யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2019-05-05

(இன்றைய வாசகங்கள்: திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 5:27-32, 40-41,பதிலுரைப்பாடல். திபா. 30: 1,3-05, 10-12. ,திருத்தூதர் யோவான் எமுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம். 5:11-14 ,யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்: 21: 1-19 )




உங்களுக்கு அமைதி உரித்தாகுக! உங்களுக்கு அமைதி உரித்தாகுக!


திருப்பலி முன்னுரை

உண்மைக்குரியவர்களே,

உயிர்த்தெழுந்த நம் ஆண்டவர் இயேசுவின் பெயரால், பாஸ்கா காலத்தின் மூன்றாம் ஞாயிறு திருப்பலிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். இயேசுவின் உயிர்ப்பை முழுமையாக ஏற்று, உண்மையான இறைமகனாகிய அவரைப் பின்தொடர இன்றைய திருவழிபாடு நமக்கு அழைப்பு விடுக்கிறது. கிறிஸ்து இயேசு தம் சீடர்களுக்கு திபேரியக் கடல் அருகே தோன்றியபோது, சீடர்கள் அவரில் சந்தேகம் கொள்ளவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர்தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். அவர்களைப் போன்று, ஆண்டவரின் உயிர்ப்புக்கு உண்மையான சாட்சிகளாக வாழ நாம் அழைக்கப்படுகிறோம். பேதுருவைப் போன்று இயேசுவின் மீதான அன்பை வெளிப்படுத்த மீண்டும் நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இயேசுவின் உயிர்ப்பு அனுபவத்தைப் பெற்று, நாமும் உயிர்ப்பின் மக்களாக வாழ வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.



முதல் வாசகம்

இவற்றுக்கு நாங்களும்; தூய ஆவியும் சாட்சிகள்".
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 5:27-32, 40-41

அந்நாட்களில் தலைமைக் குரு அவர்களை நோக்கி, 'நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக் கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே! ' என்றார். அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, 'மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். இஸ்ரயேல் மக்களுக்கு மனம் மாற்றத்தையும் பாவமன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள் ' என்றனர். பின்பு அவர்கள் திருத்தூதர்களை அழைத்து அவர்களை நையப்புடைத்து, இயேசுவைப்பற்றிப் பேசக் கூடாதென்று கட்டளையிட்டு விடுதலை செய்தனர். இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: ஆண்டவரே, உம்மைப் புகழ்வேன். ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்.
பதிலுரைப்பாடல். திபா. 30: 1,3-05, 10-12.

ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன். ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர். என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர். சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். பல்லவி:

இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள். தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும். அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்@ மாலையில் அழுகை. காலையிலோ ஆர்ப்பரிப்பு. பல்லவி:

ஆண்டவரே. எனக்குச் செவிசாயும். என்மீது இரங்கும். ஆண்டவரே, எனக்குத் துணை யாய் இரும். நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர். என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன். பல்லவி:

இரண்டாம் வாசகம்

'கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் பெறத் தகுதி பெற்றது".
திருத்தூதர் யோவான் எமுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம். 5:11-14

யோவான் நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அரியணையையும் உயிர்களையும் மூப்பர்களையும் சுற்றி நின்ற கோடிக்கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டேன்: 'கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது ' என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள். பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும், 'அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன ' என்று பாடக் கேட்டேன். அதற்கு அந்த நான்கு உயிர்களும், 'ஆமென் ' என்றன. மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்து உயிர்த்தெழுந்தார். அனைத்தையும் படைத்தவர் அவரே: மானிடக் குலத்தின் மீது இரக்கம் கொண்டவரும் அவரே. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்: 21: 1-19

அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர், அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், 'நான் மீன்பிடிக்கப் போகிறேன் ' என்றார். அவர்கள், 'நாங்களும் உம்மோடு வருகிறோம் ' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை. இயேசு அவர்களிடம், 'பிள்ளைகளே! மீன் ஒன்றும் கிடைக்கவில்லையா? ' என்று கேட்டார். அதற்கு அவர்கள், 'இல்லை ' என்றார்கள். அவர், 'படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்: மீன் கிடைக்கும் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், 'அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம் ' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை: ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள். படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. இயேசு அவர்களிடம், 'நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள் ' என்றார். சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. இயேசு அவர்களிடம், 'உணவருந்த வாருங்கள் ' என்றார். சீடர்களுள் எவரும், 'நீர் யார்? ' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்: மீனையும் அவ்வாறே கொடுத்தார். இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார். அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா? ' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், 'ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! ' என்றார். இயேசு அவரிடம், 'என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர் ' என்றார். இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், 'யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? ' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், 'ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! ' என்றார். இயேசு அவரிடம், 'என் ஆடுகளை மேய் ' என்றார். "மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், 'யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று கேட்டார். 'உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், 'ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?" என்றார். இயேசு அவரிடம், "என் ஆடுகளைப் பேணிவளர்." 'நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ' பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம், 'என்னைப் பின் தொடர் ' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

ஐயங்கள் நீக்கி எம்மை அன்பால் ஒன்றிணைக்கும் அமைதியின் இறைவா!

