யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பாஸ்க்கா காலம் 2வது வாரம் செவ்வாய்க்கிழமை
2019-04-30




முதல் வாசகம்

நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.
திருத்தூதர்பணி நூலிலிருந்து வாசகம் 4:32-37

32 நம்பிக்கை கொண்ட மக்கள் அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். அவர்களுள் எவரும் தமது உடைமைகளைத் தம்முடையதாகக் கருதவில்லை; எல்லாம் அவர்களுக்குப் பொதுவாய் இருந்தது. 33 திருத்தூதர் அனைவரும் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தார் என மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் மக்களின் நல்லெண்ணத்தை மிகுதியாகப் பெற்றிருந்தனர். 34 தேவையில் உழல்வோர் எவரும் அவர்களுள் காணப்படவில்லை. நிலபுலன்களை அல்லது வீடுகளை உடையோர் அவற்றை விற்று அந்தத் தொகையைக் கொண்டு வந்து 35 திருத்தூதருடைய காலடியில் வைப்பர்; அது அவரவர் தேவைக்குத் தக்கவாறு பகிர்ந்து கொடுக்கப்படும். 36 சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு எனும் லேவியர் ஒருவர் இருந்தார். இவருக்குத் திருத்தூதர்கள் "ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்" என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயரைக் கொடுத்திருந்தார்கள். 37 அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டுவந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்
திருப்பாடல்கள் 93:1-2,5

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்; ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார்; ப+வுலகை அவர் நிலையப்படுத்தினார்; அது அசைவுறாது. 2 உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றள்ளது; நீர் தொhன்றுதொட்டே நிலைத்துள்ளீர்.

5 உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை; ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும்.


நற்செய்திக்கு முன் வசனம்

பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும்.

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3:7-15

7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உமக்குக் கூறியது பற்றி நீர் வியப்படைய வேண்டாம். 8 காற்று விரும்பிய திசையில் வீசுகிறது. அதன் ஓசை உமக்குக் கேட்கிறது. ஆனால் அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்கு செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது. தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்" என்றார். 9 நிக்கதேம் அவரைப் பார்த்தது, "இது எப்படி நிகழ முடியும்?" என்று கேட்டார். 10 அதற்கு இயேசு கூறியது; "நீர் இஸ்ரயேல் மக்களிடையே போதகராய் இருந்தும் உமக்கு இது தெரிவில்லையே! 11 எங்களுக்குத் தெரிந்ததைப் பற்றியே பேசுகிறோம்; நாங்கள் கண்டதைப் பற்றியே சான்று பகர்கிறோம். எனினும் எங்கள் சான்றை நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை என உறுதியாக உமக்குச் சொல்கிறேன். 12 மண்ணுலகு சார்ந்தவை பற்றி நான் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் நம்பவில்லை என்றால் விண்ணுலகு சார்ந்தவை பற்றிச் சொல்லும் போது எப்படி நம்பப்போகிறீர்கள்? 13 "விண்ணகத்திலிருந்து இறங்கி வந்துள்ள மானிட மகனைத் தவிர வேறு எவரும் விண்ணகத்திற்கு ஏறிச் சென்றதில்லை. 14 பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். 15 அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

'நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும்'

இந்த நிக்கதேம் ஒரு நல்ல மனிதர். நல்லவராக வாழ வேண்டும் என்ற ஆசையுள்ள மனிதர். ஆகவே இயேசுவைத் தேடி வந்தார். இயேசு அவரைப் பார்த்து, "மறுபடியும் பிறந்தாலன்றி எவரும் இறையாட்சியைக் காண இயலாது"(யோவா3:3) மறுபடியும் பிறந்தால்தான் நன்றாக நல்லவனாக வாழமுடியும் என்றார். மீண்டும் தாயின் வயிற்றில் புகுந்து பிறக்க முடியுமா? என்று நிக்கதேம் கேட்ட உடலின் பிறப்பு அல்ல. மாறாக ஆன்ம வாழ்வுக்குள் பிறக்கும் புதுப்பிறப்பு. இயல்பான முறைப்படி பிறந்தவன், தூய ஆவியின் ஆற்றலால் பிறந்தவன் என்று பிறப்பை இரு வகைப்படுத்துகிறார் பவுலடியார்(வாசிக்க கலாத் 4:29) தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்" என்றார்.( யோவா 3:8) "கடவுளிடமிருந்து பிறந்தோர் பாவம் செய்வதில்லை" (1 யோவான் 5 :18) "அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்" (1 யோவா4:7) புனித யோவானின் "தீமையைப் பின்பற்ற வேண்டாம்; நன்மையையே பின்பற்றும். நன்மை செய்வோர் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள்" என்னும் இவ் அறிவுரைப்படி வாழும் வாழ்க்கை ஒரு மறு பிறப்புக்குச் சமம்.

இந்த பிறப்பு ஒருநாள், ஒரு முறை ஒருவருடைய வாழ்க்கையில் நடைபெறுவதல்ல. ஞானஸ்நானத்தில் நீராலும் தூய ஆவியாலும் திருமுழுக்குப் பெற்றோம். மறு பிறப்படைந்தோம். உண்மைதான். ஆனால் அதோடு முடிந்து விடும் ஒருநாள் கூத்து அல்ல. தினமும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நற்செயல்கள் செய்து புதிது புதிதாக மீண்டும் மீண்டும் பிறந்துகொண்டே இருக்க வேண்டும். நிக்கதேமிடம் எதிர்பார்த்தது இப்பிறப்பை. நம்மிடமும் அதையே எதிர்பார்க்கிறார். மீண்டும் மீண்டும் பிறப்போம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

மன்றாட்டு:

உயிர்ப்பின் நாயகனே இயேசுவே, உமக்கு நன்றி. எங்கள் நம்பிக்கை இன்மையை மன்னித்து, எங்களை ஏற்றுக்கொள்வதற்காக நன்றி. நாங்கள் உமது உயிர்ப்பில், உமது உடனிருப்பில், உமது பிரசன்னத்தில் நம்பிக்கை கொள்ளவும், அதனால், நிலைவாழ்வு அடையவும் அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.