்தத் தாயின் கூற்றில் ஏளனம் இருப்பதாக ஐயுற்றான்; எல்லாருக்கும் இளைய சகோதரர் இன்னும் உயிரோடு இருக்கக் கண்டு, ``உன் மூதாதையரின் பழக்க வழக்கங்களை நீ கைவிட்டு விட்டால், உன்னைச் செல்வனாகவும் பிறர் அழுக்காறு கொள்ளும் வகையில் உயர்ந்தவனாகவும் ஆக்குவதோடு, என் நண்பனாகவும் ஏற்றுக் கொண்டு உனக்கு உயர்பதவி வழங்குவேன்'' என்று சொன்னது மட்டுமன்றி உறுதியும் கூறி ஆணையிட்டான். அவ்விளைஞர் மன்னனின் சொற்களுக்குச் சிறிதும் செவிசாய்க்காததால், அவருடைய தாயை அவன் தன்னிடம் அழைத்து அந்த இளைஞர் தம்மையே காத்துக் கொள்ளும்படி அறிவுரை கூறுமாறு வேண்டினான். மன்னன் அவரை மிகவும் வேண்டிக்கொண்டதனால், அந்தத் தாய் தம் மகனை இணங்க வைக்க இசைந்தார். ஆனால் அந்தக் கொடுங்கோலனை ஏளனம் செய்தவராய், அவர் தம் மகன் பக்கம் குனிந்தவாறு தம் தாய்மொழியில், ``மகனே, என்மீது இரக்கங்கொள். ஒன்பது மாதம் உன்னை என் வயிற்றில் சுமந்தேன்; முன்று ஆண்டு உனக்குப் பாலூட்டி வளர்த்தேன்; இந்த வயது வரை உன்னைப் பேணிக்காத்து வந்துள்ளேன். குழந்தாய், உன்னை நான் வேண்டுவது: விண்ணையும் மண்ணையும் பார்; அவற்றில் உள்ள அனைத்தையும் உற்று நோக்கு. கடவுள் இவை அனைத்தையும் ஏற்கெனவே இருந்தவற்றிலிருந்து உண்டாக்கவில்லை. இவ்வாறே மனித இனமும் தோன்றிற்று என்பதை அறிந்து கொள்வாய். இக்கொலைஞனுக்கு அஞ்சாதே; ஆனால் நீ உன் சகோதரர்களுக்கு ஏற்றவன் என மெய்ப்பித்துக் காட்டு. இறைவனின் இரக்கத்தால் உன் சகோதரர்களோடு உன்னையும் நான் திரும்பப் பெற்றுக்கொள்ளும்படி இப்போது சாவை ஏற்றுக்கொள்'' என்று சொல்லி ஊக்கமூட்டினார். தாய் பேசி முடிப்பதற்குள் அந்த இளைஞர் பின்வருமாறு கூறினார்: ``எதற்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? மன்னனின் கட்டளைக்கு நான் கீழ்ப்படியமாட்டேன். மோசே வழியாக எங்கள் மூதாதையருக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்தின் கட்டளைகளுக்கே கீழ்ப்படிவேன். எபிரேயருக்கு எதிராக எல்லா வகைத் துன்பங்களையும் திட்டமிட்ட நீ, கடவுளின் கைக்குத் தப்பமாட்டாய்'' என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்;
திருப்பாடல்கள்

1 ஆண்டவரே, என் வழக்கின் நியாயத்தைக் கேட்டருளும்; என் வேண்டுதலை உற்றுக் கேளும்; வஞ்சகமற்ற உதட்டினின்று எழும் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும். -பல்லவி

5 என் நடத்தை உம் பாதைகளில் அமைந்துள்ளது; என் காலடிகள் உம் வழியினின்று பிறழவில்லை. 6 இறைவா, நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகின்றேன்; ஏனெனில், நீர் எனக்குப் பதில் அளிப்பீர். என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும். -பல்லவி

8 உமது கண்ணின் மணியென என்னைக் காத்தருளும்; உம்முடைய சிறகுகளின் நிழலில் என்னை மூடிக்கொள்ளும். 15 நானோ நேர்மையில் நிலைத்திருந்து உமது முகம் காண்பேன்; விழித்தெழும்போது, உமது உருவம் கண்டு நிறைவு பெறுவேன். -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

நீர் வைக்காததை எடுக்கிறவர் நீர் விதைக்காததை அறுக்கிறவர் என்றார்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 11-28

