யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 21வது வாரம் வியாழக்கிழமை
2019-08-29

திருமுழுக்கு யோவானின் பாடுகள்




முதல் வாசகம்

உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்'' என்கிறார் ஆண்டவர்.
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 1: 17-19

அந்நாள்களில் ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது. ``நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன். இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன். அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன் மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்'' என்கிறார் ஆண்டவர்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும்.
திருப்பாடல்கள் 71: 1-2. 3-4. 5-6. 15-,17

1 ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; ஒருபோதும் நான் வெட்கமுற விடாதேயும். 2 உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்; எனக்கு நீர் செவிசாய்த்து என்னை மீட்டுக் கொள்ளும். பல்லவி

3 என் அடைக்கலப் பாறையாக நீர் இருந்தருளும்; கோட்டை அரணாயிருந்து என்னை மீட்டருளும்; ஏனெனில், நீர் எனக்குக் கற்பாறையாகவும் அரணாகவும் இருக்கின்றீர். 4ய என் கடவுளே, பொல்லார் கையினின்று என்னைக் காத்தருளும். பல்லவி

5 என் தலைவரே, நீரே என் நம்பிக்கை; ஆண்டவரே, இளமை முதல் நீரே என் நம்பிக்கை. 6 பிறப்பிலிருந்து நான் உம்மைச் சார்ந்துள்ளேன்; தாய் வயிற்றிலிருந்து நீர் என்னைப் பிரித்தெடுத்தீர். பல்லவி

15யb என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் நீர் அருளும் மீட்பையும் எடுத்துரைக்கும்; உம் அருட்செயல்களை என்னால் கணிக்க இயலாது. 17 கடவுளே, என் இளமைமுதல் எனக்குக் கற்பித்து வந்தீர்; இனி வரும் நாள்களிலும் உம் வியத்தகு செயல்களை அறிவிப்பேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

யோவான் ஏரோதிடம், ``உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல'' எனச் சொல்லி வந்தார்.

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 17-29

அக்காலத்தில் ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக் கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆள் அனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் ஏரோதிடம், ``உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல'' எனச் சொல்லி வந்தார். அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான். அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம், ``உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்'' என்றான். ``நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்'' என்றும் ஆணையிட்டுக் கூறினான். அவள் வெளியே சென்று, ``நான் என்ன கேட்கலாம்?'' என்று தன் தாயை வினவினாள். அவள், ``திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்'' என்றாள். உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, ``திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக் கொடும்'' என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர் முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை. உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டு வருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம் கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மீட்புப் பெறுவோர் சிலர் மட்டும் தானா?'' (லூக்கா 13:23)

சில வேளைகளில் மனிதர் எழுப்புகின்ற கேள்விகள் அர்த்தமற்றவையாகத் தோன்றலாம். ஆனால், ஆழ்ந்து சிந்திக்கும்போது அங்கே புதைந்துகிடக்கின்ற அர்த்தத்தை நாம் காண முடியும். ''மீட்புப்பெறுவோர் சிலர் மட்டும் தானா?'' என்னும் கேள்வி இவ்வகையைச் சார்ந்தது எனலாம். இயேசு இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டே எருசலேமை நோக்கிச் செல்கிறார். அங்குதான் அவர் சிலுவையில் அறையுண்டு மனித இனத்தின் மீட்புக்காகத் தம்மையே பலியாக்குவார். பயணம் செல்கின்ற இயேசுவை அணுகுகிறார் ஒருவர். மீட்புப் பெறுவோர் சிலரா பலரா என்பதை அவர் அறிய விரும்புகிறார். இயேசு அவருக்கு நேரடியான பதில் வழங்கவில்லை. ஆனால், இறையாட்சியில் நுழைவதற்கான வாயில் ''இடுக்கமானது'' என இயேசு குறிப்பிடுகிறார். அதே நேரத்தில், இயேசுவோடு பழகி, அவரோடு விருந்து அருந்தி உறவுகொண்டாடியதைக் காட்டி விண்ணரசில் நுழைந்துவிடலாம் என நினைத்தால் அது தவறு எனவும் இயேசு சொல்கிறார். என்றாலும், கடவுளின் ஆட்சியில் அனைத்து மனிதரும் இடம் பெற வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம் என்பதில் ஐயமில்லை.

தாங்களே கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்னும் இறுமாப்பில் தங்களுக்கு எப்படியும் கடவுளின்; ஆட்சியில் பங்கு உண்டு எனவும், தாங்கள் மீட்புப் பெறுவது உறுதி எனவும் மக்கள் நினைத்தலாகாது என்பதை இயேசு உணர்த்துகிறார். கடவுளின் ஆட்சி எல்லா மனிதருக்கும் உரித்தானது. எனவே, மீட்புப் பெறுவோர் உலகின் நான்கு திசைகளிலிருந்தும் வருவர்; இறையாட்சியில் பங்கேற்பர் (காண்க: லூக்கா 13:29). இவ்வாறு கடவுளின் மீட்பில் பங்கேற்போர் சிலரல்ல, பலரே என நாம் கூறலாம். என்றாலும், இயேசுவின் அழைப்பை ஏற்று, ''இடுக்கமான'' வாயில் வழியாக நுழைய வேண்டும் என்னும் போதனையை நாம் மறந்துவிடல் ஆகாது. மீட்பு என்பது நாம் கேட்டுப் பெறுகின்ற ஓர் உரிமை அல்ல, மாறாகக் கடவுள் தாமாகவே விரும்பி நமக்கு அளிக்கின்ற ஒரு கொடை. எனவே, மீட்பு என்னும் கொடைக்காக நாம் எந்நாளும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதே முறை.

மன்றாட்டு:

இறைவா, எங்களுக்கு மீட்பு என்னும் கொடையை அளித்ததற்கு நன்றி!