யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 15வது வாரம் திங்கள்கிழமை
2019-07-15

புனித பொனவேந்தர்




முதல் வாசகம்

`பிறக்கும் எபிரேய ஆண் மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள்.
விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 1: 8-14,22

அந்நாள்களில் யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான். அவன் தன் குடிமக்களை நோக்கி, ``இதோ, இஸ்ரயேல் மக்களினம் நம்மைவிடப் பெருந்தொகையதாயும் ஆள்பலம் வாய்ந்ததாயும் உள்ளது. அவர்கள் எண்ணிக்கையில் பெருகிடாதவாறு தந்திரமாய்ச் செயல்படுவோம், வாருங்கள். ஏனெனில் போர் ஏற்படுமாயின், அவர்கள் நம் எதிரிகளுடன் சேர்ந்துகொள்வர்; நம்மை எதிர்த்துப் போரிடுவர்; இந்நாட்டிலிருந்தும் வெளியேறிவிடுவர்'' என்று கூறினான். எனவே கடும் வேலையால் அவர்களை ஒடுக்குவதற்காக அடிமை வேலை வாங்கும் அதிகாரிகள் அவர்கள் மேல் நியமிக்கப்பட்டனர். பார்வோனுக்காக அவர்கள் பித்தோம், இராம்சேசு ஆகிய களஞ்சிய நகர்களைக் கட்டியெழுப்பினர். ஆயினும் எத்துணைக்கு எகிப்தியர் அவர்களை ஒடுக்கினார்களோ, அத்துணைக்கு அவர்கள் எண்ணிக்கையில் உயர்ந்தனர்; பெருகிப் பரவினர். இதனால் எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கண்டு அச்சமுற்றனர். எகிப்தியர் இஸ்ரயேல் மக்களைக் கொடுமைப் படுத்தி வேலை வாங்கினர்; கடினமான சாந்து செங்கல் வேலையாலும், அனைத்து வயல்வெளி வேலையாலும், மேலும் கொடுமைப்படுத்தி வாங்கிய ஒவ்வொரு வேலையாலும், அவர்கள் வாழ்க்கையே கசந்து போகும்படி செய்தனர். பின்னர், பார்வோன் தன் குடிமக்கள் அனைவருக்கும் ஆணைவிடுத்து, ``பிறக்கும் எபிரேய ஆண் மகவு அனைத்தையும் நைல் நதியில் எறிந்து விடுங்கள். பெண் மகவையோ வாழ விடுங்கள்'' என்று அறிவித்தான்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!
திருப்பாடல்கள் 124: 1-3. 4-6. 7-8

1 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில் - இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக! 2 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில், நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது, 3 அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது, அவர்கள் நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். பல்லவி

4 அப்பொழுது, வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்; பெரு வெள்ளம் நம்மீது புரண்டோடியிருக்கும்;5 கொந்தளிக்கும் வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்கும். 6 ஆண்டவர் போற்றி! போற்றி! எதிரிகளின் பற்களுக்கு அவர் நம்மை இரையாக்கவில்லை. பல்லவி

7 வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த பறவைபோல் ஆனோம்; கண்ணி அறுந்தது; நாம் தப்பிப் பிழைத்தோம். 8 ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை! விண்ணையும் மண்ணையும் உண்டாக்கியவர் அவரே! பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

``நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 34-11: 1

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர். என்னை விடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். என்னை விடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர். உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார். இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.'' இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து முடித்ததும் பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்' என்றார் (மத்தேயு 10:39)

இயேசுவைப் பின்செல்ல விரும்புவோர் தீர்க்கமான முடிவெடுத்து, உறுதியான உள்ளத்தோடு அவரைப் பின்தொடர வேண்டும். இயேசுவின் பொருட்டுத் துன்பங்களை ஏற்கவும் அவர்கள் தயங்கக் கூடாது. ஏன், தம் உயிரையே இயேசுவுக்காகக் காணிக்கையாக்கிட அவருடைய சீடர்கள் முன்வரவேண்டும். இவ்வாறு தம் உயிரை இழப்போர் உண்மையில் ''அதைக் காத்துக்கொள்வர்'' என இயேசு கூறுவது முன்னுக்குப் பின் முரண்பாடாகப் படலாம். ஆனால் உண்மை அதுவன்று. இவ்வுலகில் நமக்குத் தரப்படுகின்ற உயிர் ஒருநாள் நம்மைவிட்டுப் பிரிந்துவிடும். ஆனால் மனித வாழ்வு இவ்வுலகத்தோடு முடிந்துவிடுவதல்ல. மனித வாழ்வின் நிறைவு இம்மண்ணக வாழ்வைத் தாண்டிச் செல்கின்ற ஒன்று. நிலையான வாழ்வைப் பெற வேண்டும் என்னும் ஏக்கம் மனித உள்ளத்தில் எப்போதும் இருக்கவே செய்யும். அந்த நிலையான வாழ்வு ஒருநாளும், ஒருபோதும் அழியாத ஒன்றாக இருக்கும் என இயேசு நமக்கு வாக்களிக்கிறார்.

இவ்வுலகக் கவர்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு, இவ்வுலகத்தைச் சார்ந்தவற்றையே விடாது பிடித்துக்கொள்ள விரும்புகின்ற மனிதர் ஏமாற்றமே அடைவர். அவர்கள் நிலையானது என நினைப்பது உண்மையிலேயே நிலையற்றது என இறுதியில் அவர்கள் உணர்ந்துகொள்வர். இதனால் நாம் மறுவுலக வாழ்வு நமக்கு உண்டு என்னும் நினைப்பில் இவ்வுலக வாழ்வை வெறுக்க வேண்டும் என இயேசு கேட்கவில்லை. இவ்வுலக வாழ்வு கடவுள் நமக்கு அளிக்கின்ற கொடையே. ஆனால் இவ்வுலகம் நம் இதயத்தில் கடவுளின் இடத்தைப் பிடித்துக்கொள்ளக் கூடாது. கடவுளுக்கே உரிய மாட்சியையும் வணக்கத்தையும் நாம் இவ்வுலகு சார்ந்த எப்பொருளுக்கும் அளிப்பது ''சிலைவழிபாடு'' போன்றதுதான். உண்மையான கடவுளை நாம் மறந்துவிட்டு மனம் போன போக்கில் நம் வாழ்வை அமைத்துக்கொள்ள விரும்பினால் நம் உள்ளத்தில் அமைதி தோன்றாது. எனவே, இயேசுவின் பொருட்டு நாம் எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்போது நாம் நம் வாழ்வின் நிறைவைக் கண்டுகொள்வோம். இதுவே நம் ஆன்ம வேட்கையைத் தணிக்கின்ற நீரூயஅp;ற்றாக நம்மில் வந்து பாய்ந்து வழிந்தோடும். அப்போது அலைந்து குலைந்து நாம் கலங்காமல் உள்ளத்தில் அமைதி காண்போம்.

மன்றாட்டு:

இறைவா, நீரே எங்கள் வாழ்வின் நிறைவு என நாங்கள் உணர்ந்து செயல்பட அருள்தாரும்.