திருத்தந்தை, உடன் உழைக்கும் அனைத்து ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் ஆகிய அனைவரும் உம் உயிர்ப்பின் மகிமையையும், மகிழ்ச்சியையும், அமைதியையும் முழுமையாகப் பெற்று தோமாவைப் போல் துணிவுடன் இறையரசை அறிவிக்க, இணைந்து செயல்படத் தேவையான இறைஅருளைப் பொழிந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நானே உங்கள் கடவுள்! நீங்கள் என் மக்கள் என்று பாசத்துடன் உடன்படிக்கைச் செய்து கொண்ட எம் இறைவா!

உமது துன்புரும் திருஅவையைக் கண்நோக்கும். இலங்கையில் நடைப்பெற்ற வெடிகுண்டு தாக்குதலால் நிலைந்து நிற்கும் உம் மக்கள், தங்கள் குடும்ப உறவுகளை இழந்தத் தவிக்கும் இவ்வேளையில் அவர்களுக்கு ஆறுதலையும் தேற்றுதலையும், அமைதியையும் கொடுக்கவும், மருத்துவமனையில் இருக்கும் மக்கள் சரியான மருத்துவம் பெற்று நலமுடன் வாழவும் அருள் புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இறைவா,

உடல் நலம் இன்றித் தவிப்பவர்கள், மனநலம் குன்றித் துன்புறுவோர் இவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் ஆற்றலாலும், மகிமையாலும் அனைத்து உதவிகளும் நல்மனம் கொண்டவர்கள் வழியாகக் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அருட்செல்வங்களால் எங்களை ஆசீர்வதிக்கும் அன்புத்தந்தையே! எம் இறைவா!

எங்களைப் பராமரித்துப் பாதுகாத்த எம் பெரியவர்கள் இன்று ஆதரவின்றி, அனாதைகளாக்கப்பட்டு, தெரு ஒரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் முதியோர் இல்லங்களிலும் தனித்து விடப்பட்டு , அவர்கள் படும் வேதனைகள் தொடர் நிகழ்வாகவே நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. எனவே அவர்கள் உம் இறை இரக்கத்தினால்,பாதுகாப்புடன் வாழ, இத்தலைமுறையினர் பெரியவர்கள் மேன்மையை உணர்ந்து அவர்களைப் பாதுகாக்கத் தேவையான அருளைப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

அன்புத் தந்தையே இறைவா!

உலகப் பற்றினால் உண்மைக் கடவுளாகிய உம்மை மறந்து வாழும் இளைஞர்கள் நீரே ஆண்டவர், நீரே கடவுள் என்பதை உணர்ந்து உம்மில் புதிய வாழ்வைக் காண மனமாற்றம் பெற வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஐயங்கள் நீக்கி எம்மை அன்பால் ஒன்றிணைக்கும் அமைதியின் இறைவா!

பாஸ்கா காலத்தில் எங்கள் குடும்பங்களுக்கு உமது உயிர்ப்பின் பலனான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பகிர்ந்து வாழும் நல்மனம் ஆகியவற்றை நிறைவாய் பொழிந்து, எங்கள் குடும்பங்களில் உமது துணையாளரின் அருளால் உறவுகள் மேன்பட்டு, வரவிருக்கும் நாட்களில் எங்கள் குடும்ப ஒற்றுமையால் உயர்ந்திடவும் சாட்சிய வாழ்வு வாழவும் உமது இரக்கத்தை அருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஒருவர் ஒருவரின் சுமைகளைத் தாங்கிக் கொள்ள சமூக உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது சமூகத்திற்காக உம்மிடம் இரந்து வருகின்றோம். இன்றைய நாட்களில் சமூக உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து நாம் அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே மனமும் உடையவர்களாச் செயற்பட்டு இறையரசின் கருவிகளாகவும், சமாதானத்தின் தூதுவர்களாகவும், உமது சாட்சிகளாகவும் செயற்பட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

