யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2019-07-28

(இன்றைய வாசகங்கள்: தொடக்க நூலிலிருந்து வாசகம் 18;20-32,திருப்பாடல்கள் 138:1-3,6-8,தூய பவுல் கொலேசியருக்கு எழுதிய நிருபத்திலிருந்து வாசகம் 2;12-14,பலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 11:1-13)




நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்.


திருப்பலி முன்னுரை

இறைமக்கள் அனைவருக்கும் என் அன்பு வணக்கமும் வாழ்த்தும் உரியதாகுக.

இறைவனுக்குரியவர்களே,

பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிறு திருப்பலியை சிறப்பிக்க உங்களை அன்போடு வரவேற்கிறோம். இறைவேண்டலின் வல்லமையை உணர்ந்து வாழ இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவர் இயேசு, தந்தையாம் இறைவனிடம் தனிமையாக வேண்டிக் கொண்டிருந்த பல நிகழ்வுகள் நற்செய்திகளில் சொல்லப்பட்டிருக்கின்றன. இன்று தங்களுக்கும் இறைவேண்டல் செய்யக் கற்றுத்தருமாறு, சீடர்கள் இயேசுவிடம் கோரிக்கை வைக்கின்றனர். அவர்களுக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுக்கும் இயேசு, அதன் பயனையும் சுட்டிக்காட்டுகிறார். தொடர்ந்து இறைவேண்டல் செய்வோரின் உள்ளுணர்வுகளை ஆண்டவர் புறக்கணிக்கமாட்டார் என்ற பாடத்தை மனதில் இருத்த நாம் அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசுவைப் போன்று இறைவனின் திருவுளம் நம்மில் நிறைவேற வரம் வேண்டி, இத்திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

"தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ?
தொடக்க நூலிலிருந்து வாசகம் 18;20-32

அந்நாட்களில் ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, "சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது. என்னை வந்தடைந்த கண்டனக்குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்து கொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்" என்றார். அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார். ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: "தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ? தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?" என்றார். அதற்கு ஆண்டவர், "நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்" என்றார். அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, "தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்துவிட்டேன்; ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் துறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?" என்றார். அதற்கு அவர், "நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்" என்றார். மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, "ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?" என்று கேட்க, ஆண்டவர், "நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்" என்றார். அப்பொழுது ஆபிரகாம்; என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்? என, அவரும் "முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்" என்று பதிலளித்தார். அவர், "என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத்துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?" என, அதற்கு அவர், "இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்" என்றார். அதற்கு அவர், "என் தலைவரே, சினமடைய வேண்டாம்: இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒரு வேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?" என, அவர், "அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்" என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்!
திருப்பாடல்கள் 138:1-3,6-8

ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்: தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன். உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்: பல்லவி

உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்: ஏனெனில், அனைத்திற் கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர். நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்: என் மனத்திற்கு வலிமை அளித்தீர். பல்லவி

ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்: எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்: ஆனால், செருக்குற்றோ ரைத் தொலையிலிருந்தே அறிந்து கொள்கின்றீர். பல்லவி

நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்: என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்: பல்லவி

உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர். நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்: ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு: உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும் பல்லவி

இரண்டாம் வாசகம்

சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்து விட்டார்.
தூய பவுல் கொலேசியருக்கு எழுதிய நிருபத்திலிருந்து வாசகம் 2;12-14

சகோதர சகோதரிகளே! நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள். உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்களாயும் குற்றங்கள் செய்பவர்களாயும் வாழ்ந்ததால் நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார். நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார். நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன்பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்து விட்டார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி! ' அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

பலூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 11:1-13

அக்காலத்தில் இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, ' ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும் ' என்றார். அவர் அவர்களிடம், ' நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள்; தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். (தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்)' என்று கற்பித்தார். மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: ' உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ' நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை ' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், ' எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது ' என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ' மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி! '

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வேண்டலை கேட்பவராம் இறைவா,

எம் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும், உமக்கு உகந்தவர்களாக வாழவும், உமது திருச்சபையின் புதுவாழ்வுக்காக உழைக்கவும் வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

எமக்காய் எப்பொழுதும் கரம் விரித்துக் காத்திருக்கும் என் இறைவா!

செபம் என்பது உமக்கும் எமக்கும் உள்ள உன்னத உரையாடல். அதில் கேட்டும் கிடைக்காமல் போனதும் உண்டு. கேட்காமல் நீர் வாரிவழங்கியது பலவும் உண்டு என்பதனை உணர்ந்து என்ன நேர்த்தாலும் நன்றியோடு உம்மைப் போற்றிட, தன்னலம் பாராமல் அனைவருக்குமாய் செபித்திட நல்மனம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அன்புத்தந்தையே இறைவா!

