யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 20வது வாரம் வியாழக்கிழமை
2019-08-22

அரசியான தூயகன்னிமரியாளின் விழா




முதல் வாசகம்

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 9: 2-4, 6-7

காரிருளில் நடந்துவந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர் ஒளி உதித்துள்ளது. ஆண்டவரே! அந்த இனத்தாரைப் பல்கிப் பெருகச் செய்தீர்; அவர்கள் மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தினீர்; அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல் உம் திருமுன் அவர்கள் அகமகிழ்கிறார்கள்; கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது அக்களிப்பது போல் களிகூர்கிறார்கள். மிதியான் நாட்டுக்குச் செய்தது போல அவர்களுக்குச் சுமையாக இருந்த நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர். அவர்கள் தோளைப் புண்ணாக்கிய தடியைத் தகர்த்துப் போட்டீர்; அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறிந்தீர். ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ `வியத்தகு ஆலோசகர், வலிமை மிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர்' என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது; தாவீதின் அரியணையில் அமர்ந்து தாவீதின் அரசை நிலைநாட்டுவார்; இன்றுமுதல் என்றென்றும் நீதியோடும் நேர்மையோடும் ஆட்சிபுரிந்து அதை நிலைபெயராது உறுதிப்படுத்துவார்; படைகளின் ஆண்டவரது பேரார்வம் இதைச் செய்து நிறைவேற்றும்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் ஊழியர், அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள்.
திருப்பாடல்கள் 113: 1-2. 3-4. 5-6. 7-8

1 ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள். 2 ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக! பல்லவி

3 கீழ்த்திசை முதல் மேற்றிசை வரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக! 4 மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும் விட உயர்ந்தது அவரது மாட்சி. பல்லவி

5 நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர் போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்? 6 அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார். பல்லவி

7 ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; 8 உயர்குடி மக்களிடையே - தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே - அவர்களை அமரச் செய்கின்றார். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

`நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்''

நற்செய்தி வாசகம்

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, ``அருள் நிறைந்த மரியே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, ``மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், ``இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!'' என்றார். வானதூதர் அவரிடம், ``தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என்றார். பின்னர் மரியா, ``நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

"நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்"

நம் அன்னை மரியாவின் விசுவாச அறிக்கை இது. இன்று தான் அறிக்கையிட்டதை தன் வாழ்வின் இறுதிவரையிலும் வாழ்ந்து காட்டினாள். இந்த விசுவாச அறிக்கையின் அடிப்படையில் தன் வாழ்க்கை முழுவதும் கட்டி எழுப்பினாள். அவர் வாழ்வின் எல்லா நிகழ்வுகளிலும் வலுவூட்டி, வழிநடத்திச் சென்றது இந்த விசுவாச அறிக்கை. தன் விசுவாச அறிக்கை குருட்டு நம்பிக்கை அல்ல; மாறாக ஆழ்ந்த அறிவுப்பூர்வமானது என்பதை மரியா தன் பலவேறு கேள்விகளில் உறுதிப்படுத்துகிறார். வானதூதரின் வாழ்த்தில் மயங்கிவிடவில்லை. மிகப்பெரிய பதவியிலும் அசந்துவிடவில்லை. தன் கேள்விகளைக் கேட்கிறார். சந்தேகங்களை நிவர்த்தி செய்கிறார். வானதூதரால் சொல்லப்பட்ட செய்தியின் சான்றுகளை உறுதிசெய்கிறார். அறிவுப்பூர்வமாகச் சில உண்மைகளைக் கண்ட பின் அறிவுக்கு அப்பாற்பட்ட ஆண்டவனின் ஆற்றலுக்கு தன்னை அர்ப்பணிக்கிறாள். இவ்வாறு விசுவாசத்தற்கு விளக்கம் தருகிறார் அன்னை மரியா. ஆகவே விசுவாசம், கடவுள் நம்பிக்கை இவை மூட நம்பிக்கை அல்ல. அறிவில் ஆரம்பமாகி ஆண்டவனின் அருளில் நிறைவடைவது.முழுமையாக அதன் காரண காரியங்களை அறிவுப்பூரவமாகத் தெறிந்துகொண்ட காரணத்தால்,தன் வாழ்வின் எல்லாச் சூழலிலும் குறிப்பாக நிரபராதியான தன்அன்பு மகனை இளம் வயதில் குற்றவாளியாகச் சிலுவையில் அறைந்து கொன்றதை அமைந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்ள முடிந்தது.இது விசுவாசம். 'நான் ஆண்டவரின் அடிமை' என்றதன் வாழ்க்கை வடிவம். இந்த விசுவாச அறிக்கையும் வாழ்வும் நம் அன்னையை உலகம் போற்றும் பெண்ணாக, விண்ணக அரசியாக உயர்த்தியுள்ளது. அந்த அன்னையை வேண்டுவோம். அருள் நிறைந்த மரியே வாழ்க.. .. ..இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

கடவுளுக்கு அர்ப்பணமானவரான இயேசுவே, நிலைவாழ்வு தரும் உமது வார்த்தைகளுக்காக உம்மைப் போற்றுகிறேன். உமது அறைகூவல் வார்த்தைகள் கேட்பதற்கும், கடைப்பிடிப்பதற்கும் கடினமாக இருந்தாலும், அவையே எங்களுக்கு நிறை வாழ்வைத் தரும் என்று நம்புகிறோம். எங்களை ஆசீர்வதியும். வலுப்படுத்தும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.