யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2019-06-09

தூயஆவி பெருவிழா

(இன்றைய வாசகங்கள்: திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2;1-11,திருப்பாடல்கள் 104;1,24,29-31,34,திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்: 8:8-17,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 14:15-16,23-26)




என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. 
எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. 
எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன.


திருப்பலி முன்னுரை

இறை ஆவிக்குரியவர்களே,

தூய ஆவியாரின் வருகை பெருவிழா திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். தூய ஆவிப் பெருவிழாத் திருப்பலியில் பங்கேற்கும் அன்புமக்கள் அனைவருக்கும் என் எளிமையான திருவிழா வாழ்த்துக்கள் உரியதாகுக. நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து விண்ணகம் செல்லும் முன்பு, தனது சீடர்களை பலப்படுத்தும் துணையாளராக தூய ஆவியாரை அனுப்புவதாக வாக்களித்திருந்தார். இயேசு விண்ணேற்றம் அடைந்த பத்தாம் நாளில் தூய ஆவியாரின் வருகை நிகழ்ந்தது. தேற்றரவாளரான தூய ஆவியாரின் ஆற்றலால் உறுதிப்படுத்தப்பட்ட திருத்தூதர்கள் கிறிஸ்துவின் நற்செதியைத் துணிவுடன் பறைசாற்றி திருச்சபையை நிறுவிய நாளை நாம் இன்று கொண்டாடுகிறோம். திருத்தூதர்களைப் போன்று தூய ஆவியாரின் ஆற்றலைப் பெற்றவர்களாய் கிறிஸ்துவுக்கு சான்று பகரும் வரத்துக்காக, இத்திருப்பலியில் நாம் உருக்கமாக மன்றாடுவோம்.



முதல் வாசகம்

நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி?" என வியந்தனர்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2;1-11

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வௌ"வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள். அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லோரும் மலைத்துப்போய், "இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி? " என வியந்தனர். பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும்,பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும்,யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேகியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே! "என்றனர்

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி:ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.
திருப்பாடல்கள் 104;1,24,29-31,34

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும் மாட்சியையும் அணிந்துள்ளவர். பல்லவி

24 ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தணை எத்தணை! நீர் அனைத்தையும் ஞானத்தோடு செய்துள்ளீர்! ப+வுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. பல்லவி

29 நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்; நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். பல்லவி

30 உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். பல்லவி

31 ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக! பல்லவி

34 என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன்.

இரண்டாம் வாசகம்

அருள்கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்: 8:8-17

சகோதரர் சகோதரிகளே, ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார். ஆகையால் சகோதர சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள். கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், “அப்பா, தந்தையே” என அழைக்கிறோம். நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்: 14:15-16,23-26

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: ”நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார்.நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடி கொள்வோம். என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப் பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல; அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. உங்களோடு இருக்கும் போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத்தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.''

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஆவியைப் பொழிபவராம் இறைவா,

தூய ஆவியாரின் வருகையால் தோன்றி வளர்ந்த திருச்சபை, அதே ஆவியாரால் வழிநடத்தப்பட்டு செழித்தோங்குமாறு, திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவருக்கும் ஆவியானவரின் அருள் கொடைகளை வழங்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

புதுவாழ்வு அளிப்பவராம் இறைவா,

இந்த உலகில் பணம், பதவி, சிற்றின்பம் போன்றவற்றில் சுகங்களைத் தேடி, அருள் வாழ்வில் நாட்டமின்றி வாழும் மக்கள் மீது உமது புதுப்பிக்கும் ஆவியைப் பொழிந்து, விண்ணகத்தை வாழ்வை நாடித் தேடும் மனதை அவர்களுக்கு அருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

பிரிந்ததை இணைப்பவராம் இறைவா,

கிறிஸ்துவின் பெயரால் பல்வேறு சபைகளாக வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரும், தூய ஆவியாரின் வல்லமையால் ஒன்றிணைக்கப்பட்டு, உலகமெங்கும் கிறிஸ்துவின் சாட்சிகளாக விளங்கத் துணைபுரிய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உறவை வளர்க்கும் எம் இறைவா!

எங்கள் குடும்பங்களை உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம். நீர் அனுப்பும் துணையாளரைக் கொண்டு எங்கள் குடும்பங்களில் அன்பும், நட்புறவும் தழைத்திடவும், எமக்கு அடுத்திருப்பவரைக் கண்டு கொள்ளவும், அதன் மூலம் உமது இரக்கத்தின் இறையாட்சிப் பறைச்சாற்ற எமக்கு ஆற்றலைத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

எம் வாழ்வின் ஒளியும் வழியுமாய் இருக்கும் எம் இறைவா!

எங்கள் பங்கிலுள்ள இளையோர் அனைவரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களின் வாழ்வு ஒளிமயமானதாய் இருக்கவும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பிலும், ஒழுக்கத்திலும் தலைசிறந்து விளங்கவும், உமது உயிருள்ள சாட்சிகளாய் இவ்வுலகில் வலம் வர இறைமகன் இயேசுவின் வழியாக இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

சாவின் இருள் சூழ்ப் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தால் எம்மைப் பாதுக்காக்கும் இறைவா!