உம்முடைய பிள்ளைகளாகும் அருளை எங்களுக்குத் தந்து கிறிஸ்துவின் ஒளியில் நடக்க எங்களை அழைத்துள்ளீர். பொய்மை என்னும் இருளில் நாங்கள் சிக்கிக் கொள்ளாமல், உண்மையின் பேரொளியில் நிலைத்து நின்றிட எங்களுக்கு அருள் புரியவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

அமைதி அளிப்பவராம் இறைவா,

எம் இளையோர் இளமையில் உம்மை அதிகமாகத் தேடவும் இறையரசின் மதிப்பீடுகளைத் தனதாக்கி, தங்கள் வாழ்வால், கிறிஸ்துவுக்கும் சமூகத்திற்கும் சான்றுப் பகர்ந்திடத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

செபிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியரான இயேசுவே,

நீர் கற்றுத் தந்ததுபோல நாள்தோறும் நாங்கள் செபிக்க எங்களுக்கு செப ஆர்வத்தைத் தந்தருளும். நாங்கள் நாள்தோறும் தந்தையைப் போற்றவும், உமக்கு நன்றி கூறவும், தூய ஆவியில் மகிழவும், அன்னை மரியாவை வாழ்த்தவும் எங்களுக்கு வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

குடும்பங்களின் பாதுகாவலான எம் இறைவா!

எம் குடும்பங்களில் உள்ள எம் பெற்றோர், பெரியோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் சமாதானத்தோடும், ஒற்றுமையோடும் பிரிவினைகள் கருத்துவேறுபாடுகள் இல்லாமல் வாழத் தேவையான அருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

திட்டமிட்டு செயல்படுத்துபவராம் இறைவா,

உம்மைப் போற்றுகிறோம். மார்த்தாவின் அறியாமையை அவருக்கு அன்புடன் சுட்டிக்காட்டியதுபோல, எங்களின் அறியாமையையும், குறை காணும் மனநிலையையும் சுட்டிக்காட்டியருளும். இதனால், நாங்கள் சரியானவைகளை உணரும் ஆற்றலை உமது தூய ஆவியால் பெற்றுக்கொள்ள வரமருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.


இன்றைய சிந்தனை

வாழ்வின் உயிரோட்டம் செபம்

செபமும் நற்செயலும் நிறை வாழ்வுக்கு அவசியமான இரு இணைபிரியா வழிமுறைகளாக இருந்த போதிலும், செப வாழ்வு சற்று கடினமான ஒன்று. இதை உணர்ந்த இயேசு தன் சீடர்களுக்கு அதைக் கற்றுக் கொடுக்கிறார். இறைமகனாக இருந்தும் தானே தினமும் செபித்தார். இக்கட்டான வேளைகளில், முக்கியமான முடிவுகளின்போது இறை உதவியைநாடி செபித்தார்.(லூக்3:21,5:16,6:12,9:18,9:28,22:41-42,23:34) செபத்தின் பல்வேறு முறைகளையும் ( நன்றி, புகழ்ச்சி , விண்ணப்பம், மன்னிப்பு) கையாளுவதையும் காண்கிறோம். நீ செபிக்கிறாயா? பலருக்கு பணம் பாக்கெட்டில் இருந்தால் செபம் செய்ய நேரம் இருக்காது. பதவியும் புகழும் சேர்ந்தால் கடவுளையே மறந்துவிடுவர். கடவுள், செபம் எல்லாம் ஏழைகளுக்கு என்ற எண்ணம் சிலருக்கு. அடுத்தவர் செபத்தில் வாழலாம் என்று நினைத்தலாகாது. மனைவி தினமும் கோவிலுக்குப் போவாள். தினமும் செபம் செய்வாள். பிள்ளைகள் தினமும் அருட்சாதனங்களில் பங்குபெருவார்கள். அதில் எனக்குப் பங்கு கிடைக்கும் என்ற ஒட்டுண்ணி வாழ்வு விசுவாச வாழ்வுக்குப் பொருந்தாது. இது இயேசுவிடம் கற்ற பாடமும் அல்ல. ஆகவே இயேசு செபித்ததுபோல நாமும் செபிப்போம். வாழ்வில் மகிழ்வோம்.

மன்றாட்டு:

செபிக்கக் கற்றுக்கொடுத்த ஆசிரியரான இயேசுவே, நீர் கற்றுத் தந்ததுபோல நாள்தோறும் நாங்கள் செபிக்க எங்களுக்கு செப ஆர்வத்தைத் தந்தருளும். நாங்கள் நாள்தோறும் தந்தையைப் போற்றவும், உமக்கு நன்றி கூறவும், தூய ஆவியில் மகிழவும், அன்னை மரியாவை வாழ்த்தவும் எங்களுக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.