யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





திருவழிபாடு ஆண்டு - C
2019-04-21

(இன்றைய வாசகங்கள்: திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 10:34,37-43,பதிலுரைப்பாடல் திபா: 118: 1-2,16 – 17, 22-23,திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:1-4,யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-9)




ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?! ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?!


திருப்பலி முன்னுரை

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர். என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர, சகோதரிகளே! தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்து, நம்மை வாழ வைக்கும் நம் இறைத் தந்தையின் திருநாமத்தில் நல்வாழ்த்துக்கள். இன்று நாம் கிறிஸ்து உயிர்த்த பெருவிழாவைக் மகிழ்வோடு கொண்டாடுகின்றோம். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி நிறை உயிர்ப்புப் பெருவிழா நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன். உலக கண்களுக்கு இயேசு இறந்தார் என்ற செய்தியை விட இயேசு மீண்டும் உயிர்த்தார் என்ற செய்திதான் ஆறுதலையும், நிறை மகிழ்ச்சியையும் அளிக்கின்றது. தமது திருப்பாடுகளாலும், சிலுவை மரணத்தாலும் பாவத்தை அழித்து மரணத்தை முறியடித்தவர் இயேசுக் கிறிஸ்து. இறைவனின் மகிமையை எதிர்த்து நிற்கவோ, தடுத்துப் பார்க்கவோ எந்தச் சக்தியாலும் முடியாது என்பதைத்தான் இயேசுவின் உயிர்ப்பு நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. அருள் வாழ்வு கிடைத்தது அதனால் புது வாழ்வு நாம் பெற்றோம், அதுவே உண்மையான மகிழ்ச்சி. இந்த நிறை மகிழ்வில் பங்ககொள்ளும் நாமும், இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணியவர்களாய்; வாழவும், இயேசுவின் உயிர்ப்பு, பல வழிகளிலும் துன்புறும் அனைத்து மக்களுக்கும், மகிழ்வையும், நம்பிக்கையையும் கொடுக்கவும் உலகில் அமைதி நிலவவும் இத் திருப்பலியில் அருள் வேண்டிச் செபிப்போம்.



முதல் வாசகம்

இறந்த இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம். 10:34,37-43

அப்போது பேதரு பேசத் தொடங்கி, "கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றியபின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள்.ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்கு மல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்து கொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக்குறித்துச் சான்று பகர்கின்றனர் " என்றார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

பல்லவி: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா,
பதிலுரைப்பாடல் திபா: 118: 1-2,16 – 17, 22-23

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்: என்றென்றும் உள் ளது அவரது பேரன்பு. 'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! பல்லவி:

ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது: ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. நான் இறந்தொழியேன்: உயிர் வாழ்வேன்: ஆண்டவரின் செயல் களை விரித்துரைப்பேன்: பல்லவி:

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! பல்லவி:

இரண்டாம் வாசகம்

மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்கு கிறிஸ்து அமர்ந்திருக்கிறார்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3:1-4

நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.இவ்வுலகு சாhந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது.கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார். ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக. (1கொரி 5:7-8) அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 1-9

வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்: கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து,"ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்: அவரை எங்கே வைத்தனரோ,எங்களுக்குத் தெரியவில்லை!" என்றார்.இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர்.இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்: ஆனால் உள்ளே நுழையவில்லை.அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்: நம்பினார்.இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




விசுவாசிகள் மன்றாட்டுகள்:


விண்ணுலகில் வீற்றிருப்பவரே! உம்மை நோக்கியே என் கண்களை உயர்த்தியுள்ளேன்.


பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

வாழ்வின் ஊற்றாகிய இறைவா!

உம் திருமகன் இயேசுவின் உயிர்ப்பு விழாவை பெரு மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இவ்வேளையில் எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரும் ஆன்மீகத்தில் சிறந்து விளங்கவும் திருச்சபையின் விசுவாச வாழ்வில் புத்துயிர் அளிக்கும் சாட்சியங்களாக வாழ்ந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மாற்றத்தை தருபவராம் இறைவா,

எங்கள் சமுதாய வாழ்வில் காணும் அநீதிகளை நாங்கள் எதிர்த்துப் போராடவும், எங்கும் நீதியும், சகோதர அன்பும் தழைத்தோங்க உழைக்கவும் மன உறுதியும், அருள் துணையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இறைவா,

உடல் நலம் இன்றித் தவிப்பவர்கள், மனநலம் குன்றித் துன்புறுவோர் இவர்களுக்கு உயிர்த்த இயேசுவின் ஆற்றலாலும், மகிமையாலும் அனைத்து உதவிகளும் நல்மனம் கொண்டவர்கள் வழியாகக் கிடைத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

மன்னிப்பு அருள்பவராம் இறைவா,

சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமை தவறியதாலும் செய்த பாவங்களால் உமது அன்புறவை இழந்து தவிக்கும் மக்களுக்கு, உமது இரக்கத்தால் மன்னிப்பு வழங்கி புதுவாழ்வு அளிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

உலகின் மீட்பரே!