அக்காலத்தில் இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள். அப்போது இயேசு மேலும் ஓர் உவமையைச் சொன்னார்: உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலை நாட்டிற்குப் போகப் புறப்பட்டார். அப்போது அவர் தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து, பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள் என்று சொன்னார். அவருடைய குடிமக்களோ, அவரை வெறுத்தனர். எனவே, இவர் அரசராக இருப்பது எங்களுக்கு விருப்பமில்லை என்று சொல்லித் தூது அனுப்பினர். இருப்பினும் அவர் ஆட்சியுரிமை பெற்றுத் திரும்பி வந்தார். பின்னர் தம்மிடம் பணம் வாங்கியிருந்த பணியாளர் ஒவ்வொருவரும் ஈட்டியது எவ்வளவு என்று அறிய அவர் அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினார். முதலாம் பணியாளர் வந்து, ஐயா, உமது மினாவைக் கொண்டு பத்து மினாக்களைச் சேர்த்துள்ளேன் என்றார். அதற்கு அவர் அவரிடம், நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும் என்றார். இரண்டாம் பணியாளர் வந்து, ஐயா உமது மினாவைக் கொண்டு ஐந்து மினாக்களை ஈட்டியுள்ளேன் என்றார். அவர், எனவே நீர் ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும் என்று அவரிடமும் சொன்னார். வேறொருவர் வந்து, ஐயா, இதோ உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன். ஏனெனில் நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர் நீர் விதைக்காததை அறுக்கிறவர் என்றார். அதற்கு அவர் அவரிடம், பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன் வைக்காததை எடுக்கிறவன் விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா? அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே என்றார். பின்பு அருகில் நின்றவர்களிடம், அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள், ஐயா, அவரிடம் பத்து மினாக்கள் இருக்கின்றனவே என்றார்கள். அவரோ, உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிட மிருந்து உள்ளதும் எடுக்கப்படும் என உங்களுக்குச் சொல்கிறேன் என்றார். மேலும் அவர், நான் அரசனாக இருப்பதை விரும்பாத என் பகைவர்களை இங்குக் கொண்டு வந்து என்முன் படுகொலை செய்யுங்கள் என்று சொன்னார். இவற்றைச் சொன்ன பின்பு இயேசு அவர்களுக்கு முன்பாக எருசலேமுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்'' (லூக்கா 19:17)

வரிதண்டுவோருக்குத் தலைவராக இருந்த சக்கேயு என்னும் செல்வரின் வீட்டில் இயேசு விருந்துண்டார். அந்த நிகழ்ச்சியை விவரித்த பிறகு லூக்கா நற்செய்தியாளர் செல்வத்தை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை ஓர் உவமை வழி விளக்குகிறார். இதுவே ''மினா நாணய உவமை'' என அழைக்கப்படுகிறது (லூக் 19:11-28). செல்வக் கொழிப்பில் மிதந்த சக்கேயு மனம் திரும்பினார். தம் செல்வத்தை ஏழைகளோடு பகிர்ந்துகொள்ள அவர் முன்வந்தார். இங்கே செல்வத்தைப் பயன்படுத்தும் முறை என்னவென்பதை இயேசு எடுத்துக் கூறுவதாக நாம் பொருள் கொள்ளலாம். அந்நிகழ்ச்சிக்குப் பின் இயேசு கூறிய ''மினா நாணய உவமை''யை லூக்கா குறிப்பிடுகிறார். இந்த உவமையிலும் செல்வத்தை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்னும் கருத்து மேலும் விளக்கம் பெறுகிறது. உவமையில் வருகின்ற பணியாளர் மூன்று பேர். அவர்களில் முதல் இருவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்தைக் கொண்டு மேலும் அதிக பணம் ஈட்டுகின்றார்கள். ஆனால் மூன்றாவதாக வருகின்ற பணியாளரோ தம்மிடம் கொடுக்கப்பட்ட பணத்தை ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்துவிட்டு மேல் ஒன்றும் செய்யாமல் இருந்துவிடுகிறார்.

கடவுள் நமக்குத் தருகின்ற செல்வத்தையும் நேரத்தையும் திறமைகளையும் நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்னும் உண்மையை இயேசு இந்த உவமை வழி உணர்த்துகிறார். கடவுளாட்சியை நம்மிடையே நிறுவ வந்த இயேசுவின் கட்டளையை ஏற்று, அவரோடு ஒத்துழைக்க முன்வருவோர் சோம்பேறிகளாக இருக்கமாட்டார்கள்; மாறாக, கடவுளிடமிருந்து பெற்ற கொடைகளைக் கொண்டு அவருடைய ஆட்சியை இவ்வுலகில் நிலைநாட்டிட மனமுவந்து உழைப்பார்கள். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட செல்வத்தைக் கொண்டு மேலும் அதிக செல்வத்தை ஈட்டிய பணியாளர்களைப் போல நாமும் செயல்பட்டால், ''நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர்'' (லூக் 19:17) என்னும் பாராட்டு மொழியைக் கேட்கும் பேறு நமதாகும். மேலும், தான் பெற்ற பணத்தை அப்படியே திருப்பிக் கொடுத்த பணியாள் தன் தலைவரின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட்டார் என்பதையும் நாம் கருத வேண்டும். எனவே, முன்மதியோடு செயல்பட நம்மை அழைக்கின்ற கடவுளுக்கு நாம் கீழ்ப்படிந்து நடந்தால் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுகின்ற நல்ல பணியாளர்களாக இருப்போம். அவரிடமிருந்து நாம் பெறுகின்ற கைம்மாறு நமக்கு மகிழ்ச்சியையும் நிறைவையும் கொணரும்.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு நீர் வழங்குகின்ற கொடைகளைக் கொண்டு இறையாட்சி வளர நாங்கள் உழைத்திட அருள்தாரும்.