யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





இரண்டாவது திருவழிபாடு ஆண்டு
தவக்காலம் 2வது வாரம் திங்கட்கிழமை
2019-03-25

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா




முதல் வாசகம்

இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14; 8: 10b

அந்நாள்களில் ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது: ``உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்'' என்றார்.
அதற்கு ஆகாசு, ``நான் கேட்க மாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்'' என்றார். அதற்கு எசாயா: ``தாவீதின் குடும்பத்தாரே! நான் சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?
ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவர் `இம்மானுவேல்' என்று பெயரிடுவார். ஏனெனில் கடவுள் எங்களோடு இருக்கிறார்'' என்று கூறினார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

இறைவா, இதோ உம் திருவுளம் நிறைவேற்ற நான் வருகின்றேன்.
திபா 40: 6-7. 7b-8. 9. 10

6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர். 7ய எனவே, `இதோ வருகின்றேன்.' பல்லவி 7b என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது; 8 என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது என்றேன் நான். பல்லவி

9 என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக்கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர். பல்லவி

10 உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப் பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை. பல்லவி

இரண்டாம் வாசகம்

என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 10: 4-10

சகோதரர் சகோதரிகளே, காளைகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தம் பாவங்களைப் போக்க முடியாது. அதனால்தான் கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, ``பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஆனால் ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல.
எனவே நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற, `இதோ வருகின்றேன்.' என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது'' என்கிறார். திருச்சட்டப்படி செலுத்தப்பட்ட போதிலும், ``நீர் பலிகளையும் காணிக்கைகளையும் எரிபலிகளையும் பாவம்போக்கும் பலிகளையும் விரும்பவில்லை; இவை உமக்கு உகந்தவையல்ல'' என்று அவர் முதலில் கூறுகிறார்.
பின்னர் ``உமது திருவுளத்தை நிறைவேற்ற, இதோ வருகின்றேன்'' என்கிறார். பின்னையதை நிலைக்கச் செய்ய முன்னையதை நீக்கி விடுகிறார். இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒரு முறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதன் மூலம் நாம் தூயவராக்கப்பட்டிருக்கிறோம்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு

- இறைவா உமக்கு நன்றி




நற்செய்திக்கு முன் வசனம்

வாக்கு மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம்.

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, ``அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.
வானதூதர் அவரைப் பார்த்து, ``மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்.
அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், ``இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!'' என்றார்.
வானதூதர் அவரிடம், ``தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என்றார். பின்னர் மரியா, ``நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும்...அழிவீர்கள்'' (லூக்கா 13:3)

இயேசு கடவுளாட்சி பற்றி அறிவித்த போது மக்கள் மனம் மாறி நற்செய்தியை நம்பவேண்டும் என்று கேட்டார். உள்ளத்தில் மாற்றம் ஏற்படும்போது மனித சிந்தனையில் மாற்றம் தோன்றும்; சிந்தனை மாறும்போது நம் ஆழ்ந்த நம்பிக்கைகள் புதிய நிலை அடையும்; நம்பிக்கைகள் உருமாற்றம் பெறும்போது நம் செயல்கள் அவற்றிற்கு ஏற்ப அமையும். எனவே, மனம் மாறுங்கள் என்று இயேசு விடுத்த அழைப்பு மனித வாழ்க்கையில் பேரளவிலான ஒரு மாற்றம் நிகழ வேண்டும் என்று இயேசு விரும்பியதைக் குறிக்கின்றது. மாற்றம் என்பது எப்போதுமே நலமாக அமையும் என்பதற்கில்லை. சிலர் நல்லவர்களாக இருந்து தீயவர்களாக மாறக் கூடும். ஆனால் இயேசு எதிர்பார்த்த மாற்றம் அதுவன்று. இயேசு யார் என்பதை மக்கள் முழுமையாக உணராமல், இயேசுவின் வாழ்வில் கடவுள் ஒரு மாபெரும் புதுமையை நிகழ்த்துகிறார் என்பதை அறியாமல் இருந்த வேளையில்தான் இயேசு அவர்கள் தங்களுடைய மன நிலையை மாற்றிக்கொண்டு, கடவுள் தாமே இயேசுவின் வழியாக மக்களுக்கு மீட்புப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கிறார் என்பதை உள்ளத்தின் ஆழத்தில் ஏற்று, அதற்கு ஏற்ற பதில்மொழி வழங்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பை முன்வைக்கிறார்.

மனிதர் தம் வாழ்க்கை முறையை மாற்றி நல்வழியில் செல்ல வேண்டும் என்று கடவுள் அழைப்பு விடுக்கும்போது அந்த அழைப்பினை யாவரும் உடனடியாக ஏற்றுக்கொள்வர் என்பதற்கில்லை. சிலர் தங்கள் பழைய வாழ்க்கையிலேயே ஊறிப்போயிருப்பர்; வேறு சிலர் மாற்றம் உடனடியாக வேண்டாம் என்று கால தாமதம் செய்வர்; மற்றும் சிலர் மனமுவந்து தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கொணர்வர். எவ்வாறாயினும், கடவுள் பொறுமையோடு செயல்படுகிறவர். அத்திமரம் காய்த்து கனிதரும் என்று எதிர்பார்த்த வேளையில் அதிலிருந்து கனி தோன்றவில்லை என்றால், அம்மரத்தை உடனடியாக வெட்டி வீழ்த்துவதற்குப் பதிலாகப் புதிதாக எருபோட்டு அதைக் கண்காணித்து அதிலிருந்து கனிதோன்றும் என்று இன்னும் ஓர் ஆண்டு பொறுமையோடு காத்திருப்பவர் நம் கடவுள் (காண்க: லூக்கா 13:6-9). என்றாலும் கடவுளின் பொறுமையை நாம் சோதிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

மன்றாட்டு:

இறைவா, எங்கள் வாழ்க்கையில் உம் உடனிருப்பை உணர்ந்து, நற்செயல்கள் என்னும் கனியை ஈந்தளிக்க அருள்தாரும்.