முதலாவது திருவழிபாடு ஆண்டு பாஸ்க்கா காலம் 2வது வாரம் வியாழக்கிழமை 2019-05-02
முதல் வாசகம்
நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார்.
திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசகம் 5:27-33
27 அழைத்து வந்தவர்களை அவர்கள் யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி,
28 "நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக் கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!" என்றார்.
29 அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, "மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?
30 நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார்.
31 இஸ்ரயேல் மக்களுக்கு மனம் மாற்றத்தையும் பாவமன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார்.
32 இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்" என்றனர்.
33 இவற்றைக் கேட்ட தலைமைச் சங்கத்தார் கொதித்தெழுந்து, திருத்தூதர்களைக் கொல்லத் திட்டமிட்டனர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்
திருப்பாடல்கள் 34:2,9:17-20
2 நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.
9 ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு எக்குறையும் இராது.
17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.
18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.
19 நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.
20 அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது.
நற்செய்திக்கு முன் வசனம்
தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்.
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3:31-36
31 மேலிருந்து வருபவர், அனைவரையும்விட மேலானவர். மண்ணுலகிலிருந்து உண்டானவர் மண்ணுலகைச் சேர்ந்தவர். மண்ணுலகு சார்ந்தவை பற்றியே அவர் பேசுகிறார். விண்ணுலகிலிருந்து வருபவர், அனைவருக்கும் மேலானவர்.
32 தாம் கண்டதையும் கேட்டதையும்பற்றியே அவர் சான்று பகர்கிறார். எனினும் அவர் தரும் சான்றை எவரும் ஏற்றுக்கொள்வதில்லை.
33 அவர் தரும் சான்றை ஏற்றுக் கொள்பவர் கடவுள் உண்மையானவர் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
34 கடவுளால் அனுப்பப் பெற்றவர் கடவுளின் வார்த்தைகளைப் பேசுகிறார். கடவுள் அவருக்குத் தம் ஆவிக்குரிய கொடைகளை அளவின்றிக் கொடுக்கிறார்.
35 தந்தை மகன் மேல் அன்பு கூர்ந்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்.
36 மகனிடம் நம்பிக்கை கொள்வோர் நிலைவாழ்வைப் பெறுவர். நம்பிக்கை கொள்ளாதோர் வாழ்வைக் காணமாட்டார். மாறாகக் கடவுளின் சினம் அவர்கள்மேல் வந்து சேரும்
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
|
இன்றைய சிந்தனை
'நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்'
இந்த நிக்கதேம் ஒரு நல்ல மனிதர். நல்லவராக வாழ வேண்டும் என்ற ஆசையுள்ள மனிதர். ஆகவே இயேசுவைத் தேடி வந்தார். இயேசு அவரைப் பார்த்து, "மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது"(யோவா3:3) மறுபடியும் பிறந்தால்தான் நன்றாக நல்லவனாக வாழமுடியும் என்றார். மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா? என்று நிக்கதேம் கேட்ட உடலின் பிறப்பு அல்ல. மாறாக ஆன்ம வாழ்வுக்குள் பிறக்கும் புதுப்பிறப்பு. இயல்பான முறைப்படி பிறந்தவன், தூய ஆவியின் ஆற்றலால் பிறந்தவன் என்று பிறப்பை இரு வகைப்படுத்துகிறார் பவுலடியார்(வாசிக்க கலாத் 4:29) தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்" என்றார்.( யோவா 3:8) "கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை" (1 யோவான் 5 :18) "அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்" (1 யோவா4:7) புனித யோவானின் "தீமையைப் பின்பற்ற வேண்டாம்; நன்மையையே பின்பற்றும். நன்மை செய்வோர் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்" என்னும் இவ் அறிவுரைப்படி வாழும் வாழ்க்கை ஒரு மறு பிறப்புக்குச் சமம்.
இந்த பிறப்பு ஒருநாள், ஒரு முறை ஒருவருடைய வாழ்க்கையில் நடைபெறுவதல்ல. ஞானஸ்நானத்தில் நீராலும் தூய ஆவியாலும் திருமுழுக்குப் பெற்றோம். மறு பிறப்படைந்தோம். உண்மைதான். ஆனால் அதோடு முடிந்து விடும் ஒருநாள் கூத்து அல்ல. தினமும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நற்செயல்கள் செய்து புதிது புதிதாக மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டே இருக்க வேண்டும். நிக்கதேமிடம் எதிர்பார்த்தது இப்பிறப்பை. நம்மிடமும் அதையே எதிர்பார்க்கிறார். மீண்டும் மீண்டும் பிறப்போம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.
மன்றாட்டு:
உயிர்ப்பின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்கள் நம்பிக்கை இன்மையை மன்னித்து, எங்களை ஏற்றுக்கொள்வதற்காக நன்றி. நாங்கள் உமது உயிர்ப்பில், உமது உடனிருப்பில், உமது பிரசன்னத்தில் நம்பிக்கை கொள்ளவும், அதனால், நிலைவாழ்வு அடையவும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
|