''இயேசு அவர்களிடம், 'பிள்ளைகளே! மீன் ஒன்றும் படவில்லையா?' என்று கேட்டார். அதற்கு அவர்கள், 'இல்லை' என்றார்கள். அவர், 'படகின் வலப்பக்கத்தில் வீசுங்கள்; மீன் கிடைக்கும்' என்று அவர்களிடம் கூறினார்'' (யோவான் 21:5-6)

தங்கள் குருவும் ஆசிரியருமாக இருந்த இயேசுவை யூத சமயத்தலைவர்களும் உரோமை அதிகாரிகளும் சேர்ந்து சிலுவையில் அறைந்து கொன்றுபோட்டதை அறிந்த இயேசுவின் சீடர்களை மிகுந்த அச்சம் மேற்கொண்டது. அவர்கள் எதிர்பார்த்த வல்லமை மிக்க மெசியாவாக இயேசு தம்மைக் காட்டிக்கொள்ளவில்லை என்பது அவர்களுக்கு ஒரு பெரிய வருத்தமாக இருந்திருக்கவேண்டும். அவர்கள் நம்பிக்கை இழந்தவர்களாக, எருசலேம் நகரை விட்டுத் தங்கள் சொந்த இடமாகிய கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றார்கள். தங்கள் முன்னாளைய தொழிலாகிய மீன்பிடித்தலைத் தொடர்ந்தார்கள். இவ்வாறு தங்கள் தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது இயேசு அவர்களுக்குத் தோன்றுகிறார். இங்கேயும் சீடர்கள் இயேசுவை உடனடியாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஏதோ ஒருவர் தங்களுக்கு மீன்பாடு எவ்வாறு இருந்தது எனக் கேட்டதாக அவர்கள் நினைத்தார்கள். இரவும் பகலும் வேலை செய்தும் அவர்களுக்கு ஒரு மீனும் அகப்படாத நிலையில், கரையில் நின்றுகொண்டிருந்த அன்னிய மனிதர் அவர்களுக்கு ஒரு உத்தி சொல்லிக்கொடுக்கிறார்: ''படகின் வலப்பக்கத்தில் வலைவீசுங்கள்; மீன் கிடைக்கும்'' என அவர் கூறியதை அவர்கள் கருத்தில் ஏற்று அவ்வாறே செய்கிறார்கள். யாரும் எதிர்பாராத விதத்தில் அவர்களுக்கு அதிசயமான விதத்தில் பெரும் மீன்பாடு கிடைக்கிறது. யோவான் நற்செய்தியில் ''அடையாளங்கள்'' பற்றிய குறிப்பு அடிக்கடி வருகிறது. அதுபோல இதையும் ஓர் அடையாளமாகக் காண்கிறார் ''இயேசுவின் அன்புச் சீடர்'' (காண்க: 2:11; 6:14; 9:16; 11:47; 21:7). அதாவது, இயேசு யார் என்பதை வெளிப்படுத்துகின்ற ஒரு தனிப்பட்ட பொருள்நிறைந்த அடையாளம் இங்கே குறிக்கப்படுகிறது.

இயேசுவை நாம் காண வேண்டும் என்றால் நமக்கு நம்பிக்கை தேவை. சாதாரண மனிதராக இயேசுவை நாம் பார்த்தால் அவருடைய போதனைகளும் சாதனைகளும் நம்மைக் கவர்ந்தாலும்கூட அவர் கடவுளின் மகனாக நம்மிடையே வந்து நமக்காகத் துன்புற்று இறந்து நமக்கு இறைவாழ்வில் பங்களித்துள்ளார் என்னும் உண்மையைக் கண்டுகொள்ள நாம் தவறிவிடுவோம். நாளெல்லாம் உழைத்து, இன்னல்களுக்கு நடுவிலேயும் வெற்றி காண இயலாமல் நாம் தவிக்கின்ற தருணங்கள் உண்டு. எவ்வளவுதான் முயன்றாலும் நம்மால் சாதிக்க இயலாத காரியங்களும் உண்டு. அவ்வேளைகளில் நாம் இயேசுவின் குரலுக்குச் செவிமடுக்க வேண்டும். கரையில் நின்றுகொண்டு அவர் நம்மை நோக்கி, 'படகின் வலப்பக்கத்தில் வலையை வீசுங்கள்'' என நமக்குக் கூறுகின்ற வேளைகளில் நாம் அவருடைய குரலைக் கேட்டு அதன்படி செயல்பட்டால் வெற்றி நமதாகும். ஏனென்றால் நன்மை செய்ய நாம் விழையும்போது கடவுளின் அருள்துணையோடு நாம் எதையும் சாதிக்கலாம்.

மன்றாட்டு:

இறைவா, உம் திருமகனின் குரலுக்கு எப்போதும் செவிமடுக்க எங்களுக்கு அருள்தாரும்.