யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 13வது வாரம் செவ்வாய்க்கிழமை
2019-07-02




முதல் வாசகம்

லோத்து குடியிருந்த நகர்களை அழித்தபோது கடவுள் அவரைக் காப்பாற்றினார்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 19: 15-29

அந்நாள்களில் பொழுது விடியும் வேளையில் தூதர்கள் லோத்தை நோக்கி, ``நீ எழுந்திரு! உன் மனைவியையும், உன் இரு புதல்வியரையும் கூட்டிக்கொண்டு போ! இல்லையேல், இந்நகரின் தண்டனைத் தீர்ப்பில் நீயும் அகப்பட்டு அழிவாய்'' என்று வற்புறுத்திக் கூறினார்கள். அவர் காலந்தாழ்த்தினார். ஆண்டவர் அவர் மீது இரக்கம் வைத்திருந்ததால், அந்த மனிதர்கள் அவரது கையையும், அவர் மனைவியின் கையையும், அவர் இரு புதல்வியர் கையையும் பிடித்துக் கொண்டுபோய் நகருக்கு வெளியே விட்டார்கள். அவர்களை வெளியே அழைத்து வந்தவுடன் அந்த மனிதர்கள் அவரை நோக்கி, ``நீ உயிர் தப்புமாறு ஓடிப்போ; திரும்பிப் பார்க்காதே; சமவெளி எங்கேயும் தங்காதே; மலையை நோக்கித் தப்பி ஓடு; இல்லையேல் அழிந்து போவாய்'' என்றார்கள். லோத்து அவர்களை நோக்கி: ``என் தலைவர்களே, வேண்டாம். உங்கள் அடியானுக்கு உங்கள் பார்வையில் இரக்கம் கிடைத்துள்ளது. என் உயிரைக் காக்கும் பொருட்டு நீர் காட்டிய பேரன்பு உயர்ந்தது. ஆயினும் மலையை நோக்கித் தப்பியோட என்னால் இயலாது. ஓடினால் தீங்கு ஏற்பட்டு, நான் செத்துப் போவேன். எனவே, நான் தப்பியோடிச் சேர்வதற்கு வசதியாக, இதோ ஒரு நகர் அருகிலுள்ளது. அது சிறியதாய் இருக்கிறது. அதற்குள் ஓடிப்போக விடுங்கள். அது சிறிய நகர் தானே? நானும் உயிர் பிழைப்பேன்'' என்றார். அதற்கு தூதர் ஒருவர், ``நல்லது, அப்படியே ஆகட்டும். இக்காரியத்திலும் உனக்குக் கருணை காட்டியுள்ளேன். நீ கேட்டபடி அந்நகரை நான்அழிக்க மாட்டேன். நீ அங்கு விரைந்தோடித் தப்பித்துக் கொள். நீ அங்குச் சென்று சேருமட்டும் என்னால் ஒன்றும் செய்ய இயலாது'' என்றார். இதனால் அந்த நகருக்குச் ``சோவார்'' என்னும் பெயர் வழங்கிற்று. லோத்து சோவாரை அடைந்தபோது கதிரவன் மண்ணுலகின் மேல் உதித்திருந்தான். அப்பொழுது ஆண்டவர் வானத்திலிருந்து சோதோம், கொமோரா நகர்களின்மேல் கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார். அந்நகரங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த சமவெளி முழுவதையும் அழித்தார். நகர்களில் வாழ்ந்த அனைவரையும், நிலத்தில் தளிர்த்தனவற்றையும் அழித்தார். அப்பொழுது லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்தாள். உடனே உப்புத் தூணாக மாறினாள். ஆபிரகாம் காலையில் எழுந்திருந்து, தாம் ஏற்கெனவே ஆண்டவர் திருமுன் நின்ற இடத்திற்குப் போனார். அவர் சோதோமையும் கொமோராவையும் சூழ்ந்திருந்த நிலப்பகுதியையும் நோக்கிப் பார்த்தபோது சூளையின் புகைபோல நிலப்பரப்பிலிருந்து புகை கிளம்பக் கண்டார். கடவுள் சமவெளி நகர்களை அழித்தபோது, ஆபிரகாமை நினைவு கூர்ந்தார். எனவே லோத்து குடியிருந்த நகர்களை அழித்தபோது கடவுள் அவரைக் காப்பாற்றினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரே, உமது பேரன்பு என் கண்முன் இருக்கின்றது
திபா 26: 2-3. 9-10. 11-12

2 ஆண்டவரே, என்னைச் சோதித்து ஆராய்ந்து பாரும்; என் மனத்தையும் உள்ளத்தையும் புடமிட்டுப் பாரும்; 3 ஏனெனில், உமது பேரன்பு என் கண்முன் இருக்கின்றது; உமக்கு உண்மையாக நடந்து வருகிறேன். பல்லவி

9 பாவிகளுக்குச் செய்வதுபோல் என் உயிரைப் பறித்துவிடாதீர்! கொலை வெறியர்களுக்குச் செய்வதுபோல் என் வாழ்வை அழித்து விடாதீர்! 10 அவர்கள் கைகளில் தீச்செயல்கள்; அவர்கள் வலக் கையில் நிறையக் கையூட்டு. பல்லவி

11 நானோ மாசற்றவனாய் நடந்து கொள்கின்றேன்; என்னை மீட்டருளும்; எனக்கு இரங்கியருளும். 12 என் கால்கள் சமமான தளத்தில் நிற்கின்றன; மாபெரும் சபையில் ஆண்டவரைப் புகழ்ந்திடுவேன். பல்லவி


நற்செய்திக்கு முன் வசனம்

`நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?'

