யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 32வது வாரம் வியாழக்கிழமை
2019-11-14




முதல் வாசகம்

ஞானம் - கடவுளின் ஆற்றலிலிருந்து புறப்படும் ஆவி;
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7: 22 - 8: 1

ஞானம் ஆற்றல் கொண்டது. அவ்வாற்றல் அறிவுடையது; தூய்மையானது; தனித்தன்மை வாய்ந்தது; பலவகைப்பட்டது; நுண்மையானது; உயிரோட்டம் உள்ளது; தெளிவுமிக்கது; மாசுபடாதது; வெளிப்படையானது; கேடுறாதது; நன்மையை விரும்புவது; கூர்மையானது. ஞானம் - எதிர்க்க முடியாதது; நன்மை செய்வது; மனித நேயம் கொண்டது; நிலைபெயராதது; உறுதியானது; வீண்கவலை கொள்ளாதது; எல்லாம் வல்லது; எல்லாவற்றையும் பார்வையிடுவது; அறிவும் தூய்மையும் நுண்மையும் கொண்ட எல்லா உள்ளங்களையும் ஊடுருவிச் செல்வது. ஞானம் - அசைவுகள் எல்லாவற்றையும் விட மிக விரைவானது. அதன் தூய்மையினால் எல்லாவற்றிலும் நிரம்பி நிற்கிறது. எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்கிறது. ஞானம் - கடவுளின் ஆற்றலிலிருந்து புறப்படும் ஆவி; எல்லாம் வல்லவரின் மாட்சியிலிருந்து எழும் தூய வெளிப்பாடு. எனவே மாசுபட்டது எதுவும் அதனுள் நுழைய முடியாது. ஞானம் - என்றுமுள ஒளியின் சுடர்; கடவுளது செயல்திறனின் கறைபடியாக் கண்ணாடி; அவருடைய நன்மையின் சாயல். ஞானம் - ஒன்றே என்றாலும், எல்லாம் செய்ய வல்லது; தான் மாறாது, அனைத்தையும் புதுப்பிக்கிறது; தலைமுறைதோறும் தூய ஆன்மாக்களில் நுழைகிறது; அவர்களைக் கடவுளின் நண்பர்கள் எனவும் இறைவாக்கினர்கள் எனவும் ஆக்குகிறது. ஞானத்தோடு வாழ்கின்றவர்கள் மீது அன்பு செலுத்துவது போல வேறு எதன்மீதும் கடவுள் அன்பு செலுத்துவதில்லை. ஞானம் - கதிரவனை விட அழகானது; விண்மீன் கூட்டத்தினும் சிறந்தது; ஒளியைக் காட்டிலும் மேலானது. இரவுக்குப் பகல் இடம் கொடுக்கிறது. ஆனால், ஞானத்தைத் தீமை மேற்கொள்ளாது. ஞானம் - ஒரு கோடி முதல் மறு கோடிவரை ஆற்றலோடு செல்கிறது; எல்லாவற்றையும் முறையாக ஒழுங்குபடுத்துகிறது.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு.
திருப்பாடல்கள் 119: 89,90. 91,130. 135,175

89 ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு; விண்ணுலகைப் போல் அது நிலைத்துள்ளது. 90 தலைமுறை தலைமுறையாய் உள்ளது உமது வாக்குப் பிறழாமை; நீர் பூவுலகை உறுதியாய் இருக்கச் செய்தீர், அது நிலைபெற்றுள்ளது. -பல்லவி

91 உம் ஒழுங்குமுறைகளின்படியே அனைத்தும் இன்றுவரை நிலைத்துள்ளன; ஏனெனில், அவை உமக்கு ஊழியம் செய்கின்றன. 130 உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது; அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. -பல்லவி

135 உம் ஊழியன்மீது உமது முக ஒளி வீசச் செய்யும்! உம் விதிமுறைகளை எனக்குக் கற்பித்தருளும். 175 உயிர் பிழைத்து நான் உம்மைப் புகழ்வேனாக! உம் நீதி நெறிகள் எனக்குத் துணைபுரிவனவாக! -பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-25

