யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்கா காலம் 6வது வாரம் திங்கட்கிழமை
2019-05-27




முதல் வாசகம்

"நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால் என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16;11-15

11 பின்புபவுல் சீலா திமோத்தேயு லூக்கா ஆகிய நாங்கள் துரோவாவிலிருந்து கப்பலேறிச் சமொத்திராக்கு தீவுக்கும், மறநாள் நெயாப்பொலி நகருக்கும் நேராகச் சென்றோம்; 12 அங்கிருந்து மாசிதோனியப் பகுதியின் முக்கிய நகரான பிலிப்பி சென்றோம். அது உரோமையரின் குடியேற்ற நகரம். அந்நகரில் சிலநாள்கள் தங்கியிருந்தோம். 13 ஓய்வுநாளன்று நாங்கள் நகர வாயிலுக்கு வெளியே வந்து ஆற்றங்கரைக்குச் சென்றோம். அங்கு இறைவேண்டல் செய்யும் இடம் ஏதேனும் இருக்கும் என்று எண்ணி அமர்ந்து, அங்கே கூடியிருந்த பெண்களோடு பேசினோம். 14 அங்குத் தியத்திரா நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் நாங்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் பெயர் லீதியா. செந்நிற ஆடைகளை விற்பவரான அவர் கடவுளை வழிபட்டுவந்தார். பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளுமாறு ஆண்டவர் அவர் உள்ளத்தைத் திறந்தார். 15 அவரும் அவர் வீட்டாரும் திருமுழுக்குப் பெற்றனர். அதன்பின் அவர் எங்களிடம், "நான் ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவள் என்று நீங்கள் கருதினால் என் வீட்டுக்கு வந்து தங்குங்கள்" என்று கெஞ்சிக் கேட்டு எங்களை இணங்க வைத்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்
திருப்பாடல்கள் 149:1-6,9

1 அல்லேலூயா! ஆண்டவருக்குப் புதியதொரு பாடலைப் பாடுங்கள்; அவருடைய அன்பர் சபையில் அவரது புகழைப் பாடுங்கள். பல்லவி 2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக் குறித்து மகிழ்ச்சி கொள்வதாக! சீயோனின் மக்கள் தம் அரசரை முன்னிட்டுக் களிகூர்வார்களாக! பல்லவி 3 நடனம் செய்து அவரது பெயரைப் போற்றுவார்களாக; மத்தளம் கொட்டி, யாழிசைத்து அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக! பல்லவி 4 ஆண்டவர் தம் மக்கள் மீது விருப்பம் கொள்கின்றார்; தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார். பல்லவி 5 அவருடைய அன்பர் மேன்மையடைந்து களிகூர்வராக! மெத்தைகளில் சாய்ந்து மகிழ்ந்து கொண்டாடுவராக! பல்லவி 6 அவர்களின் வாய் இறைவனை ஏத்திப் புகழட்டும்; அவர்களின் கையில் இருபுறமும் கூர்மையான வாள் இருக்கட்டும். பல்லவி 9 முன்குறித்து வைத்த தீர்ப்பை அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்; இத்தகைய மேன்மை ஆண்டவர் தம் அன்பர் அனைவருக்கும் உரித்தானது. அல்லேலூயா!


நற்செய்திக்கு முன் வசனம்

தந்தையையும் என்னையும் அவர்கள் அறியாமல் இருப்பதால்தான் இவ்வாறு செய்வார்கள்

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம்15:26-27,16;1-4

அக்காலத்தில் யேசு சீடர்களுக்கு கூறியதாவது தந்தையிடமி;ருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப்பற்றிச் சான்று பகர்வார். 27 நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்துவருகிறீர்கள். 1 "நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இவற்றையெல்லாம் உங்களிடம் சொன்னேன். 2 உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப்பார்கள். உங்களைக் கொல்லுவோர் கடவுளுக்குத் திருப்பணி செய்வதாக எண்ணும் காலமும் வருகிறது. 3 தந்தையையும் என்னையும் அவர்கள் அறியாமல் இருப்பதால்தான் இவ்வாறு செய்வார்கள். 4 இவை நிகழும் நேரம் வரும்போது நான் உங்களுக்கு இவை பற்றி முன்பே சொன்னதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இதற்காகவே இவற்றை உங்களிடம் கூறினேன். "தொடக்கத்திலேயே நான் இவற்றை உங்களிடம் சொல்லவில்லை; ஏனெனில் நான் உங்களோடு இருந்தேன்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

நம்பிக்கை இழந்துவிடாதிருக்க

இறை நம்பிக்கை மனிதனை வாழவைத்துக்கொண்டிருக்கிறது. வாழ்வில் தோல்வியைச் சந்திக்கும் மனிதன் வாழ்க்கையை முடித்துக்கொள்வதற்குக் காரணம் இந்த இறை நம்பிக்கையில் இருக்கும் குறைவு அல்லது வெற்றிடம் ஆகும். நம்பிக்கை இறைவனின் மாபெரும் கொடை. கடவுள் நம்பிக்கைகொண்ட மனிதன் மட்டுமே நம்பிக்கையின் முழுமையைக் காணமுடியும். பொன்னோ பொருளோ ஆட்களோ இந்த நம்பிக்கையைத் தர முடியாது. நம்முள் குடி கொண்டிருக்கும் இறைவனின் ஆற்றல் மட்டுமே நிலைத்த முழுமையான இந்த நம்பிக்கையைத் தந்து எதையும் சாதிக்க வல்லது. நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, கடவுளே கூட இருந்தாலும் காரியங்கள் கைகூடாது. இயேசுவே உடன் இருந்;தாலும் காற்றும் கடலும் கொந்தளிக்கும்; கண்ணில் பட்டதெல்லாம் பூதமாகத் தெரியும்(மத்8:26). நம்பிக்கை எந்த நோயையும் குணமாக்கும் (மத் 9:22). நம்பிக்கை விரும்பியதை நிறைவேற்றும்(மத்15:28).மலையையும் அசைக்க முடியும். துன்பங்கள் தொடர்ந்து வருவதாலும், பட்ட காலிலே படுவதாலும், கெட்டுப்போன வாழ்கையை இன்னும் கேடு தொடர்ந்தாலும் கடவுள் நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். உள்ளுயிராய் இருந்து உரமூட்டி, அவநம்பிக்கையை வேரறுத்து புத்தெழுச்சியூட்டி புது வாழ்வு தரும் தூய ஆவியைப் புறம் தள்ளிவிட வேண்டாம். இத்தகு சூழலில் நம்பிக்கையை அதிகமாக்க செபிப்போம். முயற்சிப்போம்.எல்லாம் வெற்றியே. எப்போதும் வெற்றியே. இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

அமைதியின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் விரும்பித் தேடுகிற அமைதியை, நீர் மட்டுமே தரமுடிகின்ற அமைதியை எங்கள் நாட்டுக்கும், குடும்பங்களுக்கும், எங்களுக்கும் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.