யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 10வது வாரம் திங்கள்கிழமை
2019-06-10




முதல் வாசகம்

நாங்கள் துன்புறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவும் மீட்புக்காகவும்தான்
2கொரிந்தியர்1;1-7

1 கொரிந்து நகரில் உள்ள கடவுளின் திருச்சபைக்கும் அக்காயா மாநிலம் முழுவதிலும் வாழும் இறைமக்கள் அனைவருக்கும் கடவுளின் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாயிருக்கும் பவுலும் சகோதரராகிய திமொத்தேயுவும் எழுதுவது; 2 நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! 3 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் தந்தை இரக்கம் நிறைந்த கடவுள். அவரே ஆறுதல் அனைத்துக்கும் ஊற்று; அவரைப் போற்றுவோம். 4 கடவுள் எங்களுடைய இன்னல்கள் அனைத்திலும் எங்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். நாங்களே கடவுளிடமிருந்து ஆறுதல் பெற்றுள்ளதால் பல்வேறு இன்னல்களில் உழலும் மற்ற மக்களுக்கும் ஆறுதல் அளிக்க எங்களால் முடிகிறது. 5 கிறிஸ்து நமக்காக மிகுதியாகத் துன்புற்றார்; அது போல அவர் வழியாக நாம் மிகுதியான ஆறுதலும் பெறுகிறோம். 6 ஆகவே நாங்கள் துன்புறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவும் மீட்புக்காகவும்தான்; நாங்கள் ஆறுதல் பெறுகிறோம் என்றால் அது உங்கள் ஆறுதலுக்காகவே. நாங்கள் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதைப் போல நீங்களும் உங்கள் துன்பங்களைத் தளராமனத்துடன் பொறுத்துக் கொள்வதற்கு இந்த ஆறுதல் ஆற்றல் அளிக்கிறது. 7 நீங்கள் எங்கள் துன்பத்தில் பங்கெடுத்ததைப்போல் எங்களுடைய ஆறுதலிலும் பங்குபெறுவீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் இவ்வாறு செய்வீர்கள் என உறுதியாக எதிர்நோக்கி இருக்கிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கு
திருப்பாடல்கள் 34-1-8

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும் பல்லவி.

2 நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.பல்லவி

3 என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம். பல்லவி

4 துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்.பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.பல்லவி

6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். பல்லவி

7 ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.8 ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர்.


நற்செய்திக்கு முன் வசனம்

துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.

நற்செய்தி வாசகம்

மத்தேயு5;1-12

1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். 2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை; 3 ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. 4 துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். 5 கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். 6 நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர். 7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். 8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். 9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். 10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. 11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! 12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு சீடர்களை நோக்கி, 'நான் தந்தையிடமிருந்து உலகிற்கு வந்தேன். இப்போது உலகைவிட்டுத் தந்தையிடம் செல்கிறேன்' என்றார்'' (யோவான் 16:28)

இயேசுவுக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவு தனித்தன்மை வாய்ந்தது. இயேசு தம்மைப் பற்றி நமக்கு அறிவித்ததிலிருந்து நாம் அவருக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவை ஓரளவு புரிந்துகொள்கிறோம். ஆனால் அந்த உறவின் முழுப் பொருளும் நமக்குத் தெரிவதில்லை. எனவேதான் கடவுள் என்றால் ''மறைபொருள்'' என நாம் ஏற்கிறோம். அவர் நம் கண்களுக்குத் தெரிவதில்லை; நம் அகக் கண்களும் கடவுளை மங்கலாகத்தான் அறிய முடிகிறது. ஆக, இயேசு தம்மைக் கடவுளின் மகன் என அறிமுகம் செய்யும்போது அந்த தந்தை-மகன் உறவை அவர் நமக்கு எவ்வாறு விளக்கிக் கூறுகிறாரோ அவ்வாறே நாமும் புரிந்திட வேண்டும். இவ்வுலக அனுபவத்தின்படி, மகன் பிறப்பதற்குத் தந்தையின் ஒத்துழைப்பு வேண்டும். உயிரியல் தத்துவங்களின் அடிப்படையில் அந்த ஒத்துழைப்பை நாம் விளக்க முடியும். ஆனால் இயேசு தந்தையிடமிருந்து புறப்பட்டு வருவதை நாம் அறிவியல் பாணியில் புரிந்திட இயலாது. மாறாக, இயேசு தமக்கும் தந்தைக்கும் இடையே நிலவுகின்ற உறவை விளக்கும்போது அதை நாம் இறையியல் பார்வையில் காண வேண்டும். அதாவது, விவிலியம் நமக்கு உணர்த்துவதையும், அந்த விவிலிய உண்மையைக் கிறிஸ்தவ சமூகம் வரலாற்றில் புரிந்துவந்துள்ளதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு பார்க்கும்போது, இயேசு தாம் கடவுளிடமிருந்து புறப்பட்டு வருவதாகக் கூறியதோடு தாம் கடவுளோடு இணைபிரியாவிதத்தில் ஒன்றித்திருப்பதையும் குறிப்பிடுகிறார். எனவே, இயேசுவைக் காண்போர் கடவுளையே காண்கின்றனர். உலகில் தாம் ஆற்ற வேண்டிய பணியைச் செய்து முடிக்கிறார் இயேசு. தந்தையின் விருப்பப்படி இயேசு தம் உயிரையே மக்களின் மீட்புக்காகப் பலியாக்குகிறார். தம் பணி நிறைவுற்றதும் அவர் தந்தையிடம் மீண்டும் செல்கிறார். இதிலிருந்து இயேசு நம்மைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாக நாம் கருதலாகாது. நம்மோடு தங்கியிருந்து நம்மை வழிநடத்த தூய ஆவியை இயேசு அனுப்புவதாக வாக்களித்தார். மேலும் உயிர்பெற்றெழுந்த ஆண்டவராக இயேசு எக்காலத்திற்கும் நம்மோடு இருப்பதாக உறுதி தந்துள்ளார். எனவே, இயேசு தந்தையோடு இணைந்திருப்பதுபோல நம்மோடும் கூட இருந்து நமக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்கிறார் என உணர்ந்து நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, உம் மகன் காட்டுகின்ற வழியில் நாங்கள் நடந்து சென்றிட எங்களுக்கு அருள்தாரும்.