உம்முடைய உயிர்ப்பு விழாவைக் கொண்டாடும் என் பங்கு மக்கள் அனைவருக்காகவும் வேண்டுகிறோம். இறைமக்கள் அனைவரும் உம்முடைய உயிர்ப்பின் ஒளியைப் பெற்று, திருச்சபையின் உண்மையான உறுப்பினர்களாக வாழத் தேவையான அருளைத்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஒளியின் பிறப்பிடமே இறைவா!

இஸ்ரயேல் மக்கள் வேதனைகளையும், இன்னல்களையும் கடந்து பாஸ்காவிழாவைக் கொண்டாடியதுபோல, உமது உடலாகிய எம் திருச்சபையும் அனைத்து எதிர்ப்புகளையும், முரண்பாடுகளையும் கடந்து இந்த உயிர்ப்பின் விழாவினைக் கொண்டாடிடவும், பாஸ்கா விழாவின் கனிகளை நிரம்பப் பெற்று வாழ்ந்திடவும், வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

ஒருவர் ஒருவரின் சுமைகளைத் தாங்கிக் கொள்ள சமூக உறவை உருவாக்கிய அன்புத் தந்தையே இறைவா!

எமது சமூகத்திற்காக உம்மிடம் இரந்து வருகின்றோம். இன்றைய நாட்களில் சமூக உறவுக்கும் ஒற்றுமைக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாக இருக்கும் அனைத்துத் தீமைகளையும் உமது இரக்கத்தால் தகர்த்தெறிந்து நாம் அனைவரும் ஒரே உள்ளமும், ஒரே மனமும் உடையவர்களாச் செயற்பட்டு இறையரசின் கருவிகளாகவும், சமாதானத்தின் தூதுவர்களாகவும், உமது சாட்சிகளாகவும் செயற்பட வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.


இன்றைய சிந்தனை

அன்புக்கு என்றும் முடிவிராது!

இன்று புனித மகதலா மரியாவின் விழாவைக் கொண்டாடுகிறோம். அன்புக்கோர் இலக்கணமாய், எடுத்துக்காட்டாய்த் திகழ்கிறார் மகதலா மரியா. அவருக்காக இன்று இறைவனைப் போற்றுவோம். வரலாற்று இயேசுவைப் பலரும் அன்பு செய்தனர். அந்த அன்பைப் பல வழிகளில் வெளிப்படுத்தினர். புதிய ஏற்பாட்டில் இயேசுவை வெகுவாக அன்பு செய்த பலரையும் காண்கிறோம். இருப்பினும், அவர்கள் அனைவரிலும் தனித்துவம் மிக்கவராய் மிளிர்கிறார் மகதலா மரியா. அவருடைய அன்பை இன்று தியானிப்போம். மரியாவின் அன்பை நற்செய்தியாளர் யோவான் வெளிப்படுத்தும் பாணி உணர்வுமிக்கதாய் அமைந்துள்ளது. வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில், அதுவும் இருள் நீங்கும் முன்பே மரியா கல்லறைக்குச் சென்றார் என்னும் வரிகள் அவரது அன்பின் ஆழத்தை அருமையாக எடுத்துரைக்கின்றன. முந்தின நாள் ஓய்வுநாள் ஆனதால், இயேசுவின் உடலுக்கு நறுமணப் பொருள்கள் வைக்கும் பணியைச் செய்யமுடியவில்லை. எனவே, எப்போது ஓய்வுநாள் முடியும், எப்போது கல்லறைக்குச் செல்லலாம் என இரவு முழுவதும் ஆவலோடு காத்திருந்தார் போலும் மகதலா மரியா. ஆதலால்தான், அதிகாலையில், இருள் நீங்கும் முன்பே கல்லறைக்கு விரைந்து சென்றார்.

அவரது அன்பு உண்மையானது. அவரது அன்பு செயலில் வெளிப்பட்டது. அவரது அன்பு துணிவு மிக்கது. சிலுவை அடியிலும் அவர் அஞ்சவில்லை. கல்லறைக்குச் செல்லும்;போதும் பயப்படவில்லை. அவரது அன்பு சாவையும் வென்றது. வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கு உரியவர்கள் என்னும் இறைவாக்கைப் போன்று, வாழ்ந்த காலத்திலும் இயேசுவை அன்பு செய்தார். இறப்புக்குப் பின்னும் அந்த அன்பு தொடர்ந்தது. ஆம், அன்புக்கு என்றும் முடிவிராது. சாவு அன்பைப் பிரிக்க முடியாது என்று எண்பிக்கிறார் மகதலா மரியா.

மன்றாட்டு:

சாவை வென்றவரே இயேசுவே, இன்றைய நாளில் அன்பு சாவையும் வெல்லும் என்று எண்பித்த புனித மகதலா மரியாவுக்காக உம்மைப் போற்றுகிறேன். அவரைப் போலவே நானும் என் அன்பைத் துணிவுடன், உண்மையுடன், செயலாற்றலோடு வெளிப்படுத்த அருள் தாரும். யாரையெல்லாம் நான் அன்பு செய்கிறேனோ, அவர்களுக்கு என் அன்பை செயல் வடிவில் வெளிப்படுத்த எனக்கு அருள் தாரும்.