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8;23-27

அக்காலத்தில் இயேசு படகில் ஏறவே, அவருடைய சீடர்களும் அவரோடு ஏறினார்கள். திடீரெனக் கடலில் பெருங் கொந்தளிப்பு ஏற்பட்டது. படகுக்குமேல் அலைகள் எழுந்தன. ஆனால் இயேசு தூங்கிக் கொண்டிருந்தார். சீடர்கள் அவரிடம் வந்து, ``ஆண்டவரே, காப்பாற்றும், சாகப் போகிறோம்'' என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். இயேசு அவர்களை நோக்கி, ``நம்பிக்கை குன்றியவர்களே, ஏன் அஞ்சுகிறீர்கள்?'' என்று கேட்டு, எழுந்து காற்றையும் கடலையும் கடிந்து கொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று. மக்கள் எல்லாரும், ``காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?'' என்று வியந்தனர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று'' (மத்தேயு 8:26)

இயேசு கலிலேயாக் கடலின் மறுகரைக்குச் செல்கிறார். ஆனால் கடலில் பெருங்கொந்தளிப்பு ஏற்படுகிறது. இயேசுவும் சீடர்களும் இருந்த படகு தண்ணீரில் கவிழ்ந்து மூழ்கிவிடுகின்ற ஆபத்து எழுகின்றது. நிலநடுக்கம்தான் ஏற்பட்டதோ என நினைத்த சீடர்களை அச்சம் மேற்கொள்கிறது. ஆனால் இயேசுவோ ''தூங்கிக்கொண்டிருந்தார்'' (மத் 8:24). கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு சீடர்களின் வாழ்வில் ஏற்படவிருக்கின்ற கொந்தளிப்புக்கு ஒரு முன் அடையாளம்போல உள்ளது. அவர்களது கனவுக் கோட்டைகள் இடிந்து தகரப்போகின்றன. தலைவரும் போதகருமான இயேசுவே துன்புற்று இறக்கப் போகிறார் என்றால் தங்களுடைய உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என அவர்கள் அஞ்சி நடுங்குவார்கள்; அவர்களுடைய வாழ்வு பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாகும். ஆனால் இயேசு அவர்களுடைய அச்சத்தைப் போக்குகின்றார்: ''ஏன் அஞ்சுகிறீர்கள்?'' என்று கேட்ட இயேசு அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கடிந்துகொள்கிறார் (மத் 8:26).

சீடர்கள் இயேசுவை முழுமையாக நம்பினால் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படுகின்ற கொந்தளிப்புகள் அவர்களுக்குத் தீங்கு இழைக்க முடியாது. ஏனென்றால் இயேசு மனிதருக்கு வாழ்வளிக்க வந்தார். நோயுற்றவர்க்கு அவர் குணமளித்தார்; இறந்தோரை உயிர்பெற்றெழச் செய்தார். கடவுளின் வல்லமை அவருடைய வாழ்வில் துலங்கிற்று. அதே வல்லமையோடு இயேசு ''காற்றையும் கடலையும் கடிந்துகொண்டார். உடனே மிகுந்த அமைதி உண்டாயிற்று'' (மத் 8:26). நம் வாழ்வில் அமைதி வேண்டும் என்றால் நாம் இயேசுவை அணுகிச் செல்ல வேண்டும். அவர் தூங்குகிறாரே என நாம் எண்ண வேண்டியதில்லை. மாறாக, நமக்காக எந்நாளும் விழித்திருக்கின்றவர் அவர். இயேசுவின் வல்லமையால் தாங்கள் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டதை உணர்ந்த சீடர்களின் அச்சம் கதிரவன்முன் பனிபோல் மறைகிறது; அவர்கள் வியப்பில் ஆழ்ந்துபோகிறார்கள். தங்கள் வாழ்க்கையில் ஏற்படுகின்ற தடைகளைக் கண்டு இனிமேல் அவர்கள் அஞ்ச வேண்டியதில்லை. தங்கள் கண்முன் நிற்கின்ற இந்த மனிதர் கடவுளின் வல்லமையோடு செயல்படுவதைக் கண்டு அவர்கள் மக்களோடு சேர்ந்து ஆச்சரியமடைகிறார்கள். ''காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் எத்தகையவரோ?'' என்னும் கேள்விதான் அவர்களது உள்ளத்தில் மேலோங்கி எழுகின்றது (மத் 8:27). நாமும் கடவுளின் வல்லமையைக் கண்டு வியப்படைகின்றோம். நம் வாழ்வில் கடவுள் தம் மகன் இயேசுவின் வழியாகத் தூய ஆவியின் ஆற்றலால் புரிகின்ற அரும் செயல்களைக் கண்டு நாம் அவரிடத்தில் அசையாத நம்பிக்கை கொள்ள அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் உள்ளத்தில் எழுகின்ற கொந்தளிப்பைப் போக்கி உமது அமைதியை அளித்தருளும்.