எம்மை வழி நடத்தும் அரசியல் தலைவர்களின் எண்ணங்களைப் புனிதம் பெறச் செய்யும். அவர்களின் இதயத்தில் உம் அன்புத் தீயை மூட்டும். அனைவரையும் அன்புச் செய்யும் உள்ளத்தைக் கொடுத்தருளும். அவர்கள் செய்யும் பணிகளில் சமுக நீதியை நிலைநாட்டவும், மக்கள் பேணிக்காத்திட வேண்டிய நல்ல உள்ளங்களைத் தந்தருளமாறு இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

எம் கால் கல்லில் மோதாதபடித் தூதர்களால் எம்மைத் தாங்கிக் கொள்ளும் எம் இறைவா!

தூய ஆவியின் ஒளியால் எங்கள் பங்கிலுள்ள இளையோரின் இதயங்களுக்கு அறிவூட்டும். அவர்கள் சரியானவற்றை உணரவும், அவர் அளிக்கும் ஆறுதலினால் என்றும் மகிழ்ச்சியாய் இருக்கவும், ஞானக்கதிர்களை அவர்கள் மேல் பொழியுமாறும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்'' (யோவான் 14:26)

இயேசு தம் சீடர்களுக்கு இறுதி அறிவுரை வழங்கும்போது, ''மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு தந்தையிடம் கேட்பேன்'' (யோவா 14:16) என்கிறார். அந்தத் துணையாளர்தாம் தூய ஆவியார். ''துணையாளர்'' என இங்கே குறிப்பிடப்படுகின்ற சொல்லுக்கு இரு பொருள்கள் உண்டு. எபிரேய மரபில் இதற்குத் ''தேற்றுகிறவர்'', ''ஆறுதல் அளிப்பவர்'' என்பது பொருள். இஸ்ரயேல் மக்களுக்குக் கடவுள் ஆறுதல் அளித்தார். அவர்களுடைய துன்பங்களில் அவரே மக்களைத் தேற்றினார். கடவுளின் ஆதரவும் தேற்றுதலும் மக்களுக்கு நிறைவாகக் கிடைத்ததை எசாயா விரிவாக விளக்குகிறார் (காண்க: எசாயா, அதி. 40-55). சிமியோன் இஸ்ரயேலுக்கு அளிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தார் (லூக் 2:25). இயேசு மக்களுக்கு நற்செய்தி அறிவித்து அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுதலை அளித்து, ஆறுதல் வழங்கிட வருகின்றார் (லூக் 4:18-19). இயேசுவின் சீடர்கள் அவர் புரிந்த ஆறுதலளிக்கும் பணியைத் தொடர்ந்தார்கள். ''ஆறுதல் அனைத்திற்கும் ஊற்றாகிய கடவுள்'' தம்முடைய ஆறுதலைத் திருத்தூதர்களின் பணி வழியாக மக்களோடு பகிர்ந்துகொள்கிறார். தூய பவுல் இக்கருத்தை அழகாக விளக்குகிறார் (காண்க: 2 கொரி 1:3-7).

துணையாளர் என்னும் சொல்லுக்கு மற்றொரு பொருள் உரோமைப் பின்னணியிலிருந்து பெறப்படுகிறது. இதற்குப் ''பரிந்துபேசுபவர்'', ''சார்பாக வாதாடுபவர்'', அருகிருந்து ''உதவி செய்பவர்'' என்னும் பொருள் உண்டு. இயேசு இறையாட்சிப் பணியை ஆற்றியபோது தாம் புரிந்த செயல்களுக்குக் கடவுள் சாட்சி என்றார்; திருமுழுக்கு யோவானும் இயேசு பற்றிச் சான்றுபகர்ந்தார்; மறைநூலில் எழுதப்பட்டவையும் இயேசுவுக்குச் சான்றாக அமைந்தன. தம் சீடர்கள் தம் பணியைத் தொடரும்போது அவர்களுக்கு இன்னல்கள் ஏற்படும் என்பதை இயேசு முன்னறிவித்தார். அவர்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்படும்போது அவர்களுக்காகப் பரிந்து பேசத் தூய ஆவி துணையாவார் எனவும் இயேசு அறிவிக்கிறார் (காண்க: மாற் 13:9-13; லூக் 12:11-12). இயேசு தந்தையிடம் நமக்காகப் பரிந்துபேசிப் பெற்றுத் தருகின்ற தூய ஆவி திருச்சபையோடு என்றும் தங்கியிருந்து நமக்கு அனைத்தையும் கற்றுத் தருவார். அவர் நம் உள்ளங்களில் எழுப்புகின்ற நல்ல சிந்தனைகள் நம் வாழ்வுக்குத் துணையாகும். கடவுளின் ஆவியே நமக்குச் சார்பாக இருக்கும்போது நாம் எந்தச் சக்திக்கும் அஞ்சவேண்டியதில்லை என இயேசு நமக்குக் கற்பிக்கிறார்.

மன்றாட்டு:

இறைவா, உம் தூய ஆவி எந்நாளும் எங்களோடு இருந்து எங்களை வழிநடத்துவதை உணர்ந்து நாங்கள் ஆறுதல் அடைந்திட அருள்தாரும்.