யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2019-08-11

(இன்றைய வாசகங்கள்: சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 18: 6-9,திருப்பாடல்கள் 33;1 12 18 19 20 22,எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2,8-19,லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 32-48)




நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்.


திருப்பலி முன்னுரை

பொறுப்புக்குரியவர்களே,

பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். தலைவர் வந்து பார்க்கும்போது, விழித்திருக்கும் பொறுப்புள்ள பணியாளர்களாக வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவரின் வருகையை எப்போதும் எதிர்நோக்கி காத்திருக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் வர காலம் தாழ்த்துவார் என கூறிக்கொண்டு, தீய நாட்டங்களுக்கும், செயல்களுக்கும் இடம் கொடுத்தால் நாம் கொடுமையான தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவோம் என இயேசு எச்சரிக்கை விடுக்கிறார். நம் தலைவராகிய இயேசுவுக்கு உண்மை உள்ளவர்களாக வாழும்போது, நம்மை அவர் தம் உடமைக்கெல்லாம் அதிகாரியாக அமர்த்துவார் என்ற வாக்குறுதி அளிக்கப்படுகிறது. எனவே கடவுளின் திருவுளத்தை உணர்ந்து, அவரது விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்புள்ள பணியாளர்களாக செயல்பட வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

மூதாதையர்களின் புகழ்ப் பாக்களை அதே வேளையில் பாடிக் கொண்டிருந்தார்கள்.
சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 18: 6-9

எகிப்து நாட்டில் தாங்கள் நம்பியிருந்த வாக்குறுதிகளைத் தெளிவாக அறிந்து அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி அந்த இரவு எங்கள் மூதாதையர்க்கு முன்னறிவிக்கப்பட்டது. நீதிமான்களின் மீட்பையும் அவர்களுடைய பகைவர்களின் அழிவையும் உம் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் பகைவர்களை நீர் தண்டித்த அந்த ஒரே செயலால் உம்மிடம் எங்களை அழைத்துப் பெருமைப்படுத்தினீர். நல்லவர்களின் தூய மக்கள் மறைவாகப் பலி செலுத்தினார்கள்; நன்மைகளையும் இடர்களையும் ஒன்று போலப் பகிர்ந்து கொள்வார்கள் என்னும் இறைச் சட்டத்திற்கு அவர்கள் ஒருமித்து உடன்பட்டார்கள்; மூதாதையர்களின் புகழ்ப் பாக்களை அதே வேளையில் பாடிக் கொண்டிருந்தார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
திருப்பாடல்கள் 33;1 12 18 19 20 22

1 நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. 12 ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். -பல்லவி

18 தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 19 அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். -பல்லவி

20 நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 22 உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக! -பல்லவி

இரண்டாம் வாசகம்

அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன்வந்தார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 1-2,8-19

சகோதரர் சகோதரிகளே, நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர். ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஓர் அன்னியரைப்போல் வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோபுடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார். ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத் திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே. ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போல் இருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர். இவர்கள் எல்லாம் நம்பிக்கை கொண்டவர்களாய் இறந்தார்கள்; வாக்களிக்கப்பட்டவற்றை அவர்கள் பெறவில்லையெனினும், தொலையில் அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்; இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறு ஏற்றுக்கொள்வோர் தம்முடைய தாய் நாட்டைத் தேடிச்செல்வோர் என்பது தெளிவு. தாங்கள் விட்டுவந்த நாட்டை அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் திரும்பிச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். ஆனால், அவர்கள் சிறப்பான ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகிறார்கள். அதனால்தான் கடவுளும் தம்மை, ``அவர்களுடைய கடவுள்'' என்று அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லை. அவர்களுக்கென அவர் ஒரு நகரை ஆயத்தப்படுத்தியுள்ளார். ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். ``ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்'' என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன்வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மிகுதியாக ஒப்படைக்கப் படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.'' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 32-48

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். உங்கள் இடையை வரிந்து கட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக்கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக் கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள். எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.'' அப்பொழுது பேதுரு, ``ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?'' என்று கேட்டார். அதற்கு ஆண்டவர் கூறியது: ``தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்க வேண்டிய முறையில் செயல்படுபவன், அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப் பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப் படும். மிகுதியாக ஒப்படைக்கப் படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வேண்டலை கேட்பவராம் இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமக்கு உண்மையுள்ள பணியாளர்களாய் வாழவும், திருச்சபையின் மக்கள் உமது திருவுளப்படி வழிநடத்தவும் அருள்புரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

தலைமுறைதோறும் எமது புகலிடமாய் இருக்கின்ற தந்தையே இறைவா!

உலகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் பணத்துக்கும், பதவிக்கும் சேவை செய்வதை விடுத்து, எங்களுக்கு வாழ்வளிக்கும் உண்மை தலைவரான உமக்கே பணி செய்து வாழ வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

இரக்கத்தின் ஆற்றலையே! எம் இறைவா!

இன்றைய சூழலில் பெரியவர் முதல் குநைதைகள் வரை அனைவரும் இறைநம்பிக்கையில் பற்றற்றவர்களாகவும்,இளையோர் இவ்வுலக மாயைகள், சிற்றின்பங்களுக்குத் தங்களேயே அடிமைபடுத்திக் கொள்ளாமல் கிறிஸ்துவே, எனது ஓப்பற்ற ஆதாயம் என்று உமக்குச் சாட்சிகளாகத் திகழ வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அமைதி அளிப்பவராம் இறைவா,

எம் இளையோர் இளமையில் உம்மை அதிகமாகத் தேடவும் இறையரசின் மதிப்பீடுகளைத் தனதாக்கி, தங்கள் வாழ்வால், கிறிஸ்துவுக்கும் சமூகத்திற்கும் சான்றுப் பகர்ந்திடத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அமைதி அருள்பவரே இறைவா,

உலகு சார்ந்த பாரம்பரியங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளில் சிக்கித் தவிக்கும் எம் நாட்டு மக்கள் அனைவரும், உம்மைப் பற்றிய உண்மைகளை உணர்ந்து நீர் தரும் அமை தியை பெற்றுக்கொள்ள வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

குடும்பங்களின் பாதுகாவலான எம் இறைவா!

எம் குடும்பங்களில் உள்ள எம் பெற்றோர், பெரியோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் சமாதானத்தோடும், ஒற்றுமையோடும் பிரிவினைகள் கருத்துவேறுபாடுகள் இல்லாமல் வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறிய எம் நற்செய்தியின் நாயனரே!

எம் இறைவா! விதவைகள்,அனாதைகள், கைவிடபட்டோர் வறுமையில் வாடுவோர் ஆகி அனைவருக்கம் உம் அருளால் அவர்கள் வாழ்வு வளம் பெறவும், எதவிக் கரம் நீட்டிஅவர்களை ஆதரிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

பணம் எதற்காக.. .. .. .. ..?

எனக்காக, என்னுடைய வசதிகளுக்காக. இல்லை இல்லை இல்லவே இல்லை. என்னதான் நீ கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்தாலும், பணமோ சொத்தோ உன்னுடையதல்ல. அடுத்தவன் பணத்தை அவன் விரும்பியபடி பயன்படுத்துவதே முறையானது. எல்லாம் ஆண்டவனுடையது. ஐயோ நான் உழைத்தது, நான் சம்பாதித்தது. இந்த கூப்பாடு பலிக்காது. என்னதான் உழைத்துச் சேர்த்தாலும் நாம் சொந்தக்காரனாக முடியாது. வேலைக்காரன் அல்லது வாடகைக்காரன் என்ற நிலையில்தான் இருக்கிறோம். இருக்கும்வரை பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வளவுதான். எனவே உறிமையாளர் விரும்பியபடி பயன்படுத்துவதே நியாயம். ஆண்டவன் விருப்பம் என்ன? "உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள். இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்" லூக் 12'33

இவ்வுலகில் நம் வாழ்க்கை, நாம் சேர்க்கும் செல்வம் எல்லாமே நிலை இல்லாதது.வேலைக்காரனாக, வாடகைக்காரனாக வாழும் நாம், அடாவடித்தனமாக வாழ்ந்தால், எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். இது தேவையா? அவர் விருப்பப்படி வாழ்ந்து வாழ்க்கையை எக்காலத்தும் வாழ்வோம்.

மன்றாட்டு:

மனநிறைவின் ஊற்றே இறைவா, எவ்வகைப் பேராசைக்கம் இடங்கொடாத மனதை எனக்குத் தந்தருளும். நீர் எனக்குத் தந்திருக்கிற கொடைகள், நன்மைகள், செல்வங்களை எண்ணிப்பார்த்து, நன்றி சொல்கிற, மகிழ்ச்சி அடைகிற மனநிலையை எனக்குத் தாரும். நீர் தரும் ஆறுதலும், உம்மோடு;, உமக்காக செலவழிக்கும் நேரமும் எவ்வளவோ மேலானவை என்பதை நான் உணரச் செய்யும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.