அக்காலத்தில் இறையாட்சி எப்போது வரும் என்று பரிசேயர் இயேசுவிடம் கேட்டனர். அவர் மறுமொழியாக, இறையாட்சி கண்களுக்குப் புலப்படும் முறையில் வராது. இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! எனச் சொல்ல முடியாது. ஏனெனில், இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது என்றார். பின்பு அவர் சீடர்களை நோக்கிக் கூறியது: ஒரு காலம் வரும்@ அப்போது மானிட மகனுடைய நாள்களில் ஒன்றையாவது காண நீங்கள் ஆவலாய் இருப்பீர்கள். ஆனால் நீங்கள் காணமாட்டீர்கள். அவர்கள் உங்களிடம், இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே! என்பார்கள். ஆனால் நீங்கள் போக வேண்டாம் அவர்களைப் பின்தொடரவும் வேண்டாம். வானத்தில் மின்னல் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கம் வரைக்கும் பளீரென மின்னி ஒளிர்வது போல மானிட மகனும் தாம் வரும் நாளில் தோன்றுவார். ஆனால் முதலில் அவர் பல துன்பங்கள் பட்டு இந்தத் தலைமுறையினரால் உதறித் தள்ளப்பட வேண்டும்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு 'இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது' என்றார்'' (லூக்கா 17:21)

இறையாட்சி பற்றி இயேசு போதித்துக் கொண்டே எருசலேமை நோக்கிப் பயணம் செய்தார் என்பதை லூக்கா நற்செய்தி விளக்குகிறது. ஆனால் இறையாட்சி எப்போது வரும் என்று அறிய மக்கள் விரும்பினர். அவர்களுக்கு இயேசு அளித்த பதில் நமக்கு வியப்பாக இருக்கலாம். அதாவது, இறையாட்சி எப்போது வரும் என்று நாளும் நேரமும் குறித்துப் பதில்கூற இயேசு மறுத்துவிட்டார். கடவுள் இயேசுவின் வழியாகத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் என்பதை இயேசு மக்களுக்குப் பல அடையாளங்கள் வழி உணர்த்தினார். எனவே இயேசுவில், அவருடைய அதிசய செயல்களில், அவருடைய போதனையில் இறையாட்சி ஏற்கெனவே விடியத் தொடங்கிவிட்டது. இதைக் குறிக்கும் விதத்தில்தான் இயேசு ''இறையாட்சி உங்கள் நடுவேயே செயல்படுகிறது'' என்று பதிலிறுத்தார். இதிலிருந்து இறையாட்சி என்றால் மனிதரின் உள்ளத்தில் மட்டுமே தனித்தனியாகச் செயல்படும் என நாம் முடிவுகட்டிவிடலாகாது. இயேசுவின் வாழ்வில் கடவுளின் வல்லமை துலங்குகிறது என்பதை உணர்வோர் ஏற்கெனவே இறையாட்சி அனுபவத்தைப் பெற்றனர்.

கடவுளோடு நல்லுறவு கொள்வதும், பிற மனிதரை மதித்து அவர்களை அன்புசெய்வதும் இறையாட்சியின் அடையாளங்கள். எங்கே அன்புக் கட்டளை செயலாக்கம் பெறுகிறதோ அங்கே கடவுளின் ஆட்சி நிலவுகிறது என நாம் உறுதியாகக் கூறலாம். ஆயினும் இறையாட்சியின் முழுமை எப்போது வரும் என்பதை நாளும் நேரமும் குறித்துச் சொல்ல இயேசு மறுத்துவிட்டார். சில கிறிஸ்தவர்கள் ''கடைசிக் காலம்'' இன்று வரப்போகிறது, நாளை வரப்போகிறது என்று தவறாகக் கருதுவதுண்டு. இது இயேசுவின் போதனைக்கு முரணாக உள்ளது. கடவுளின் அரசு இவ்வுலகில் ஏற்கெனவே வரத் தொடங்கிவிட்டது என்பதை நாம் ஏற்க வேண்டும். ஏனெனில் இயேசுவின் வாழ்க்கையும் போதனையும் சாவும் உயிர்த்தெழுதலும் நமக்கு இந்த உறுதிப்பாட்டைத் தருகின்றன. ஆனால் உலக முடிவு என்று வருமோ என்னும் அச்சம் நம் உள்ளத்தை ஆட்கொள்ளாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த வேளையில் இறுதிக் காலம் வந்தாலும் சரி, நாம் கடவுளின் ஆட்சியில் முழுமையாகப் பங்கேற்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கவேண்டும். அப்போது இறையாட்சி எப்போது வரும் கேட்காமல் இறையாட்சியில் இப்போதே பங்கேற்கும் முறை என்னும் கேள்வியை நாம் எழுப்புவோம். அதற்கு இயேசு தருகின்ற பதில்தான் நாம் அன்புக் கட்டளையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது.

மன்றாட்டு:

இறைவா, நாளை என்ன நிகழுமோ என்னும் கவலையில் நாங்கள் அழுந்திவிடாமல் இன்று எவ்வாறு வாழ வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு நடந்திட அருள்தாரும்.